ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்று தண்டனையைக் குறைக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டு நடந்து கொண்டிருந்த வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்றவர்கள் முருகன், சாந்தன், பேரறிவாளன். இவர்கள் கருணை மனுவை கடந்த வருடம் ஜனாதிபதி தள்ளுபடி செய்தார்.
எனவே இதை எதிர்த்து 3 பேரும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். கடந்த 20 ஆண்டுகளாக தாங்கள் சிறையில் இருப்பதால் தூக்குத் தண்டனையை குறைக்க வேண்டும் என மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை நீதிபதிகள் நாகப்பன், சத்திய நாராயணன் ஆகியோர் விசாரித்து 3 பேரையும் தூக்கில் போட இடைக்கால தடை விதித்தனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியை சார்ந்த வெங்கடேஷ் என்பவர் இந்த மனுவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற வேண்டும் என்றும், மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கூடாது என்றும் தனது மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வரும் இந்த மனுவை விசாரிக்க முடிவு செய்தது. அதன்படி, இந்த வழக்கு சிங்வி தலைமையிலான நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் முன் ஜூலை 10-ந்தேதி விசாரணைக்கு வருகிறது.
மூவரின் தூக்குத் தண்டனையை குறைக்க கூடாது என்றும், இந்த வழக்கு நடத்தும் சூழலுக்கு தமிழகம் ஏற்றதல்ல. இதனால் தமிழகத்தில் இல்லாமல் வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் காங்., கட்சியில் மூப்பனார் பேரவையை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். இறுதி முடிவை இனி சுப்ரீம் கோர்ட்தான் அறிவிக்கும்.



0 Responses to மூவர் தூக்கு வழக்கு | உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றம்