பலாலி ஆசிரியர் கலாசாலையில் பாலியல் முறைகேடுகள் இடம்பெற்று வருவதாக யாழ் அரசாங்க அதிபர் தெரிவித்த கருத்து வேதனையளிக்கிறது என பலாலி ஆசிரியர் கலாசாலையின் பீடாதிபதி எம். இக்னேஷியஸ் தெரிவித்துள்ளார்.
பலாலி ஆசிரியர் கலாசாலையில் பாலியல் முறைகேடுகள் இடம்பெற்றுவருவதாகவும் இது தொடர்பில் தாம் நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் யாழ். மாவட்ட அரச அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ள கருத்துக்கு பதிலளிக்கும்போது பீடாதிபதி எம். இக்னேஷியஸ் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
"அரசாங்க அதிபர் தான் ஒரு அரச அதிபர் என்ற சிந்தனை அற்ற தன்மையில் பொறுப்புணர்ச்சியற்ற வகையில் இவ்வாறான அபாண்டமான குற்றச்சாட்டினை தெரிவித்திருப்பதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. மற்றொருவருக்கு எந்தளவிற்கு கேவலப்படுத்த முடியுமோ? எந்தளவிற்கு மரணதண்டனைக்கு நிகரான அவமானத்தினை ஏற்படுத்த முடியுமோ, அந்தளவிற்கு அரச அதிபர் நடந்து கொண்டிருக்கின்றார். யாரோ தனக்கு பிடித்த ஒருவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் அவர் தகவல் வெளியிட்டிருக்கின்றார்.
அவரால் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டு உண்மையா ?, பொய்யா? என்பது குறித்து எங்களிடம் விசாரணை நடத்தியிருக்க வேண்டும். அதன் பின்னரே அது குறித்து ஊடகங்களுக்கு வெளிப்படுத்தியிருக்க வேண்டும். குறிப்பாக இந்த விடயம் கல்வியுடன் தொடர்புபட்டிருப்பதால் இந்த விடயத்தினை இரகசியமாகக் கையாண்டிருக்க வேண்டும்.
அறிவற்ற ரீதியில் யாழ். அரச அதிபர் இவ்வாறு நடந்து கொண்டிருப்பது மிகுந்த வேதனைக்குரியது, கவலைக்குரியது கண்டனத்துக்குரியது. இந்த நிலையில் எங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள அபாண்டமான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் யாழ். மாவட்ட அரச அதிபர் கண்டிப்பாக பதில் சொல்லியே ஆக வேண்டும் என்பதற்கும் அப்பால் இந்த விடயம் தொடர்பில் அவர் நிரூபித்துக் காட்ட வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்.
அரச அதிபரால் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் அனைத்தும் அப்பட்டமான பொய்களாகும். எமது கல்விச்சாலையில் இருக்கக் கூடிய அனைவரும் நல்லவர்கள். எமது கலாசாலையினை நாங்கள் ஒரு ஆலயமாகவே பார்க்கின்றோம். உலகிலேயே ஆசிரியர்கள் கடவுளர்களுக்கு சமமானவர்களாகவே பார்க்கப்படுகின்றார்கள். அரச அதிபரின் பொறுப்பற்ற இந்த நடவடிக்கையால் பெருமளவானவர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். எமது கலாசாலையில் கல்வி பயில்கின்ற ஆசிரிய மாணவிகள் கண்ணீர்விட்டு அழுகின்றனர்.
குடும்பமான பெண் ஆசிரியர்கள் தமக்கு இதனால் குடும்பங்களில் நெருக்கடி நிலை ஏற்படுவதாகவும், திருமணமாகாத பெண் ஆசிரிய மாணவிகள் எதிர்காலத்தில் தமது திருமண வாழ்வு பாதிக்கப்படும் அபாய நிலை ஏற்படும் என்றும் எந்த முகத்துடன் பாடசாலைகளுக்குச் செல்வது? என்றெல்லாம் கேள்வி கேட்கின்றார்கள். இவற்றுக்கெல்லாம் அரச அதிபர் பதில் சொல்லும்வரையில் தாம் போராடவுள்ளோம்" என்றார் அவர்.



0 Responses to இமெல்டாவின் பாலியல் குற்றச்சாட்டு: பீடாதிபதி போர்கொடி!