இறுதிக்கட்ட யுத்தத்தின் போது சரணடைய வந்தவர்களைப் படையினர் சுட்டுக்கொல்ல வில்லை. சரணடைய வந்தவர்கள் வெள்ளைக் கொடிகளையோ அல்லது கறுப்புக் கொடிக ளையோ ஏந்தி வரவில்லை. நிர்வாணமாக சரண டைய வந்தவர்களையும் இராணுவம் பொறுப் பேற் றுக் கொண்டது என்று ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நேற்று மேல்நீதிமன்றில் தெரிவித்தார்.
வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பான வழக்கு மேல்நீதிமன்ற நீதிபதிகளான தீபாலி விஜேசுந்தர, எச்.என்.பி.பி. வராவெல, சர்பிக் ரஷீக் ஆகியோர் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. அவ்வேளை இவ்வழக்கின் மூன்றாவது சாட்சியாளராக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா சாட்சியமளித்தார்.
பிரதி சொலிசிட்டர் ஜெனரல்
வசந்த நவரட்ண பண்டார, மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை நேற்றுக் குறுக்கு விசாரணை செய்தார். இதன்போது கேட்கப்பட்ட கேள்விகளும் பதில்களும் வருமாறு:
கேள்வி: ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாகவா நீங்கள் பணிபுரிகிறீர்கள்?
ப: ஆம்.
கே: உங்களது பணியை விளக்கமுடியுமா?
ப: இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தில் உயர் ஸ்தானிகருக்கு உதவியாகச் செயற்படுவதுடன் ஐக்கிய நாடுகள் சபையில், சமாதானத்தை ஏற்படுத்துதல் போன்ற பணிகளிலும் ஈடுபடுகிறேன்.
கே: நீங்கள் எப்போது இராணுவத்தில் இணைந்தீர்கள்?
ப: 1984ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5ஆம் திகதி இராணுவத்தின் விஞ்ஞான பிரிவில் இணைந்தேன்.
கே: அதன்பின்னர் என்னென்ன பொறுப்புக்களை வகித்தீர்கள்?
ப: நான் 1985ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் திகதி பயிற்சிபெறும் அதிகாரியாக இராணுவத்தின் விஞ்ஞானப் பிரிவில் இணைந்து, மேலதிக அதிகாரியாகச் செயற்பட்டேன். அதன் பின்னர் விசேட பிரிவுடன் இணைக்கப்பட்டேன். கஜபா படைப் பிரிவினருடன் யாழ்.குடாநாட்டுக்குச் சென்றேன். அங்கு நான் அப்படைப் பிரிவுக்குப் பொறுப்பான அதிகாரியாகச் செயற்பட்டேன். அதன்போது ஒரு சந்தர்ப்பத்தில் காயமடைந்தேன். பின்னர் ஒரு மாத காலம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றேன். அதன் பின்னர் நிறைவேற்று அதிகாரியாகவும், அப்படைப் பிரிவுக்குப் பொறுப்பான அதிகாரியாகவும் செயற்பட்டேன்.
அனைத்து படை நடவடிக்கைகளிலும் பங்கேற்பு அப்போது இலங்கையில் நடைபெற்ற அனைத்துப்படை நடவடிக்கைகளிலும் நானும் ஈடுபட்டேன். இலங்கையின் இராணுவப் பாடசாலை, விஞ்ஞானப் பிரிவு ஆகியவற்றின் ஆலோசகராகவும் செயற்பட்டேன். அப்போது பூநகரியில் இரண்டாவது கட்டளையிடும் அதிகாரியாகவும் இருந்தேன். யாழ்ப்பாணம் மீட்கப்பட்ட பின்னர் 5ஆவது படைப்பிரிவின் அதிகாரியாக இருந்து கிளிநொச்சி மீட்பின் போதும் செயற்பட்டேன். பின்னர் வன்னி மனிதாபிமான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டேன்.
