இலங்கை அரசின் மிலேச்சத்தனமான செயலுக்கு வக்காலத்து வாங்குகின்றார் அமைச்சர் டக்ளஸ். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் இலங்கையில் தமிழ் மக்கள் கொல்லப்படவில்லை என்று சாட்சி கூறுகின்றார். இவர் உடம்பில் ஓடுவது தமிழ் இரத்தம் தானா என்பதும் சந்தேகமாக இருக்கின்றது. இவ்வாறு பா.உ. மாவை சேனாதிராசா சாடியுள்ளார்.
நேற்று முன்தினம் சனிக்கிழமை இடம்பெற்ற நாவாந்துறை மக்களுடனான சந்திப்பின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாவாந்துறை மக்களுடனான இந்தச் சந்திப்பின் போது நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், ஈ. சரவணபவன் ஆகியோர் பிரசன்னமாகி இருந்தனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரான மாவை சேனாதிராசா மேலும் தெரிவிக்கையில்,
தமிழ்ப் பெண்களைக் கேவலப்படுத்தி தமிழர்கள் வாழும் பிரதேசங்களை உல்லாச புரியாக்க முனைகிறது இலங்கை இராணுவம்.
போரினால் சிதைந்து போயுள்ள வடபகுதியையும், அவல நிலையில் வாழும் தமிழ் மக்களையும் காட்சிப் பொருளாக்கி இங்கே தென்பகுதிச் சிங்களவர்களை அழைத்து வந்து கண்காட்சி நடத்துகின்றது அரசு.
கிறீஸ்பூதம் என்று ஒன்று கிடையாது. இந்த இராணுவத்தினர் தான் கிறீஸ் பூதங்களாக நடமாடுகின்றனர். இவர்கள் குறிப்பாகத் தமிழ்ப் பெண்களின் மீதே குறிவைத்து சேட்டைகளில் ஈடுபட முனைகின்றனர்.
இவ்வாறான செயல்களை எவரும் பொறுக்க மாட்டார்கள், பொங்கி எழுவார்கள் என்ற நோக்குடனேயே இப்படிக் கேவலமான செயல்களில் ஈடுபட்டுள்ளனர் இராணுவத்தினர். இப்படித் தரங்கெட்ட முறையில் தமிழ் மக்களின் உணர்வுகளைத் தூண்டிவிட்டு மீண்டும் ஒரு இன அழிப்புக்கே திட்டமிடுகின்றனர்.
இந்தக் கிறீஸ் பூதங்கள் ஏன் தென்பகுதிச் சிங்களப் பெண்களைத் தாக்கவில்லை. தீவகப்பகுதிக்குள் போகவில்லை.
சாத்தான் வேதம் ஓதுவது போல அரசின் மிலேச்சத்தனமான செயலுக்கு வக்காலத்து வாங்குகின்றார் அமைச்சர் டக்ளஸ். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் இலங்கையில் தமிழ் மக்கள் கொல்லப்படவில்லை என்று சாட்சி கூறுகின்றார். இவர் உடம்பில் ஓடுவது தமிழ் இரத்தம் தானா என்பதும் சந்தேகமாக இருக்கின்றது.
நாம் துன்பப்படுவதற்கு ஒன்றும் இல்லை. எல்லாத் துன்பங்களையும் அனுபவித்து விட்டோம். மரணத்தின் எல்லைக்கே சென்று வந்துவிட்டோம்.
எவன் ஒருவன் மிக அதிகமாகத் துன்பப்படுகின்றானோ அவன் அதிக விரைவில் அதே அளவு நன்மைகளை அடைவான் என்பது வேதவாக்கு. எதையும் தாங்கும் இதயம் எமக்கு உண்டு. வெற்றி நிச்சயம் என்று கூறினார் மாவை சேனாதிராசா.



0 Responses to டக்ளஸ் உடம்பில் ஓடுவது தமிழ் இரத்தம் தானா? - மாவை