ஜனவரி 29ஆம் தேதியன்றும், அதனைத் தொடர்ந்த அடுத்த இரண்டு நாட்களிலும் தமிழ்நாட்டில் சாலை வழிப் பயணம் மேற்கொண்ட அனைவரும் ஒரு குறிப்பிட்ட நிகழ்வுத் தொடர்பான சுவரொட்டிகளை நிச்சயம் பார்த்திருப்பார்கள். அது ஒராண்டிற்கு முன்னர் தமிழ்நாட்டில் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய அந்த நிகழ்வின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் தொடர்பான சுவரொட்டிகளாகும்.ஓராண்டிற்கு முன்னர் நடந்த அந்த நிகழ்வு, அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் இளைஞர்கள், மாணவர்கள் இடையே ஏற்பட்ட எழுச்சி, தமிழ்நாட்டின் சமூக - அரசியல் அரங்கில் ஒரு புதிய எழுச்சிப் போக்கினை உருவாக்கியுள்ளதை இந்த நினைவேந்தல் நிகழ்ச்சிகளின் வீச்சிலிருந்து உணர முடிகிறது.
மக்களைப் பாதிக்கும் ஒரு பிரச்சனையின் தொடர்ச்சியாக ஏற்பட்ட எத்தனையோ நிகழ்வுகளைத் தொடர்ந்து உருவான எழுச்சியைப் போல் இந்த எழுச்சியும் அடங்கிவிடும் என்றுதான் பலரும் - குறிப்பாக ஆட்சியாளர்களும், ஆளும், எதிர்க்கட்சியினரும் கூட எதிர்ப்பார்த்தனர்.
ஆனால், அந்த எதிர்பார்ப்பை பொய்யாக்கியது மட்டுமின்றி, அந்நிகழ்வில் உருவான எழுச்சி மாணவர்கள் முதல் வழக்கறிஞர்கள் வரை ஈழத் தமிழினம் காக்கும் போராட்டத்தில் வலிமையாக ஈடுபடச் செய்தது. முதல் முறையாக தமிழ்நாட்டு மக்களின் உணர்வுத் தொடர்பான ஒரு முக்கியப் பிரச்சனையில் எந்த ஒரு அரசியல் கட்சியையும் சாராமல் பொதுமக்களின் உணர்வு ஒன்றுபட்டது. அதன் வீச்சு, அடுத்த சில மாதங்களில் வந்த தேர்தலிலும் ஒரு வலிமையான ஆற்றலாகச் செயல்பட்டது.
அந்த எழுச்சி, தமிழினத்திற்கு ஆதரவான ஒரு எதிர்பார்த்த விளைவை தேர்தலில் ஏற்படுத்தவில்லை என்றாலும் அது அடங்கிவிடவில்லை. பல்வேறுப் பெயர்களில், பல்வேறு துறைகளில், பல்வேறு சமூக மட்டங்களில் ஆழமாக வேரூன்றத் தொடங்கியது.
இந்த எழுச்சியை தாங்கள் அறிந்த அளவிற்கு தமிழ்நாட்டின் பெருவாரியான பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகள் செய்திகளாக்காமல் இருட்டடிப்புச் செய்தன. ஆயினும் மாணவர்கள், இளைஞர்கள், பொது நல விரும்பிகள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள் என்று அனைவரையும் அந்த எழுச்சி ஆரத்தழுவியது.
உயிராயுதம் ஏந்துகிறேன்!

இந்த எழுச்சிக்கு வித்திட்ட அந்த நிகழ்வு, 29 வயதான இரா. முத்துக்குமார் என்ற யாரும் சற்றும் அறிந்திராத ஒரு தமிழன், ஒரு நாள் காலை, மத்திய அரசு அலுவலகங்கள் பல இயங்கிவரும் சாஸ்த்திரி பவன் வளாகத்தில் தன்னை எரித்துக் கொண்டு மாய்ந்ததே.
இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான சிறிலங்க அரசின் இனப் படுகொலைப் போர் உச்சக்கட்டத்தை எட்டிக் கொண்டிருந்தபோது, அதனைத் தடுத்து நிறுத்த தமிழக அரசு, தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள், தலைவர்கள் ‘இயலாத நிலை’யில், முத்துக்குமார் தன்னை தீயிட்டு அழித்துக் கொண்டு மாண்டார்.
அவர் மாண்ட செய்தி வெளியான அந்த நேரத்தில், அது ஒரளவிற்கு அனுதாபத்தையும், பெருமளவிற்கு கண்டனத்தையுமே ஈர்த்தது. ஆனால், தன்னை தீயிட்டுக் கொளுத்திக் கொள்வதற்கு முன்னர், அந்த வளாகத்திலிருந்தவர்களிடம் தான் எழுதி வைத்திருந்த கடிதத்தின் நகல்களை முத்துக்குமார் வழங்கியிருந்தார். அந்தக் கடித நகலைப் பெற்றவர்கள் படித்துணர்ந்து அவரின் முடிவை அறிந்துகொள்வதற்கு முன்னர், தன் மீது தீயிட்டு முடித்துக் கொள்கிறார் முத்துக்குமார். “அநீதிகளுக்கு எதிரான போராட்டத்தில் நான் உயிராயுதம் ஏந்துகிறேன். நீங்கள் (எனது கடிதத்தின்) நகலாயுதம் ஏந்துங்கள்” என்று கூறி முடித்த அவரது கடிதம், பல இலட்சக்கணக்கில் நகலாகி மக்களிடையே சென்றது.
அந்தக் கடிதமே தமிழ்நாட்டின் வரலாற்றில் அதிசயிக்கத்தக்க ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. தமிழனை ஆள்பவர்கள், அவனுடைய தலைவர்கள், அரசியல் கட்சிகள் என எதையும் விடாமல் அக்கடிதத்தில் சாடியிருந்த முத்துக்குமார், இந்திய அரசையும், மறைமுகமாக அது நடத்தும் போரையும், உலக நாடுகளின் மெளனத்தையும்... சுருங்கக் கூறுவதெனில், தமிழர் பிரச்சனையின் அனைத்துப் பரிமாணங்களையும், அதற்கு எதிரான அரசியல் போக்குகளையும், தமிழர்கள் ஒன்றிணைய வேண்டிய அவசியத்தையும் மிக மிகத் தெளிவாக விளக்கியிருந்தார்.
அந்தக் கடிதத்தின் சாரம் முழுமையான எழுச்சியை தமிழரிடம் ஏற்படுத்திவிடாது என்றுணர்ந்தே, தனது உயிரை மாய்த்து அதற்கு பலமேற்றி, தமிழ்நாட்டில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் அனைவரையும் படிக்க வைத்தார்.
தனது கடிதத்தைப் படிக்கப்போகும் தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் ஒரு வேண்டுகோளை விடுத்திருந்தார். எரிந்து கருகிக் கிடக்கப்போகும் தனது உடலை துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தி அரசியல் செய்யுமாறு முத்துக்குமார் கூறியிருந்தார். அடுத்த சில மணி நேரங்களில் அவருடைய சடலத்தை சுற்றிச் சூழ்ந்த மாணவர்களும், இளைஞர்களும், தமிழின உணர்வாளர்களும் முத்துக்குமாரின் வேண்டுகோளின்படி ‘அரசியல்’ செய்யத் துவங்க, தமிழ்நாட்டின் அரசியல் போக்கில் தமிழின உணர்வு ரீதியிலான ஒரு எழுச்சி பிறந்து, அது பரவவும் துவங்கியது.