கிழக்கில் ஏற்பட்ட சுமுகமற்ற நிலையின்போது அங்கும் சென்றேன். பின்னர் இராணுவத் தலைமையகத்துக்குத் திரும்பினேன். 2006ஆம் ஆண்டு செப்ரெம்பர் 13ஆம் திகதி 6 வருடங்களாகப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த முகமாலை மீட்கப்பட்டது. 2008ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி 58 ஆவது படைப்பிரிவின் கட்டளையிடும் அதிகாரியாகவும், இராணுவ கமாண்டர் பிரிவின் அதிகாரியாகவும் செயற்பட்டேன். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடக்கம் இன்றுவரை ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாகப் பணியாற்றி வருகின்றேன்.
கே: வன்னி மனிதாபிமான நடவடிக்கைகளில் இறுதிக் கட்டத்தில் நீங்கள் 58ஆவது படைப்பிரிவின் கட்டளையிடும் அதிகாரியாகச் செயற்பட்டுள்ளீர்கள். விசேடமாக புதுமாத்தளன் மனிதாபிமான நடவடிக்கை தொடர்பாகக் கூறமுடியுமா?
ப: வன்னி மனிதாபிமான நடவடிக்கை மன்னாரில் ஆரம்பமானபோது நானும் இருந்தேன். அதன் பின்னர் மன்னார் உள்ளிட்ட பல பகுதிகள் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டன. 2009ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி கிளிநொச்சியைக் கைப்பற்றியதோடு, ஆனையிறவு, விஸ்வமடு, புதுக்குடியிருப்பு, புதுமாத்தளன் ஆகிய பகுதிகளும் கைப்பற்றப்பட்டன.
புதுமாத்தளன் பகுதியில் விடுதலைப் புலிகளினால் ஒரு லட்சத்துக்கும் அதிகமான அப்பாவி மக்கள் தடுத்துவைக்கப்பட்டிருந்தார்கள். இராணுவத்தினரால் அவர்களைக் காப்பாற்ற முடிந்தது. உலகில் எங்கேயும் இடம்பெறாததும், பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து அதிகளவான அப்பாவி மக்கள் காப்பாற்றப்பட்ட சந்தர்ப்பமும் 58 ஆவது படைப் பிரிவினருக்கு கிடைத்தது. இராணுவத்தினரால் தவறு இழைக்கப்படலாம். கொலைகள் செய்யப்படலாம் என்று உலகம் எதிர்பார்த்துக்கொண்டிருந்தது.
கே: அதன்போது மனித உரிமை மீறப்பட்டது என்று ஏதாவது ஒரு சர்வதேச அமைப்பு குற்றஞ்சாட்டியதா?
மக்களைக் காப்பாற்றினோம்
ப: இல்லை. சாதாரண மக்களுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாதவாறு திட்டமிட்ட வகையில் செயற்பட்டு அவர்களைக் காப்பாற்றினோம்.
கே: 58ஆவது படைப்பிரிவு வன்னி மனிதாபிமான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது இராணுவத் தளபதியாகக் கடமை புரிந்தவர் யார்?
ப: இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா.
கே: வன்னி மனிதாபிமான நடவடிக்கையில் நீங்கள் கூறியது போன்று 58ஆவது படைப்பிரிவு விசேட பங்களிப்பை வழங்கியது. வன்னி நடவடிக்கையின்போது அன்றிருந்த இராணுவத் தளபதிக்கும் உங்களுக்கும் இடையே உறவு அல்லது தொடர்பு எப்படி இருந்தது?
ப: முரண்பாடுகள் இருக்கவில்லை. சிறந்த தொடர்பு பேணப்பட்டது.
கே: வன்னி மனிதாபிமான நடவடிக்கையின் இறுதி நாள் எப்போது?
ப: என்னைப் பொறுத்தவரையில் முழு இலங்கையும் பயங்கரவாதத்திலிருந்து மீட்டெடுக்கப்பட்ட 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதியே. இறுதி யுத்தம் இடம்பெற்று 50 மீற்றர் பரப்பளவுக்குள் பயங்கரவாதிகளை முற்றுகையிட்டோம். அப்போது இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்குத் தொலைபேசி ஊடாக அழைப்பை மேற்கொண்டு விடயத்தைக் கூறினேன். அதன் பின்னர் அவர் எனக்கு வாழ்த்துகளைத் தெரிவித்ததோடு களத்திலிருந்த படை அதிகாரிகளுக்கும் தனது வாழ்த்துகளைப் பரிமாறினார்.
