சிறீலங்கா தொடர்ந்தும் ஆபத்தான நாடாகவே உள்ளதனால் அகதி தஞ்சம் கோரி அவுஸ்திரேலியாவுக்கு வந்துள்ள சிறீலங்கா மக்களின் விண்ணப்பங்களை அவுஸ்திரேலியாவின் புதிய அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என அனைத்துலக மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.இது தொடர்பில் சிறீலங்கா குறித்து ஆய்வுகளை மேற்கொண்டுவரும் அனைத்துலக மன்னிப்புச் சபையின் பிரதிநிதி ஜொலன்டா போஸ்ரர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
சிறீலங்கா தொடர்ந்தும் ஒரு ஆபத்து நிறைந்த நாடாகவே உள்ளது. எனவே அந்த மக்களின் அகதி விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதை நிறுத்தியுள்ள அவுஸ்திரேலியா அரசு அதனை மீண்டும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அவுஸ்திரேலியா அரசின் மூன்று மாதகால இடைநிறுத்தம் எதிர்வரும் ஜுலை 8 ஆம் நாளுடன் முடிவுக்கு வருகின்றது.
சிறீலங்கா மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கு அவுஸ்திரேலியா பிரதமர் ஜுலியா கிலார்ட் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சிறீலங்காவில் எந்தவித குற்றமும் சுமத்தப்படாது 10,000 மக்கள் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அங்கு துன்புறுத்தல்களும், காணாமல்போதலும், படுகொலைகளும் தொடர்வதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. சிறீலங்காவின் எந்தப் பகுதியும் பாதுகாப்பானது அல்ல. அங்கு அரசியலில் ஈடுபடுபவர்கள் கூட அரசுக்கு எதிரானவர்களாகவே பார்க்கப்படுகின்றனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



0 Responses to சிறீலங்கா மக்களின் உரிமைகளை அவுஸ்திரேலியா பிரதமர் பாதுகாக்க வேண்டும்