இலங்கையில் தமிழர்களின் இன்னல் கண்டு கொதித்தெழுந்து தன்னையே தீயில் எரித்து ஆகுதியாகிய வீரத்தமிழ்மகன் முத்துக்குமாரின் முதலாம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு 29-01-2010 அன்று பிரித்தானியாவில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.பிரித்தானியாவின் லண்டன் ஈஸ்ட்ஹாம் பகுதியிலுள்ள அக்சியா லோன்ஞ் எனும் இடத்தில் 29-01-2010 வெள்ளிக்கிழமை மாலை 6:30 மணி முதல் 9:30 மணி வரை நடைபெற்ற இந்த நினைவு வணக்க நிகழ்வில் பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் நூற்றுக்கணக்கில் வந்து உணர்வுபூர்வமாக கலந்து கொண்டு வீரத்தமிழ்மகன் முத்துக்குமாருக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
அக வணக்கத்துடன் ஆரம்பித்த இந்த நினைவு வணக்க நிகழ்வில் ஈகச்சுடரை தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்திருந்த பேராசிரியர் தீரன் அவர்கள் ஏற்றி வைக்க, தொடர்ந்து தமிழ்நாட்டிலிருந்து வந்திருந்த திரு.. சீனிவாசராவ் அவர்களும், திரு. ஞானசேகரம் அவர்களும் வீரத்தமிழ்மகன் முத்துக்குமாரின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலையினை அணிவித்தனர். அதனைத்தொடர்ந்து மக்களின் மலர்வணக்க நிகழ்வு இடம்பெற்றது.
இந்திகழ்வில் இல்பேட் விநாயகர் ஆலய தர்மகத்தாவும் தமிழ் உணர்வாளருமான திரு. செல்வராஜா, தமிழ்நாட்டைச்சேர்ந்த திரு. துரை, தமிழ்நாட்டிலிருந்து வருகைதந்திருந்த சிறீனிவாசராவ் ஆகியோர் உட்பட பலரின் உரையும், தமிழ் நாட்டிலிருந்து வருகை தந்திருந்த பேராசிரியர் தீரன் அவர்களின் சிறப்புரையும் இடம்பெற்றது.
இலங்கையில் நடைபெற்ற இறுதியுத்தத்தின் போது அப்பாவிமக்கள் ஆயிரக்கணக்கில் ஸ்ரீலங்கா இராணுவத்தினால் கொன்று குவிக்கப்பட்டுக் கொண்டிருந்த நிலை கண்டும் சர்வதேச சமூகம் பாராமுகமாக இருந்ததை கண்டு வேதனையோடு கொதித்தெழுந்த வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் சர்வதேச சமூகத்திற்கும், உலகெங்கும் வாழ் தமிழர்களுக்குமென அறிக்கையை எழுதிவைத்து விட்டு இந்தியாவின் தமிழ்நாட்டில் தன்னை தானே எரித்து உலகின் பார்வையை தமிழர் பக்கமும், இலங்கையில் நடைபெற்றுவரும் இனப்படுகொலையின் பக்கமும் திசைதிருப்பி வரலாற்றில் மிக உன்னத தியாகம் நிறைந்த தன் கடமையை செய்திருந்தார் என்பதும், இந்தியா, சுவிஸ், மலேசியா ஆகிய நாடுகளில் முத்துக்குமார் முதல் முருகதாஸ் வரை 14 தமிழர்கள் இலங்கைத் தமிழர்களின் விடுதலைக்காக தம்மையே எரித்து தியாக சீலர்கள் ஆனார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.









0 Responses to பிரித்தானியாவில் நடைபெற்ற தியாகி முத்துக்குமாரின் முதலாம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு