சட்டசபையில் முதல் அமைச்சர் ஜெயலலிதா இலங்கை தமிழர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று தீர்மானத்தை கொண்டு வந்தார். இதன் மீதான விவாதத்தில் அனைத்து கட்சி உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
தி.மு.க. சார்பில் துரைமுருகன் பேசினார். அவரும் இந்த தீர்மானத்தை வரவேற்பதாக கூறினார். அவரை தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் பேசும் போது தி.மு.க. தலைவர் கருணாநிதி பற்றியும், தி.மு.க. ஆட்சியைப் பற்றியும் சில கருத்துக்களை கூறினார். இதற்கு தி.மு.க. உறுப்பினர்கள் எழுந்து நின்று எதிர்ப்பு குரல் கொடுத்தனர்.
விஜயகாந்த் கருத்துக்கு பதில் அளிக்க வாய்ப்பு தர வேண்டும் என்று தி.மு.க. உறுப்பினர் துரைமுருகன், சபாநாயகர் ஜெயக்குமாரிடம் கோரிக்கை வைத்தார். விஜயகாந்த் பேசி முடிந்த பிறகும் துரைமுருகனுக்கு பதில் அளிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.
இதையடுத்து துரைமுருகன் தலைமையில் தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
சட்டசபையில் இருந்து வெளியேறிய பிறகு துரை முருகன் கூறியதாவது:
தமிழர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடும் தீர்மானத்தை முதல் அமைச்சர் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தை ஆதரிப்பது அனைவரின் கடமை. நாங்களும் ஆதரிக்கிறோம் என்று பேசினேன்.
சிலர் தி.மு.க.வை மறைமுகமாக தாக்கி பேசினார்கள். நான் எல்லோரும் ஒற்றுமையாக இருந்து தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். தனிப்பட்ட தாக்குதலை வெளியே வைத்துக் கொள்ளலாம் என்று கூறினேன். ஆனால் எதிர்க்கட்சி தலைவர் பேச தொடங்கிய உடனே தி.மு.க. தலைவர் கருணாநிதியையும், தி.மு.க.வையும் சரமாரியாக தாக்கி பேசினார்.
எனக்கு பதில் சொல்ல தெரியும். விளக்கம் அளிக்க அனுமதி வேண்டும் என்று கேட்டேன். எதிர்க்கட்சி தலைவர் பேசி முடித்த பிறகு என்னை பேச அனுமதிப்பதாக கூறினார். ஆனால் அவர் பேசி முடிந்த பிறகும் அனுமதி தரவில்லை. எனவே நாங்கள் வெளிநடப்பு செய்தோம். ஆனால் நாங்கள் இந்த தீர்மானத்தை ஆதரித்தோம் என்றார்.
இலங்கை மீது பொருளாதாரத் தடை: தமிழக சட்டசபையில் தீர்மானம்: திமுக ஆதரவு
பதிந்தவர்:
தம்பியன்
08 June 2011



0 Responses to இலங்கை மீது பொருளாதாரத் தடை: தமிழக சட்டசபையில் தீர்மானம்: திமுக ஆதரவு