இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்த ஆய்வுகளை ஐ.நா.நிபுணர் குழு இந்த வாரம் தொடங்கும் என்று ஐ.நா.செயலாளர் நாயகத்தின் பேச்சாளர்களில் ஒருவரான ஃபர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.அவர் டுபாயிலிருந்து வெளியாகும் த நஷனல் ஆங்கில தினசரிப் பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்த இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாகவே அரசுக்கும், அரச படைகளுக்கும் எதிரான குற்றச்சாட்டுகள் பரவலாக முன்வைக்கப்பட்டிருக்கின்றன.
குறிப்பாக இந்த இறுதிக்கட்ட யுத்தத்தில் வகைதொகையின்றி அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர் என்றும் மனிதப் பேரவலங்கள் நடந்தேறின என்றும் குற்றஞ்சாட்டப்படுகின்றது. இலங்கையில் மோதல் பல தசாப்தங்களாக இடம்பெற்றிருக்கிறது. இம்மோதலில் ஏராளமான பேரழிவுகள் ஏற்பட்டிருக்கின்றன. இந்த மோதலை முழுமையாக விசாரிக்க வேண்டிய சட்டரீதியான தேவை உண்டு.
ஆனால் இறுதி கட்ட யுத்தத்தில் இடம்பெற்ற சம்பவங்களை விசாரிப்பது ஐ.நா. நிபுணர் குழுவின் முதற்கட்டப் பணியாகவும், தேவையாகவும் உள்ளது. அதுவே யதார்த்தமானதும் ஆகும். யுத்தத்தின் இறுதி நாட்களில் சர்வதேச சமூகத்தைக் கூடப் பொருட்படுத்தாமல் இரு தரப்பினருமே மனித உரிமைகள் சட்டங்கள், மனிதாபிமான சட்டங்கள் ஆகியவற்றை பாரதூரமான அளவில் அப்பட்டமாக மீறி இருக்கின்றார்கள்.
இலங்கையின் இறைமையில் ஐ.நா. தலையிடுகிறது என்ற குற்றச்சாட்டை நான் முற்றாக நிராகரிக்கிறேன் என அவர் மேலும் கூறினார்.



0 Responses to இறுதிப்போரில் நடந்தது என்ன? ஐ.நா.குழு நிச்சயம் விசாரிக்கும் என்கிறார் பேச்சாளர்