புத்தனையே வெட்கித் தலை குனிய வைக்கும் வெட்கம் கெட்ட அரசியல் செய்யும் ஹெல உறுமய, வெட்கத்தை பற்றி பேசுவது வேடிக்கையாகவுள்ளது என கணேசன் ஹெல உறுமயவிற்கு பதிலடி கொடுத்துள்ளார் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன்.
நாலு பேருக்கு நல்லது நடக்கும் என்றால் நாளை ஹெல உறுமயவுடனேயே பேச்சு வார்த்தை நடத்த தான் தயாராகவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சப்ரகமுவ மாகாணத்தில் பொதுப் பட்டியலில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் போட்டி இடுவதை எதிர்த்து அதை வெட்கம் கெட்ட அரசியல் என கருத்து தெரிவித்த ஜாதிக ஹெல உறுமய கட்சிக்கு பதில் அளிக்கும் வகையில் மனோ கணேசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் இவ்விடயம் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது,
சப்ரகமுவ மாகாணத்தில் தமிழ் வாக்குகள் சிதறடிக்கப்படுவதை தடுத்து நிறுத்தி, இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களில் தமிழ் மக்களின் ஜனநாயக பிரதிநிதித்துவங்களை உறுதிப்படுத்த நாம் எடுத்துள்ள முயற்சியை ‘வெட்கக் கேடான அரசியல்’ என்று கூக்குரல் இடுகிறது ஜாதிக ஹெல உறுமய.
இந்நாட்டில் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களுக்கு இடையிலான உண்மையான இன ஒற்றுமைக்கு தடையாகவும், ஐக்கிய இலங்கைக்குள் அதிகார பரவலாக்கலுக்கு எதிராகவும், இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மத ஸ்தலங்களை அகற்றும் தேசிய இயக்கத்தை நடத்தும் கட்சி, இந்த இன-மதவாத கட்சியாகும்.
இத்தகைய ‘வெட்கங்கெட்ட கொலைவெறி’ அரசியல் கொள்கைகளை முன்னெடுக்கும் ஜாதிக ஹெல உறுமய, தியானத்தில் இருந்து எழுந்து வந்து எம்மை குற்றம் சாட்டுவது, கை கொட்டி சிரிக்க வேண்டிய வேடிக்கை ஆகும்.
சப்ரகமுவ மாகாணத்தில், அரசியல் அனாதைகளாக வாழும் அப்பாவி தமிழ் மக்களுக்கு உரிய நியாயமான குரலை உறுதி படுத்த வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது. அதனால்தான், சப்ரகமுவ சிவில் சமூக பிரதிநிதிகளின் வேண்டுகோளை ஏற்று பல்வேறு விட்டு கொடுப்புகளின் அடிப்படையில், பொது பட்டியலில் நாம் போட்டி இடுகிறோம்.
நீண்ட காலமாக ஒதுக்கப்பட்ட மாவட்டங்களாக இருக்கும் இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்ட தமிழ் மக்கள், குறிப்பாக அப்பாவி தோட்ட தொழிலாளர்கள் சொல்லொணா துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள். அவர்களது பாதுகாப்பு, கல்வி, தொழிலுரிமை ஆகிய பல்வேறு பிரச்சினைகள் பற்றி கேட்பாரற்ற நிலைமை நிலவுகிறது.
சப்ரகமுவவில் மிக குறைந்தளவே தமிழ் வாக்குகள் உள்ளன. எமது வாக்குளை ஒன்று திரட்டினால் மட்டுமே எமது பிரதிநிதித்துவம் அங்கு உறுதி படுத்தப்பட முடியும். கடந்த காலங்களில் நாம் பிரிந்து நின்று வெவ்வேறு அணிகளாக போட்டியிட்ட போது எமது மக்களின் வாக்குகள் சிதறின. நம்மில் எவரும் வெற்றி பெறவில்லை.
