Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வவுனியா மெனிக்பாமில் உள்ள வலயம் 4 ல் சுமார் 3,700 மக்கள் வசிக்கின்றனர். இவர்களை இங்கிருந்து கதிர்காமர் முகாமிற்குச் செல்லுமாறு இராணுவத்தினர் உத்தரவிட்டிருந்தனர்.

இங்குள்ள மக்கள் அங்கு வசதிகள் காணாது என்றும் ஒவ்வொருமுகாமாகத் தாங்கள் மாறுவதற்கு விரும்பவில்லை என்றும் தெரிவித்து தொடர்ந்தும் இங்கேயே தங்கி வந்தனர்.

இந்நிலையில் ஒக்டோபர் முதலாம் திகதியிலிருந்து இந்த வலயத்திற்கு மனிதக் கழிவுகளை அகற்றும் ஊர்திகளை பாதுகாப்புத் தரப்பினர் நிறுத்தி விட்டனர். குப்பை அள்ளும் வண்டிகள்கூட வருவதில்லை.

இதற்கு முன்பு ஊர்திகள் தினமும் வந்து சுத்தம் செய்தன. வாகனங்களை இப்படித் திடீர் என நிறுத்தியது அந்த மக்களைப் பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

3700 க்கும் மேற்பட்ட மக்கள் தங்கியுள்ளதால் நூற்றுக்கும் மேற்பட்ட மலக்குழிகள் நிரம்பி வழிகின்றன. இதனால் மலக்கூடங்களும் பாவிக்கப்பட முடியாமல் உள்ளது. மலக்கூடங்களில் புழு நெளிகின்றது.

மக்கள் சொல்லொணாத் துன்பம் அனுபவித்து வருவதாக மக்கள் முறையிட்டுள்ளனர்.

தற்பொழுது மழை பெய்து வருவதால் கழிவுநீரும் மழைநீரும் சேர்ந்து மக்களின் குடியிருப்புக்குள் செல்வதால் தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவுகிறது.

முன்பு இயங்கி வந்த மருத்துவமனையும் மூடப்பட்டு அதற்குப் பதிலாக நடமாடும் சேவை வழங்கப்பட்டது. இப்பொழுது அதுவும் நிறுத்தப்பட்டு விட்டது.

கதிர்காமர் முகாமில் விறகு, தண்ணீர் போன்றவற்றிற்கத் தட்டுப்பாடு நிலவுவதாலேயே இங்கிருப்பவர்கள் கதிர்காமர் முகாமிற்குச் செல்ல மறுக்கின்றனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

முகாமைவிட்டு வெளியேற மறுத்ததால்தான் இப்படித் தங்களைத் துன்புறுத்துகின்றனர் என்று அங்கிருப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.

இவைகளைத் தீர்ப்பதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்கும்படி அங்குள்ள மக்கள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனைக் கேட்டுள்ளனர்.

தாம் உரியவர்களுடன் கலந்துபேசி விரைந்து நடவடிக்கை எடுப்பதாக சிவசக்தி ஆனந்தன் அவர்களிடம் கூறியுள்ளதாக ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

0 Responses to மெனிக்பாம் மக்கள் தொற்றுநோய் எதிர்நோக்கும் அபாயம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com