கிழக்கு மாகாணசபையின் பொதுச் செயலாளராக கடமையாற்றிய 60 வயதான பாலசிங்கம் என்பவரின் பதவிக் காலத்தை நீடிப்பதற்கு ஜனாதிபதி எடுத்தத் தீர்மானத்திற்கு முதலமைச்சர் சந்திரகாந்தன் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
13 ஆவது திருத்தச் சட்ட மூலத்தின் அடிப்படையில் பொதுச் செயலாளரின் நியமனம் தொடர்பில் முதலமைச்சரின் கருத்து கோரப்பட வேண்டும் என்ற போதிலும், பாலசிங்கம் விடயத்தில் இந்த விதிமுறைப் பேணப்படவில்லை என முதலமைச்சர் சந்திரகாந்தன் விசனம் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
மாகாணசபை விதிகளுக்கு புறம்பான வகையில் செயற்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சந்திரகாந்தன் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கிழக்கு மாகாண சபையின் பொதுச் செயலாளராக பணியாற்றி வரும் பாலசிங்கம், மாகாண ஆளுனருக்கு சார்பாக செயற்பட்டு வருவதாக சந்திரகாந்தன் குற்றம் சுமத்தியுள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுனருக்கும், முதலமைச்சருக்கும் இடையில் நீண்ட காலமாக மனக் கசப்பு நிலை காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், தேச நிர்மாணண அமைச்சர் முரளிதரனிற்கு அளிக்கப்படும் சலுகைகள் சந்திரகாந்தனுக்கு வழங்கப்படுவதில்லை என்பது தொடர்பிலும் ஓர் அதிருப்தியான நிலை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் நிலவி வருவதாக தகவல் அறிந்த வட்டாரம் சுட்டிக்காட்டியுள்ளது.



0 Responses to ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு;சந்திரகாந்தன்