Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் அமையும் அரசாங்கத்தோடு பேசி தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்கு இறுதித் தீர்வினைக் காண முடியும் என்கிற நம்பிக்கை தமக்குள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

வரும் ஓகஸ்ட் 17 ஆம் திகதி நடைபெறவிருக்கும் தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 20 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டால் ஏனைய இனத்தவர்களும், ஆட்சியாளர்களும் சர்வதேசமும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வொன்றைப் பெற்றுக் கொள்ளமுடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

திருகோணமலை மாவட்டம் சேருவில தேர்தல் தொகுதியில் இலங்கை தமிழரசு கட்சியின் தொகுதிக் கிளை கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “நாம் அதிகப்படியான ஆசனங்களான 20 பாராளுமன்ற உறுப்பினர்களை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பெறுவதன் ஊடாக இனப்பிரச்சினைத் தீர்வுக்கு இன்றியமையாத பேரம்பேசும் சக்தியைப் பெற முடியும். இதனை நாம் 2016ஆம் ஆண்டு 6ஆம் மாதத்திற்குள் நிறைவு செய்து கொண்டு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பயணத்தை நிறைவு செய்ய தயாராகவுள்ளோம்.

தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுத பலத்தை பார்த்து இலங்கை அரசாங்கம் எம்மை பலமுறை பேச்சுவார்த்தைக்கு அழைத்ததுடன் பல தீர்வுகளை முன்வைத்தனர். எனினும் கடந்த காலங்களில் கிடைத்த சந்தர்ப்பங்களை நாம் தவறவிட்டுள்ளோம். அந்த இராணுவ பலத்தை நாம் ஜனநாயக ரீதியில் அரசியல் பலமாகக் காட்டவேண்டிய தருணம் தற்பொழுது தோன்றியுள்ளது.

இந்த அரசாங்கத்திடம் நாம் மிகவும் நிதானமாக நடந்து கொள்கின்றோம். தற்போது ஜனாதிபதியாகவுள்ள மைத்திரிபால சிறிசேனவை நான் நீண்ட காலம் அறிவேன். 1994ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தமிழ் மக்களுக்கான தீர்வுப் பொதியொன்றைக் கொண்டுவந்தபோது அவருக்குப் பக்க பலமாக இருந்தவர். தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வினை வழங்க வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டவர்.” என்றுள்ளார்.

0 Responses to பொதுத் தேர்தலின் பின் தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்கு இறுதித் தீர்வு: சம்பந்தன் நம்பிக்கை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com