எதிர்வரும் ஏப்ரல் மாதம் இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தனது கட்சி சின்னத்தின் கீழேயே போட்டியிடப்போவதாக தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் அரசதலைவர் தேர்தல் முடிவுகள் தனது கட்சி மக்கள் செல்வாக்கை இழந்துள்ளதை காண்பிப்பதாக அமைந்துள்ளபோதும் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் அதனை முறியடிக்கும் விதத்தில் அமையும் என்றும் அவர் கூறியுள்ளார்.யாழ் மாநகரசபைக்கான தேர்தலில் ஈ.பி.டி.பி. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிலை சின்னத்தில் போட்டியிட்டு, திட்டமிட்டவாறு மாநகர சபையின் அனைத்து ஆசனங்களையும் கைப்பற்றமுடியாமல் போனது. இதனை அடுத்து, அரச தலைவர் தேர்தலுக்கு முன்பாக யாழ்ப்பாணம் சென்ற பசில் ராஜபக்ச அமைச்சர் டக்ளஸின் ஈ.பி.டி.யுடன் சேர்ந்து தேர்தலில் வெற்றிபெறுவதற்கான பல வியூகங்களை வகுத்தார். ஈற்றில், அரச கூட்டணியின் முயற்சிகள் முறியடிக்கப்பட்டு, தேர்தலின்போது யாழ்ப்பாணத்தில் அரசதலைவர் மகிந்த படுதோல்வியடைந்தார்.
இதனையடுத்து, விரக்தியுற்ற அமைச்சர் டக்ளஸ் அமைச்சு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை இராஜினாமா செய்யப்போவதாக அரசியல் நாடகமாடி தற்போது தனது முடிவிலிருந்து பின்வாங்கி அதனை மறுத்திருக்கிறார்.
இந்நிலையில், வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தனது கட்சி சின்னத்தில் தனித்து போட்டியிட்டு யாழ்ப்பாணத்தில் பெருவெற்றியடையப்போவதாக அவர் சூளுரைத்திருக்கிறார். இதேவேளை, ஈ.பி.டி.பி. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் தொடர்ந்து அங்கம் வகிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
எதிர்வரும் ஐந்தாம் திகதி - சிறிலங்கா சுதந்திரத்தின தினத்திற்கு மறுநாள் - நள்ளிரவு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்று கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



0 Responses to பொதுதேர்தலில் டக்ளஸ் தனது கட்சி சின்னத்திலேயே போட்டியிடப்போகிறாராம்!