ஈழத் தமிழினத்திற்கு ஆதரவாக கிளர்ந்தது மட்டுமின்றி, தமிழக அரசு, அரசியல், இந்திய அரசு, அரசியல் கட்சிகள், தலைவர்கள் ஆகியோருக்கு எதிரான ஆழமான எதிர்ப்புணர்வாகவும் அந்த எழுச்சி வலிமைப் பெற்றது. ஆனால் இவையாவும் ஊடகங்களில் பெருமளவிற்கு மறைக்கப்பட்டன. அவர் இறந்த மூன்றாவது நாள், அரசியலாக்கப்பட்ட அந்த உடல் மயான பூமிக்கு எடுத்துச் செல்லப்பட்டபோது திரண்டிருந்த உணர்வாளர்களின் கூட்டம், தமிழ்நாடெங்கும் பரவிச் சென்று செயலாற்றலாக உருப்பெற்றது.
முத்துக்குமார் இறந்த இரண்டாவது நாளில் பள்ளிப்பட்டு இரவி, மலேசியத் தமிழர் ஸ்டீபன் ஜெகதீசன், அடுத்த சில நாட்களில் மற்றொரு மலேசியத் தமிழரான இராசா, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சீர்காழி இரவிச்சந்திரன், சென்னை அமரேசன், சுவிட்சர்லாந்து நாட்டில் வாழ்ந்துவந்த முருகதாசன் என்று தொடர்ந்து 17 பேர் தீக்குளித்து மாய்ந்தது தமிழ்நாட்டு மக்களிடையே ஈழப் பிரச்சனை குறித்தான ஆழமான விழிப்புணர்வை மட்டுமின்றி, அது தொடர்பில் ஒவ்வொரு அரசியல் கட்சிகளின், அவர்களின் தலைவர்களின் போக்கையும் புரிந்துகொள்ள வைத்தது.
அதுவே தேர்தலின்போது வலிமையான பிரச்சாரமாகவும், தமிழினத்திற்கு எதிரான வெளிப்படையாகவும், இரகசியமாகவும் நடந்த பல ‘வசதியான’ வினையாற்றல்களையும் வெளிக்கொணர்ந்தது. பத்திரிக்கை, தொலைக்காட்சி உள்ளிட்ட எந்த ஊடகத்தின் துணையுமின்றி, நேருக்கு நேர் மக்களைச் சந்தித்த இளைஞர்களின் பிரச்சாரம், தேர்தலைச் சந்தித்த அரசியல் கட்சிகளுக்கு பெரும் சவால்களையும் சங்கடங்களையும் ஏற்படுத்தியது. இதனால் அரசியல் கட்சிகளும் தலைவர்களும் அதிகம் உழைக்கவும் செலவிடவும் நேர்ந்தது.
ஈ.ழப் பிரச்சனை முதல் முறையாக தமிழ்நாட்டின் வரலாற்றில் தேர்தல் பிரச்சனையானது. பெரும் பண செலவிற்குப் பின்னரும் ஈழத்திற்கு எதிரான அரசியல் அணியின் பல தலைவர்கள் தோற்றனர். ஆயினும் எதிர்ப்பார்த்த தலைகீழ் மாற்றத்தை அது ஏற்படுத்தவில்லை என்றாலும், அந்த எழுச்சித் தீ ஒரு பெரும் அரசியல் ஆற்றலாக தமிழக மக்களிடையே அயராமல் தொடர்ந்தது. அந்த எழுச்சி ஒரு தூய்மையான அரசியலை அடிப்படையான கொள்கையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது என்பதையே கடந்த மூன்று நாள் தமிழகமெங்கும் நடந்த நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்த்தின.
2009ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 29ஆம் நாள் சென்னை சாஸ்த்திரி பவனில் தீயில் கருக்கொண்டு உருவான அந்த எழுச்சி, எந்த அளவிற்கு வேர்கொண்டு வளர்ந்து பலம் பெற்று நிற்கிறது என்பதைத்தான் கடந்த வெள்ளிக் கிழமையன்று தமிழ்நாடு முழுவதும் தமிழின உணர்வாளர்களால் கடைபிடிக்கப்பட்ட வீர வணக்க நாள் பறைசாற்றியது.
