ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்திற்கு இலங்கை விடயத்தில் ஆலோசனை கூறுவதற்காக மூவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது மிக வரவேற்க வேண்டிய விடயம். இக் குழுவின் நியமனத்தை ஓர் வேதனையான பிரசவத்திற்கு ஒப்பிடலாம்.இக்குழு தேவையற்றது என, இலங்கை அரசும் அவர்களாது நேசநாடுகளினது மாபெரும் பிரச்சாரத்தின் மத்தியில் பிரசவித்துள்ளது. இக் குழ(ந்தை) ஓர் குறிப்பிட்ட குறுகிய காலத்தில் பல விடயங்கள் பற்றிய அறிக்கையை சமர்ப்பிக்க கடமைப்பட்டுள்ளது.
இவ் ஆலோசனை குழு மிக அவசியமானது என்பதில், ஐ. நா. மனித உரிமை ஆணையாளர் திருமதி நவநீதம்பிள்ளையின் பங்கு மிக அளப்பரியது. அத்துடன் முன்னாள் ஐ. நா. மனித உரிமை ஆணையாளர் திருமதி லூயிஸ் ஆபர், சர்வதேச மன்னிப்பச் சபை – மனித உரிமை கண்காணிப்பகம் போன்ற பல சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள், இவற்றுடன் பல முக்கிய பிரதிநிதிகளின் ஆயராத உழைப்பே இன்று இவ் ஆலோசனைக் குழுவின் உருவாக்கத்திற்கு காரணிகளானவை.
இதேவேளை சர்வதேச ரீதியாக பல நாடுகளில் வாழும் ஏறக்குறைய ஐந்து லட்சம் புலம்பெயர்வாழ் தமிழ் மக்களின் உழைப்பும் இதில் முக்கியமானவையே.
இக்குழுவில் நியமிக்கப்பட்ட இந்தோனேசியாவின் முன்னாள் சட்ட மா அதிபர் மர்சூகி தாரூஸ்மான், தென் ஆபிரிக்காவின் சர்வதேச சட்டத்தரணி திருமதி யஸ்மின் சூக்கா, அமெரிக்காவின் பேராசிரியர் டேவிட் ரட்ணர் ஆகிய மூவரும் சர்வதேச ரீதியாக வேறுபட்ட முக்கிய கடமைகளை செய்து வருபவர்கள். இதில் விசேடமாக திரு மர்சூகி தாரூஸ்மான், இலங்கையினால், 2007ம் ஆண்டு நவம்பர் மாதம் அமைக்கப்பட்ட சர்வதேச நிபுணர் குழுவானா – “The International Group of Eminent Persons – IIGEP”, ஐ.ஐ.ஜி.ஈ.பி என்ற குழுவில் அங்கம் வகித்து, இலங்கை அரசுக்கு சார்பாக அறிக்கை சமர்பிக்க மறுத்த காரணத்தில், அரசுடன் முரண்பட்டு தமது மூக்கை உடைத்துக் கொண்டு, 2008ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் இலங்கையிலிருந்து வெளியேறிய சர்வதேச அங்கத்தவர்களில் இவரும் ஒருவர் ஆவார்.
இதேவேளை அமெரிக்காவின் பேராசிரியர் டேவிட் ரட்ணரினால் வெளியிட்ட “மனித உரிமையும் சர்வதேசச் சட்டங்களும்” என்ற புத்தகத்தில், இலங்கைதீவில் தமிழர்கள் இனரீதியாக புறக்கணிக்கப்படுவதாக முன்பு எழுதியுள்ளதனால், இவர் நிபுணர் குழுவில் இடம் பெறுவதனால், இலங்கை மிக மனம் உடைந்துள்ளது. ஆகையால் இக் குழு நிட்சயம் தமது கடமைகளை சரிவரச் செய்வார்கள்.
ஆனால் இக்குழுவின் இறுதி முடிவுகள், தமிழீழ மக்களை விசேடமாக புலம் பெயர் வாழ் தமிழ் மக்களை திருப்திப்படுத்துமா? என்பது என்றும் கேள்விக்குறியானது. இதற்கு பல காரணங்கள் உண்டு.
இறுதியில் “யானை தன் கையால் தனக்கு மண்ணை அள்ளிக் கொட்டியுள்ளதா”, அல்லது ஊரில் சீட்டு விளையாட்டின் போது கூறுவது போல் “புறக் கம்மாரிசாக” முடியுமா என்பதை இருந்து தான் பார்க்க வேண்டும்.
1. நா. செயலாளரை பொறுத்த வரையில் இக் குழு இலங்கையின் போர்க் குற்றங்களை மட்டுமல்லாது, தமிழீழ விடுதலைப் புலிகளின் போர்க் குற்றங்களையும் விசாரிக்க கடமைப்பட்டுள்ளார்கள். ஆனால் இவ்விடயத்தை புலம்பெயர் நாடுகளில் உள்ள பல தமிழ் ஊடகங்களும், இணையத் தளங்களும் அடக்கி வாசிப்பதனால், இறுதியில் தமிழீழ மக்கள் ஏமாற்றப்பட்டுவிட்டதாக எண்ணவைப்பது மட்டுமல்லாது, தமிழீழ விடுதலைப்புலிகளின் மிஞ்சிய எஞ்சியவையும் இல்லாது போவதற்கான சந்தர்ப்பமே கூடுதலாக காணப்படுகின்றன என்பதை நாம் முன்கூட்டியே அறிந்திருக்க வேண்டும்;!
மிகச் சுருக்கமாக கூறுவதனால் இது தமிழீழ மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாக நாம் கொள்வது மிகத் தவறு. கடந்த காலங்களில் இதுபற்றிய விடங்களை பல சந்தர்ப்பங்களில் பல செயற்பாட்டாளர்களுக்கும், நேர்காணல்களில் எடுத்து விளக்கியிருந்தேன்.
இவ் ஆணைக்குழுவின் அறிக்கைகள் மூலம் தமிழீழம் பிறக்குமென்பதும் பகற்கனவே. ஆகையால் இவ் ஆணைக்குழு பற்றி பெரிதாக கனவு காணாது, பொறுத்திருந்து, இலங்கையில் போர்க் குற்றத்தில் ஈடுபட்டவர்களையும், தமிழீழ விடுதலைப் புலிகளின் இறுதிக்காலச் செயற்படுகளையும் இக் குழு எப்படியாக பார்க்கப் போகிறது என்பதே தற்போதைய முக்கியமான விடயம். நாம் இலங்கை பற்றிய அறிக்கைகளை கொடுக்கும் அதேவேளை, ஏற்கனவே ஐ. நா. அமைப்புக்கள் சில, தமிழீழ விடுதலைப் புலிகள் பற்றி பல அறிக்கைகளை இக் குழுவிற்கு கொடுத்துள்ளார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
ச. வி. கிருபாகரன்
பொதுச் செயலாளர்
தமிழர் மனிதர் உரிமைகள் மையம்
பிரான்ஸ்
28 யூன்2010



0 Responses to ஐ.நா. ஆலோசனைக் குழுவின் அறிக்கை, “புறக் கம்மாரிசாக” முடியுமா? : ச. வி. கிருபாகரன்