இலங்கை அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட தமிழினப் படுகொலைகள் தொடர்பாக நேரில் சாட்சியமளிக்கத் தயார் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார்.இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்கள் தொடர்பான சாட்சியங்கள் மற்றும் ஆவணங்கள் தம்வசம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மட்டக்களப்பில் மைலந்தனை, கொக்கட்டிச்சோலை, வந்தாறுமூலைப் பல்கலைக்கழகம், அம்பிளாந்துறை ஆகிய இடங்களிலம் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் மற்றும் அம்பாறையில் சத்துருக்கொண்டான், வீரமுனை ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் என்பன குறித்தும் தான் சாட்சியங்களைத் திரட்டியிருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு சமூகசேவையாளனாக, அரசாங்க ஊழியனாக, ஊடகவியலாளனாக, மக்கள் பிரதிநிதியாக இருந்து தான் அவ்வகையான ஆதாரங்களைத் திரட்டி வைத்திருப்பதாக குறிப்பிடுகின்றார்.
அத்துடன் டக்ளஸ் தேவானந்தா மற்றும் கருணா அம்மான் ஆகிய அமைச்சர்களின் தலைமையிலான ஆயுதக்குழுக்களின் அச்சுறுத்தல் காரணமாக தான் நாட்டைவிட்டும் வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
அவ்வாறான நிலையில் ஐ.நா. நிபுணர் குழுவின் வரையறைக்கேற்ப மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தனது முறைப்பாட்டை அனுப்ப முடியாதுள்ளதால் தான் நேரில் சாட்சியமளிக்க தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



0 Responses to ஈழத் தமிழர்களின் படுகொலை தொடர்பாக நிபுணர் குழு முன் சாட்சியமளிக்கத் தயார்: ஜெயா