காவிரி பிரச்னையில் முதல்வர் ஜெயலலிதாவின் கோரிக்கையை திமுக தலைவர் கருணாநிதி திசை திருப்ப முயற்சிக்கிறார் என அவருக்கு மக்கள் உரிமை கூட்டமைப்பின் அமைப்பாளர் பழ.நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பினை மத்திய அரசு இதழில் அறிவிக்கையாக வெளியிட வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள கோரிக்கைக்கு தமிழகத்தில் உள்ள சகல கட்சிகளும் ஆதரவு தந்து துணை நிற்க வேண்டும். ஆனால், திமுக தலைவர் கருணாநிதி இக் கோரிக்கையை திசை திருப்ப முயற்சி செய்கிறார்.
2007ஆம் ஆண்டில் நடுவர் மன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பு இன்றுவரை அறிவிக்கையாக வெளியிடப்படவில்லை. ஏற்கனவே 1991ஆம் ஆண்டில் அளிக்கப்பட்ட நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பினை உடனடியாக மத்திய அரசு இதழில் வெளியிட வேண்டும் என தமிழக அரசு வற்புறுத்தியதை செயல்படுத்த மத்திய அரசு முன்வரவில்லை. உச்ச நீதிமன்றம் தலையிட்டு இதை உடனடியாக அறிவிக்கையாக வெளியிட வேண்டும் என ஆணையிட்ட பிறகும் கூட இந்திய அரசு அதை செய்யவில்லை.
நடுவர் மன்றத்தின் தீர்ப்பினை அரசு இதழில் அறிவிக்கையாக வெளியிடப்படாவிட்டால் அந்த தீர்ப்பு ஒரு போதும் யாரையும் கட்டுப்படுத்தாது.
மத்திய அரசின் ஒரு அங்கமாக விளங்கும் திமுக மத்திய அரசை வற்புறுத்தி தமிழகத்தின் நியாயமான கோரிக்கையை ஏற்க செய்யாமல் திசை திருப்பும் நடவடிக்கையில் ஈடுபடுவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இவ்வாறு பழ.நெடுமாறன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.



0 Responses to கருணாநிதி திசை திருப்ப முயற்சி: பழ.நெடுமாறன் கண்டனம்