யாழ். தீவகம் வேலணை பொது வைத்தியசாலையில் பணியாற்றிய குடும்பநல மருத்துவ தாதியான சரவணை தர்சிகா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து கண்டன ஊர்வலம் ஒன்றை நேற்று மருத்துவ தாதியர்கள் நடத்தி உள்ளனர்.அவரது உடல் கைதடியில் உள்ள அவரது வீட்டில் மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்ட பின்னர் இறுதிக் கிரிகைக்காக எடுத்துச் செல்லப்பட்டது. அந்த வேளையில் அங்கு கலந்துகொண்டிருந்த நூற்றுக்கணக்கான தாதியர்கள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
கைதடிச் சந்தியை அடைந்த இவர்கள் அங்கு வீதிகளை மறித்து போக்குவரத்தை தடை செய்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர். சுலோக அட்டைகளையும் தாங்கியிருந்தனர்.
குறித்த மருத்துவ தாதியைக் கொலை செய்ததாகக் கருதப்படும் வைத்தியரை உடன் கைது செய்ய வேண்டும், விசாரணைகளை உரிய முறையில் உடன் ஆரம்பிக்கப்பட வேண்டும், கொல்லப்பட்டவரின் குடும்பத்திற்கு நஸ்ட ஈடு வழங்க வேண்டும், வைத்திய நிபுணரை பணிநீக்கம் செய்ய வேண்டும் முதலான கோரிக்கைகளை வலியுறுத்தி தாதியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை மருத்துவ மாது மரணம் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு கோரி இன்று காலை பிராந்திய சுகாதார வைத்திய நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது என்று குடும்ப நல உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறும் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
உத்தியோகத்தர் தர்ஷிகா சரவணனின் இறுதிச் சடங்கு நேற்று நடைபெற்றது. இதன் போதே இந்த ஆர்ப்பாட்டத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அவரின் இறுதி நிகழ்வின் போது பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கு கொள்ளவில்லை எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.



0 Responses to குடும்ப நல மருத்துவர் தாதி தர்சிகா படுகொலையைக் கண்டித்து சடலத்துடன் தாதியர்கள் ஆர்ப்பாட்டம்