ஆனால் தமிழர் வெற்றி பெறவில்லை என்பதற்காக மாகாணசபையில் அங்கத்தவர் எண்ணிக்கை குறைந்து விடுவதில்லை. உண்மையில் நமது பிரதிநிதித்துவ சந்தர்ப்பத்தையும் அபகரித்துக்கொண்டு, பெரும்பான்மை இன வேட்பாளர்கள் வெற்றி பெற்று மாகாணசபையில் மந்திரிகளாக அமர்ந்து விடுகிறார்கள். இதுதான் நேற்றுவரை நடைமுறை.
இம்முறை இந்த நடைமுறையை மாற்றி, நமது நியாமான பிரதிநிதித்துவத்தை ஜனநாயகரீதியாக பெற நாம் முயல்கிறோம். தமிழ் வாக்குகள் எடுப்பார் கைப்பிள்ளையாக சிதறுவதை தடுக்க முயல்கிறோம். இதுதான் உண்மையில் இன்று ஜாதிக ஹெல உறுமயவிற்கு வலிக்கிறது. அது அவர்களது இனவாத வலி.
ஆனால் எங்கள் மக்கள் கேட்பாரற்று அனாதைகளாக துன்பப்படும்போதுதான் எனக்கு வலிக்கிறது. அது எனது இனவுணர்வு வலி. அதனால்தான், கொழும்பிலும், கிளிநொச்சியிலும், யாழ்ப்பாணத்திலும், நுவரெலியாவிலும், இரத்தினபுரியிலும் என எந்த ஒரு பேதமும் இல்லாமல் நாடு முழுக்கவும் தமிழ் மக்களுக்காக எங்கள் குரல் ஒலிக்கின்றது.
அரசாங்கத்தை கடுமையாக விமர்சனம் செய்யும் மனோ கணேசன் என்று, என்னை பற்றி ஹெல உறுமய கூறுவது முற்றிலும் உண்மை. எமது கட்சி, அரசின் பங்காளி கட்சிகளுடன் இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளது தொடர்பில் கேள்வி எழுப்பும் சில நபர்கள் இதை புரிந்துகொள்ள வேண்டும்.
கீரியும், பாம்புமான இரு துருவங்கள் மனோ கணேசனும், தொண்டமானும் எப்படி இணைய முடியும் என, ஹெல உறுமய கேள்வி எழுப்பி உள்ளது. மக்களுக்கு நன்மை நடக்க வேண்டும் என்றால் எதிர்காலத்தில் புலியும், சிங்கமும் கூட இணையும் காலம் வரலாம்.
இதை புரிந்துகொண்டு, மதவாத, இனவாத, அடிப்படைவாத அரசியல் செய்யும் கட்சிகள், என்னை பார்த்து விமர்சனம் செய்து நேரத்தை வீணடிப்பதை நிறுத்த வேண்டும். ஏனென்றால், விமர்சனங்களை கண்டு ஓடி ஒளியும் கோழை அல்ல, நான். நாலு பேருக்கு நல்லது நடக்கும் நாளை ஹெல உறுமயவுடனேயே பேச்சு வார்த்தை நடத்த நான் தயார்.
மனோ கணேசனுக்கும் வெட்கமில்லை; ஆறுமுகன் தொண்டமானுக்கும் வெட்கமில்லை; எம்முடன் இந்த தேர்தல் தொடர்பில் இணக்கப்பாட்டிற்கு வந்ததால் கபினட் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானை இணைத்துக்கொண்டுள்ள அரசாங்கத்திற்கும் வெட்கமில்லை என்றும், ஜாதிக ஹெல உறுமய ஊடகங்களிடம் ஒப்பாரி வைத்துள்ளது. உண்மையில் அவர்கள், தமது அரசாங்க தலைவரான ஜனாதிபதியிடம்தான் இந்த கேள்வியை எழுப்ப வேண்டும். என்றுள்ளார்.



0 Responses to புத்தனையே தலை குனிய வைக்கும் அரசியல்