Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வன்னிப் பேரவலத்தின் நினைவுகள் ஒவ்வொருவர் நெஞ்சையும் எரிய வைத்துக் கொண்டிருக்க, அதன் ஓராண்டு முடிவடையும் காலத்துள் நாம் வாழ்வது என்பது தாங்க முடியாத சோகமானது.

பேரினவாத சிங்கள அரசு தனது ஆயுத பலத்தை தமிழ்மக்கள் மீது மூர்க்கத்தனமாக மேற்கொண்டதால் எம் மக்கள் கடந்த வருட மே மாதத்தில் வகைதொகையின்றிக் கொன்று குவிக்கப்பட்டனர்.

மே மாதம் 18ஆம் திகதி என்பது, உலகம் கண் விழித்துப் பார்த்திருக்க, ஈழத் தமிழினத்தின் மீது மனிதகுலம் ஏற்க முடியாத கொடூரத்தைதச் சிங்கள தேசம் ஏவி, அதன் உச்சத்தைத் தொட்ட இருண்ட நாள்.

மே மாதம் 18ஆம் திகதியை உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் போர்க் குற்றவியல் நாளாக கடைப்பிடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வீரம் நிறைந்த மறவர்களின் தியாகத்தாலும் தீரத்தாலும் முப்பதாண்டுகளுக்கும் மேலாக விரிக்கப்பட்ட விடுதலைப் பயணம் அவர்களின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட நிலையில், பின்னடைவைச் சந்திக்க நேர்ந்தது துயரமானது.

அகதிகளாக்கப்பட்டவர்களின் அவலம் தொடர்கிறது. புனர்வாழ்வு என்ற பெயரில் கைதான போராளிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. தமிழரின் தாயக பூமியில் சிங்களக் குடியேற்றம் திட்டமிட்டு நடத்தப்படுகிறது. வன்னிப் பெருநிலம் இராணுவ மையமாக மாற்றப்படுகின்றது.

இத்தனை கொடுமைகளையும், கண்டும் காணாதது போல சர்வதேசம் கண்மூடிப் பூனையாக நடிக்கிறது. எங்கள் மண்ணுக்காக மடிந்த மக்களையும் மாவீரர்களையும் மறந்துவிட முடியாது. அவர்களின் நினைவுகளை நெஞ்சில் இருத்தி அவர்கள் விட்டுச் சென்ற பணிகளை தொடர்வது காலத்தின் கடமை.

இதன் முதற் செயற்பாடாக, மே மாதம் முதலாம் திகதி முதல் பத்தொன்பதாம் 19) திகதி வரையான (01-05-2010 - 19-05-2010) காலத்தைவலி சுமந்த மாதம்' ஆக கனடிய தமிழர் நடுவம் பிரகடனம் செய்துள்ளது.

இந்தக் காலப்பகுதியில், இது தொடர்பாக இங்கு ஏற்பாடு செய்யப்படும் பல்வேறு நிகழ்வுகளிலும் உணர்வுபூர்வமாகப் பங்கேற்குமாறு ஒவ்வொருவரையும் உரிமை தழுவி அழைக்கின்றோம்.

மே 01 முதல் 19ஆம் திகதி வரையான நாட்களில் களியாட்ட, கலைவிழாக்களைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் எம் மக்களைப் பணிவுடன் வேண்டுகின்றோம். எங்கள் உறவுகள் மீது இழைக்கப்பட்ட கொடுமைகளை இந்நாட்டு மக்களுக்கும் அரசாங்கங்களுக்கும் எடுத்துக் காட்டும் வகையில் எங்கள் செயற்பாடுகளை அமைத்துக் கொள்வோம்!

வலிகளிலிருந்து மீண்டெழுவோம்!

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

கனடிய தமிழர் நடுவம்

Centre for Canadian Tamils

CCT

0 Responses to ‘வலி சுமந்த மாதம்’ பிரகடனம் - மே 18: போர் குற்றவியல் நாள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com