இலங்கை தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணைப் பொறிமுறையொன்றின் அவசியத்தினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்சியாக வலியுறுத்தி வரும் நிலையில், நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமைச் சபைக் கூட்டத் தொடரில், தமிழர் தரப்பின் இராஜதந்திரச் செயற்பாடுகளை, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் நா.த.அரசாங்கத்தின் இனஒழிப்பு, போர்க்குற்றங்கள் குற்றவிசாரணைக்கும், தடுப்புக்குமான விவகார அமைச்சு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்....
சர்வதேச சட்டவாளரும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மதியுரைஞர் குழுவின் அங்கத்துவருமான கரன் பார்கர் அம்மையார் தலைமையில், வள அறிஞர் குழுவொன்று ஐ.நா மனித உரிமைச் சபையில் பணிகளை தற்போது மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஆகிய Joan Ryan அவர்களும், ஜரோப்பிய பாராளுமன்ற முன்னாள் உறுப்பினரும், முன்னாள் பிரித்தானியாவுக்கான ஐரோப்பிய பாராளுமன்ற முன்னாள் தலைவருமான Robert Evans அவர்களும் அரச சார்பற்ற நிறுவனத்தின் முன்னாள் இணைப்பாளருமாகிய Stewart Blake அவர்களும் பிரித்தானியாவில் இருந்து ஜெனீவாவுக்குச் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்தியாவில் இருந்து பேராசிரியர் மணிவண்ணன் மற்றும் பேராசிரியர் பொல் நியூமன் ஆகியோரும் ஜெனீவாவைச் சென்றடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல், வெளிவிகாரத்துறை துணை அமைச்சர் மாணிக்கவாசகர் மற்றும் அவைத்தலைவர் பொன் பாலராஜன் அவர்கள் ஐ.நா மனித உரிமைச் சபையில் ஏற்கனவே முன்னெடுத்திருந்த தமிழர் தரப்பு இராஜதந்திரச் செயற்பாடுகளின் தொடர்சியாக, தற்போது ஜெனீவாவுக்கு சென்றுள்ள வள அறிஞர் குழுவின் பணிகள் அமையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனித உரிமைச் சபையில் தமிழர் தரப்பு இராஜதந்திரச் செயற்பாடுகளை தமிழீழ அரசாங்கம் தீவிரப்படுத்தியுள்ளது
பதிந்தவர்:
தம்பியன்
12 March 2012



0 Responses to மனித உரிமைச் சபையில் தமிழர் தரப்பு இராஜதந்திரச் செயற்பாடுகளை தமிழீழ அரசாங்கம் தீவிரப்படுத்தியுள்ளது