வன்னி யுத்தத்தில் ஆயுதப் படைகளால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் - மானிடத்திற்கு எதிரான குற்றச்செயல்கள் தொடர்பாக ஊடகங்களில் எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து சிறீலங்கா அரசிடம் ஐக்கிய நாடுகள் சபை விளக்கம் கோரியிருப்பதாக நம்பகமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனை எதிர்கொள்ளும் நிமித்தம் ஜெனீவாவிற்கு மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்கவையும், இலண்டனுக்கு பேராசிரியர் ரஜீவ விஜயசிங்கவையும், நியூயோர்க்கிற்கு கலாநிதி பாலித்த கோஹொன்னவையும் சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அனுப்பி வைத்திருப்பதாக இராசதந்திர வட்டாரங்கள் கூறுகின்றன.
கடந்த சனிக்கிழமை ஜெனீவாவிற்குப் பயணமாகிய சிறீலங்கா மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க, இதுவிடயமாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஆணையாளர் நவநீதம் பிள்ளை, மனித உரிமைகள் பேரவையின் தலைவர் மார்டின் யூகொமொய்பி, அகதிகளுக்கான உயர் ஆணையாளர் ஜோஸ் லூயிஸ் குற்றாறெஸ் ஆகியோருடன் கலந்துரையாடல்களை நிகழ்த்துவார் எனத் தெரிய வருகின்றது.
இதேபோன்று நியூயோர்க்கில் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் செயலாளர் நாயகம் உட்பட மூத்த அதிகாரிகளுடன் சந்திப்புக்களை நிகழ்த்துவதற்கு கலாநிதி பாலித்த கோஹொன்ன திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது.
இதனிடையே, கடந்த வியாழக்கிழமை (10.09.2009) முதல் இலண்டனில் தங்கியிருக்கும் பேராசிரியர் ரஜீவ விஜயசிங்க, பிரித்தானியாவின் மூத்த அரசியல் தலைவர்களுடனும், ஊடகவியலாளர்களுடனும் தொடர்புகளை ஏற்படுத்தி அவர்களுடன் தனித்தனியாகவும், கூட்டாகவும் பரப்புரைச் சந்திப்புக்களை நிகழ்த்தி வருவதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.
நன்றி: பதிவு
போர்க்குற்றங்கள் தொடர்பாக சிறீலங்கா அரசிடம் ஐ.நா. விளக்கம் கோரல்!
பதிந்தவர்:
தம்பியன்
16 September 2009



0 Responses to போர்க்குற்றங்கள் தொடர்பாக சிறீலங்கா அரசிடம் ஐ.நா. விளக்கம் கோரல்!