இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவை இனக்குற்றவாளியாக ஐக்கிய நாடுகள் சபை அறிவிக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி கூறினார்.
அரியலூரில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்,
ஐக்கிய நாடுகள் சபை குழு வெளியிட்ட அறிக்கையில இலங்கை அதிபரை மட்டும் போர்க்குற்றவாளியாகக் கூறவில்லை. இருதரப்பையும் குற்றம் சாட்டிதான் அவர்கள் அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீது ஐக்கிய நாடுகள் சபை போர்க்குற்றம் சாட்டி அறிக்கை வெளியிட்டிருப்பதை ஐக்கிய நாடுகள் சபை திரும்பப் பெற வேண்டும். விடுதலைப்புலிகள் இயக்கம் மக்களுக்காக, மக்களின் விடுதலைக்காகப் போராடிய இயக்கமாகும்.
ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள சிலர் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
அவரை போர்க்குற்றவாளியாக அறிவிக்கக் கூடாது. லட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபக்சேவை இனக் குற்றவாளியாக அறிவித்து, சர்வதேச நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி அவருக்குரியதண்டனையை பெற்றுத் தருவதற்குரிய நடவடிக்கையை ஐக்கிய நாடுகள் சபை மேற்கொள்ள வேண்டும்.
நாடு கடந்த தமிழீழ அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், தமிழீழ விடுதலைக்கு ஐக்கிய நாடுகள் சபை உதவ வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் விரைவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் 10 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கும் இயக்கம் தொடங்கப்படும் என்றார்.
ராஜபக்சேவை இனக்குற்றவாளியாக அறிவித்து தண்டிக்க வேண்டும்: திருமாவளவன்
பதிந்தவர்:
ஈழப்பிரியா
19 June 2011



0 Responses to ராஜபக்சேவை இனக்குற்றவாளியாக அறிவித்து தண்டிக்க வேண்டும்: திருமாவளவன்