நியூயோர்க் நகரில் அமைந்துள்ள ஐ.நா. அலுவலகத்தை நோக்கி அமெரிக்காவில் உள்ள புலம்பெயர் தமிழர்கள், முள்ளிவாய்க்கால் அவலத்தின் இரண்டாவது நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்பதற்காக படையெடுத்துள்ளனர்.முள்ளிவாய்க்கால் அவலத்தின் இரண்டாவது நினைவேந்தல் நிகழ்வாகவும், ஐக்கிய நாடுகள் சபையை யுத்தக் குற்ற விசாரணையை முன்னெடுக்கக் கோரும் ஒரு சரித்திரம் வாய்ந்த நிகழ்வாக இன்றைய நிகழ்வு மாறவிருக்கிறது.
அமெரிக்காவின் பல மாகாணங்களிலிருந்தும் வருகை தந்துள்ள தமிழர்களோடு இந்த நிகழ்வில் பங்கேற்கவென சுமார் ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழர்கள் கனடாவிலிருந்து அமெரிக்காவின் நியூயோர்க்கை இதுவரை வந்தடைந்துள்ளனர்.
புலம்பெயர்ந்த தமிழர்களின் அண்மைய வரலாற்றிலே வட அமெரிக்காவின் சகல தமிழர்கள் அமைப்புக்களும் ஓரணியாக நின்று இந்த நிகழ்வை முன்னெடுக்கின்றன.
நாடுகடந்த அரசு, அமெரிக்க தமிழ் அரசியல் விவகார அமைப்பு, கனடியத் தமிழ்க் காங்கிரஸ், கனடிய தமிழ் தேசிய மக்களவை, இலங்கைத் தமிழர் சங்கம், நாம் தமிழர் இயக்கம் - வட அமெரிக்கா, உலகத் தமிழ் அமைப்பு அமெரிக்கா, ஒபாமாவிற்கான தமிழர்கள் அமைப்பு, இனப்படுகொலைக்கெதிரான தமிழர் அமைப்பு, திராவிடர் கழகம், தமிழ்ப்படைப்பாளிகள் கழகம், கனடாத் தமிழர் இணையம் என சகல அமைப்புகளும் ஒரே குரலில் தமிழர்களின் வேதனைகளை உலகிற்கு ஓங்கிச் சொல்ல முடிவெடுத்துள்ளன.
இந்த நிகழ்விற்காக மக்களை அழைக்கும் வகையில் ரொறன்ரோத் தமிழர்கள் வர்த்தக நிலையங்களில் ஒட்டப்பட்டிருந்த துண்டுப் பிரசுரங்களையும், பதாதைகளையும் ஒரு குழு அகற்றியதோடு இதனை யுத்தக் குற்றநாளாக கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும், நாடுகடந்த அரசின் செயற்பாடுகளை முடக்க முயற்சித்ததாகவும் ஆனால் மக்கள் அதற்குச் செவி சாய்க்கவில்லை என்றும், ரொறன்றோவிலிருந்து வருகை தந்த பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்.



0 Responses to ஐ.நா.வை நோக்கி வட அமெரிக்கத் தமிழர்கள்!