யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும் உள்ளுர் நாளிதழ் ஒன்றுக்கு யாழ் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணம் அச்சுறுத்தல் விடுத்திருப்பதாக தெரியவருகிறது.யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வரும் தென்னிலங்கை வீதியோர வர்த்தகர்களை யாழ் மாநகரசபை நிர்வாகம் ஊக்குவித்து வருவதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது. இதுதொடர்பில் குறித்த உள்ளுர் நாளிதழ் ஆசிரியர் தலையங்கம் ஒன்றை எழுதியிருந்தது. இதனையடுத்து ஆளும் பொதுமக்கள் ஐக்கிய முன்னணி சார்பில் யாழ் மாநகர முதல்வராக உள்ள யோகேஸ்வரி பற்குணம் குறித்த நாளிதழ் அலுவலகத்தை இழுத்து மூடப் போவதாக அச்சுறுத்தியுள்ளதாகத் தெரியவருகிறது.
தெற்கிலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கில் படையெடுத்து வரும் சிங்கள நடைபாதை வியாபாரிகளால் யாழ் நகரம் திண்டாடி வருகின்றது. அவர்கள் எழுந்தமானமாக வீதியோரங்களில் கடைகளை அமைத்து வருகின்றனர். நல்லூர் உள்ளிட்ட பிரதான இந்து ஆலயங்களும் இதற்குத் தப்பவில்லை. இந்த அத்துமீறல்கள் தொடர்பில் வணிக அமைப்புக்கள், ஆலய நிர்வாகங்கள் மற்றும் பொது அமைப்புக்கள் ஆகியவை மாநகரசபை நிர்வாகத்திற்கு அறிவித்துள்ளன. எனினும் தென்னிலங்கைத் தலைமைக்குப் பயந்து மாநகரசபை முதல்வர் மாநகரசபை பணியாளர்கள் தமது கடமைகளை மேற்கொள்ளவிடவில்லை.
இது தொடர்பில் ஆசிரியர் தலையங்கம் எழுதப்பட்டதைத் தொடர்ந்து அதன் செய்தியாளர் ஒருவரிடம் குறித்த நாளிதழ் அலுவலகத்தை இழுத்து மூடப் போவதாகவும் இது தொடர்பாக வடக்கு மாகாண ஆளுனருடன் தாம் தொடர்பு கொண்டுள்ளதாகவும் முதல்வர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.



0 Responses to குடாநாட்டு நாளிதழை தடை செய்யப்போவதாக மாநகரசபை முதல்வர் மிரட்டல்!