முத்துக்குமார் நினைவாக எந்த பொது நிகழ்ச்சி நடத்துவதற்கும் காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. நீதிமன்றம் சென்றே அனுமதி பெற வழிகாணப்பட்டது.
சென்னையில் முத்துக்குமாரின் உடல் வைக்கப்பட்டிருந்த கொளத்தூர் அன்னை சத்யா நகரில் 'வீரத் தமிழன் முத்துக்குமார் நினைவேந்தல் குழு'வின் சார்பாக வைக்கப்பட்ட 19 அடி உயர நினைவுத் தூணிற்கு தமிழின உணர்வாளர்களும், அரசியல் கட்சிகளின் தலைவர்களும் அணி வகுத்து வந்து அஞ்சலி செலுத்தினர். ஆனால், முத்துக்குமாரின் தியாகத்தாலும், கடிதத்தாலும் ஈர்க்கப்பட்ட இளைஞர்களும், மாணவர்களும் உணர்வுடன் வந்து வீர வணக்கம் செலுத்திவிட்டுச் சென்றனர்.
தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் இந்த ஓரிடத்தில் மட்டுமின்றி, மேலும் பல இடங்களில் முத்துக்குமாருக்கும் மற்றத் தியாகிகளுக்கும் நினைவேந்தல் நடைபெற்றுள்ளது. சென்னையில் மட்டுமின்றி தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும், நகராட்சிகளிலும், பல நூறுக்கணக்கான கிராமங்களிலும் இந்த நினைவேந்தல் நடந்துள்ளது. தென் நகராம் நெல்லையில் மே 17 இயக்கத்தின் சார்பில் நடந்த நடுகல் விழாவை நெல்லை மாநகர மேயர் துவக்கி வைத்து நடந்துள்ளது.
நினைவேந்தல் நிகழ்வுகள் மட்டுமின்றி, பல இடங்களில் தமிழ்நாடும், ஈழத் தமிழர்களும் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்காகப் போராட பல இயங்கங்களின் சார்பில் பிரச்சாரக் கூட்டங்களும், ஒன்றிணைப்பு மாநாடுகளும் நடந்துள்ளது.
ஆனால் இவையணைத்தும் தமிழ்நாட்டின் நாளிதழ்களிலும், ஊடகங்களிலும் பெருமளவிற்கு இருட்டடிப்பு செய்யப்பட்டது. தமிழ்நாட்டின் கட்சி அரசியலிற்கு அப்பாற்பட்ட ஒரு அரசியல் எழுச்சி நீரோட்டம் வலிமை பெற்று வருவதை அரசும், அரசியல் கட்சிகளும் விரும்பாமல் போகலாம், அதனை பத்திரிக்கைகள் செய்தியாக்காமல் தவிர்த்ததற்கு அரசியல் அழுத்தங்கள் காரணமாகவும் இருக்கலாம். ஆனால் தங்கள் கண் முன்னால் நடந்த நினைவேந்தல் நிகழ்வுகளும், அவற்றில் கூறப்பட்ட கருத்துகளும் மக்களிடையே மதிப்புடன் பதிவாகியுள்ளது.
‘நீருபூத்த நெருப்பாக’ என்று கூறுவார்கள், அப்படிபட்ட ஒரு எழுச்சி தமிழ்நாட்டின் சமூக - அரசியல் தளத்தில் வலுகொண்டு வருகிறது. எதிர்காலத்தில் அதன் வீச்சு தமிழ்நாட்டின் அரசியல் போக்கில் வலிமையான மாற்றம் ஏற்படக் காரணமாகலாம். இன்றைய அரசியல் போக்கிற்கு இந்த எழுச்சி நேர் எதிர் வீச்சைக் கொண்டுள்ளது. எனவே அது ஏற்படுத்தும் மாற்றம் பெரும் ஆச்சரியத்தை தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்திய அரசியல் களத்திலும் ஏற்படுத்தலாம்.
நன்றி: வெப்துனியா



as long as we have cabara dancer+ script writer,ther can be no real growth for tamil community:this is FIRM.........