மோட்டார் சைக்கிளில் பல தடவைகளாக வந்த நபர்கள் இந்தக் கொலை அச்சுறுத்தல்களை விடுத்ததாகத் தர்சிகாவின் தாயார் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நேற்று முறைப்பாடு செய்துள்ளார். தனது மகள், குறித்த சிங்கள வைத்தியரால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட பின்னரே படுகொலை செய்யப்பட்டதாகக் குற்றஞ்சாட்டி மனுவொன்றினை நேற்று ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
இதையடுத்து ஊர்காவற்றுறைப் பொலிஸார் சாவகச்சேரிப் பொலிஸாருடன் தொடர்பு கொண்டு அவர்களது குடும்பத்தினருக்கும் அவருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என நேற்று ஊர்காவற்றுறை நீதிபதி உத்தரவு பிறப்பித்திருக்கின்றார். இதையடுத்துப் பொலிஸார் ஊடாகப் பாதுகாப்பு வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றனர். இதனிடையே பிணையில் விடுவிக்கப்பட்ட குறித்த வைத்தியர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜரானார்.
அவ்வேளையில் சர்ச்சைக்குரியதான முறையில் இவர் சிறைச்சாலையில் தாக்கப்பட்டதாகத் தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பான விசாரணைகள் நீதிமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.ஊர்காவற்றுறைப் பொலிஸார், யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் குறித்த வைத்தியர் தாக்கப்பட்டதாகத் தெரிவித்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்திருந்தனர்.ஆனால் சிறைச்சாலை அதிகாரிகளோ நெஞ்சுவலி காரணமாகவே சிறைச்சாலையில் இருந்து அவர் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டதாகக் கூறியிருந்தனர்.
இந்தநிலையில் நேற்று ஊர்காவற்றுறைப் பொலிஸார், அங்கிருந்த நீதிமன்றப் பொலிஸாரின் தகவல்களின் பிரகாரமே அந்த அறிக்கையைச் சமர்ப்பித்திருந்ததாகக் கூறியிருந்தனர். இதனையடுத்து நீதிபதி கடுமையான கண்டனத்தை அவர்களுக்குப் பதிவு செய் தார். இதனிடையே குறித்த நபர் நோய்கள் இன்றி ஏன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் என்பது தொடர்பாக அறிக்கையை சமர்ப்பிக்க மீண்டும் அவர் பொலிஸாருக்கு உத்தரவிட்டிருக்கின்றார்.



0 Responses to தர்சிகாவின் குடும்பத்தினருக்கு இனந்தெரியாதவர்களால் கொலை அச்சுறுத்தல்!