வவுனியா வைரவப்புளியங்குளம் பத்தாம் ஒழுங்கையின் ரயில் நிலைய வீதிச் சந்தியில் உள்ள மூடிய கடைக்குள் இளம்பெண்ணின் சடலம் ஒன்றினை வவுனியா பொலிசார் இன்று புதன்கிழமை கண்டுபிடித்துள்ளார்கள்.
இந்தச் சந்தியில் அமைந்துள்ள கடைத்தொகுதியின் கடையொன்றிலேயே இந்தச் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கடைக்கு எதிரில் படையினரின் காவலரண் ஒன்று அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கட்டிடப் பொருட்கள் விற்பனை செய்யும் இந்தக் கடையில் இருந்த ஒருவர் நெளுக்குளத்தில் வசித்து வரும் சிவகுமார் என்பவரின் மூன்றாவது மகளாகிய 18 வயதுடைய சுகியந்தி என்ற இளம்பெண்ணை மூன்று மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்திருந்ததாகவும், அந்தப் பெண்ணே இவ்வாறு சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு விஜயம் செய்து விசாரணைகளை மேற்கொண்ட வவுனியா மாவட்ட நீதிபதி அலெக்ஸ் ராஜாவின் முன்னிலையில் இறந்த பெண்ணின் சகோதரனும், தாயாரும் சடலத்தை அடையாளம் காட்டினார்கள்.
இறந்த பெண்ணின் தாயாரை விசாரணை செய்த நீதிபதியிடம், தனது மகளுக்கு 18 வயது என்றும், மூன்று மாதங்களுக்கு முன்னர், குறிப்பிட்ட கடையில வசித்து வந்த ஸ்ரான்லி என்பவரைத் தனது மகள் திருமணம் முடித்து வாழ்ந்து வந்தார் என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை தங்களது வீட்டில் இருந்து தனமு மகள் புறப்பட்டுச் சென்றதாகவும், அதன்பின்னர், சம்பவ தினத்தன்றே அவரைச் சடலமாகக் கண்டதாகவும் இறந்த பெண்ணின் தாயார் மேலும் நீதியதிபிடம் தெரிவித்தள்ளார்.
மூடிய கடைக்குள் இருந்து துர்நாற்றம் வீசுவதாகக் கிடைத்த தகவலையடுத்து, பொலிசார் கடைக் கதவை உடைத்துப் பார்த்த போதே அந்த இளம்பெண் சடலமாகக் கிடந்தமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசார் மேல் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
மூடிய கடைக்குள் இளம்பெண்ணின் சடலம் வவுனியா பொலிசார் கண்டுபிடிப்பு
பதிந்தவர்:
தம்பியன்
17 September 2009



0 Responses to மூடிய கடைக்குள் இளம்பெண்ணின் சடலம் வவுனியா பொலிசார் கண்டுபிடிப்பு