Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ழைக்காலம் தொடங்கும் முன்பு இலங்கை முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங்கை முதல் அமைச்சர் கருணாநிதி அனைத்துக் கட்சியினருடன் சென்று வலியுறுத்த வேண்டும் என நாம் அமைப்பு கோரியுள்ளது.

இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய, நாம் என்ற இளைஞர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பாதிரியார் ம.ஜெகத் கஸ்பர்,

இலங்கையில் செப்டம்பர் மாத இறுதியில் மழைக்காலம் தொடங்கிவிடும். அதற்கு முன்பாக அங்கு மழைக்காலத்தை தாங்கும் கட்டுமான வசதிகளோ, மருத்துவ ஏற்பாடுகளோ இல்லாத முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் 31/2 லட்சம் ஈழத்தமிழர்கள் விடுவிக்கப்பட்டாக வேண்டும். இல்லாவிட்டால் மழைக்காலத்தில் அந்த முகாம்களில் உள்ள பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் இறப்பார்கள் என்று ஐக்கிய நாடுகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

இலங்கை அதிபர் ராஜபக்சேவின் தூதுவர்கள் போல செயல்படும் ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன், அவரது செயலர் விஜய் நம்பியார் ஆகியோர் அந்த அறிக்கையை இருட்டடிப்பு செய்து வருவதாக செய்திகள் கிடைத்துள்ளன. எனவே, மழைக்காலம் தொடங்கும் முன்பு முகாம்களில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங்கை முதல் அமைச்சர் கருணாநிதி அனைத்து அரசியல் கட்சியினருடன் சென்று வலியுறுத்த வேண்டும்.

இந்த பிரச்சினையில் தமிழக அரசியல் கட்சிகள், தலைவர்கள், தமிழ் அமைப்புகள் ஒரு கருத்துடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று நாம்' அமைப்பு கேட்டுக்கொள்கிறது. ஏற்கனவே இதுகுறித்து பிரதமருக்கு அக்கறையுடன் கடிதம் எழுதிய முதல் அமைச்சர் கருணாநிதிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

நிராயுதபாணிகளான தமிழ் இளைஞர்கள் நிர்வாணமாக்கப்பட்டு கைகளும், கால்களும் கட்டப்பட்ட நிலையில் இலங்கை ராணுவத்தினரால் தலையில் சுட்டுக் கொல்லப்படும் வீடியோ பட ஆவணங்கள் உண்மையானவைதான் என்று தெரியவந்துள்ளது. இலங்கையில் இருதரப்பினர் மீதான யுத்த குற்றங்கள் பற்றி சர்வதேச விசாரணை நடத்த வேண்டும். ஈழத்தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் இந்திய வெளியுறவு கொள்கையை உருவாக்குவதற்கு தமிழக அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டும்.

இலங்கையில் திறந்தவெளி முகாம்களின் நிலையை நேரில் கண்டு வருவதற்காக அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழுவை மத்திய அரசு அனுப்ப வேண்டும் என்று நாம்' அமைப்பு சார்பில் கேட்டுக் கொள்கிறோம் என்றார்.

நன்றி நக்கீரன்.

0 Responses to முகாம்களில் உள்ள மக்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு கலைஞருக்கு ஜெகத் கஸ்பர் கோரிக்கை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com