Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

உலகளாவிய ரீதியில் யுத்தம், பாலியல் கொடுமை, வலுக்கட்டாயத் திருமணம், அடிமைத் தனம் போன்ற காரணங்களால் 2017 ஆம் ஆண்டு சிறுவர்களுக்கும் குழந்தைகளுக்கும் மிக மோசமான ஆண்டு என ஐ.நா இன் சிறுவர் நல அமைப்பான யுனிசெஃப் அறிக்கை வெளியிட்டுள்ளது. உதாரணமாக சொன்னால் யேமெனில் 3 வருடங்களாக நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரின் விளைவை எடுத்துக் கொள்ளலாம்.

யேமென் உள்நாட்டுப் போரினால் இதுவரை 5000 சிறுவர்கள் கொல்லப் பட்டும் படுகாயம் அடைந்தும் உள்ளதுடன் போசாக்கின்மையால் 1.8 மில்லியன் சிறுவர்கள் பாதிக்கப் பட்டுள்ளதாகவும் புள்ளி விபரம் கூறுகின்றது. யேமெனியில் மட்டுமல்லாது மத்திய கிழக்கிலும் ஆப்பிரிக்காவிலும் தீவிரவாதம் ஓங்கியுள்ள பகுதிகளில் சிறுவர்கள் ஆயுதங்களாகவும் வலுக்கட்டாயமாக தற்கொலைப் போராளிகளாகவும் மனிதக் கேடயங்களாகவும் பயன்படுத்தப் பட்டு வருவதாக யுனிசெஃப் எச்சரிக்கை விடுத்துள்ளது.

யுத்தப் பகுதிகளில் வேறு எந்தவித வழியுமின்றி சிறுவர்கள் குழப்பத்தில் மாட்டிக் கொள்வதாகவும் ஐ.நா அமைப்பு தெரிவிக்கின்றது. முக்கியமாக யுத்தக் குழப்ப நிலை காரணமாக ஈராக், சிரியா, யேமென், நைஜீரியா, தென் சூடான் மற்றும் மியான்மார் ஆகிய நாடுகளில் சிறுவர்கள் மீது கற்பழிப்பு, வலுக்கட்டாயத் திருமணம், கடத்தல் மற்றும் அடிமைத் தனம் என்பன திணிக்கப் பட்டு வருவதாக யுனிசெஃப் சுட்டிக் காட்டுகின்றது. இது மாத்திரமல்லாது சில சிறுவர்கள் தீவிரவாத இயக்கங்களில் இருந்து மீட்கப் பட்டாலும் பின்னர் பாதுகாப்புப் படையினரால் துன்புறுத்தலுக்கு ஆளாவதையும் யுனிசெஃப் சுட்டிக் காட்டத் தவறவில்லை.

யுத்த மற்றும் குழப்பநிலைப் பகுதிகளில் உலகளாவிய ரீதியில் சுமார் 27 மில்லியன் சிறுவர்கள் பாடசாலைக்கு செல்ல இயலாத சூழலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. போக்கோ ஹராம் தீவிரவாதிகளால் சுமார் 135 சிறுவர்கள் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தாரிகளாக மாற்றப் பட்டதற்கு ஆதாரம் உள்ளது எனவும் யுனிசெஃப் தெரிவிக்கின்றது. இது தவிர கொங்கோ ஜனநாயகக் குடியரசில் இருந்து அரசியல் மற்றும் இராணுவ வன்முறைகளால் இதுவரை 850 000 சிறுவர்கள் தம் வீடுகளை விட்டு இடம் பெயர்ந்துள்ளதாக ஒரு புள்ளி விபரம் கூறுகின்றது. சோமாலியாவில் 2013 தொடக்கம் சுமார் 19 000 சிறுவர்கள் ஆயுதக் குழுக்களில் சேர்க்கப் பட்டுள்ளனர்.

மேலும் மியான்மாரில் இனவழிப்பில் இருந்து தப்ப இடம்பெயர்ந்த 650 000 றோஹிங்கியாக்களில் அரைவாசிக்கும் அதிகமானவர்கள் 18 வயதுக்குக் குறைவான சிறுவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 Responses to 2017 ஆம் ஆண்டு சிறுவர்களுக்கு மிகவும் மோசமான ஆண்டு : யுனிசெஃப் அறிக்கை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com