கே: வன்னி மனிதாபிமான நடவடிக்கையின் இறுதி இரண்டு வாரங்களில் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா நாட்டில் இருந்தாரா?
ப: எனக்கு ஞாபகம் இருக்கின்ற வகையில், சரத் பொன்சேகா யுத்தம் நிறைவடைய 2 அல்லது 3 நாட்களுக்கு முன்னர் சீனா சென்றார். மே மாதம் 11ஆம் அல்லது 12ஆம் திகதி வெளிநாடு சென்று 17ஆம் திகதி மீண்டும் நாடு திரும்பினார்.
கே: வன்னி மனிதாபிமான நடவடிக்கைகளின் போது உங்கள் படைப்பிரிவுடன் ஊடகவியலாளர்களும் இருந்தார்களா?
ப: வன்னி மனிதாபிமான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் ஊடகவியலாளர்கள் எம்முடன் இருந்தார்கள். அதில் சிலர் எம்முடன் இறுதிவரை இருந்தனர். சிலர் குறுகிய நாட்களில் திரும்பினர். இன்னும் சிலர் காலை வந்து மாலை திரும்பினர். ஆனால் அவர்கள் அனைவரும் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் வந்திருந்தார்கள். தேசிய தொலைக்காட்சியான ரூபவாஹினி மற்றும் சுயாதீன தொலைக்காட்சி என்பனவற்றின் ஊடகவியலாளர்கள் இறுதுவரை எம்முடன் இருந்தனர்.
கே: வன்னி மனிதாபிமான நடவடிக்கைகளின்போது சரணடைதல் இடம்பெற்றதா?
ப: ஆம். முதன்முதலில் பெண் போராளி ஒருவர் இராணுவத்தினரிடம் சரணடைந்தார். அதன் பின்னர் மேலுமொரு பெண் போராளி சரணடைந்தார். பின்பு மூன்று போராளிகள் சரணடைந்தனர். அதில், ஆசிரியை ஒருவரும் இருந்தார்.
கே: விடுதலைப் புலிகளா சரணடைந்தார்கள்?
ப: ஆம்.
கே: இறுதிக்கட்டத்தின் போது சரணடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததா?
ப: ஆம்.
கே: சரணடைய வந்தவர்கள் வெள்ளைக் கொடிகளை ஏந்திய வண்ணமா வந்தார்கள்?
ப: இல்லை. வெள்ளைக்கொடிகளையோ கறுப்புக் கொடிகளையோ காட்டிக்கொண்டு அவர்கள் சரணடையவில்லை. சிலர் நிர்வாணிகளாக சரணடைய வந்தபோது இராணுவம் அவர்களையும் பொறுப்பேற்றது.
கே: அவ்வாறு சரணடைய வந்தவர்களை இராணுவம் சுட்டுக்கொன்றதா?
ப: இல்லை. நாங்கள் ஆரம்பம் முதல் இறுதி வரைக்கும் சிறப்பாகச் செயற்பட்டோம். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பலவந்தமாகப் புலிகளால் சிறைபிடிக்கப்பட்ட அப்பாவித் தமிழ் மக்களைக் காப்பாற்றினோம்.
கே: சரணடைந்தவர்களை என்ன செய்தீர்கள்.
ப: சரணடைந்தவர்களில் சிலர் தாங்கள் பொதுமக்கள் என்றும், சிலர் போராளிகள் என்றும் கூறினார்கள். ஆனால் நாங்கள் அவர்களைப் பொதுமக்கள் என்றே நோக்கினோம். சரணடைந்தவர்களுக்கு முதலில் தாகத்துக்கு தண்ணீர் கொடுத்தோம். பின்னர் முதலுதவி அளித்து உணவு வழங்கினோம்.
(இதனையடுத்து வழக்கு விசாரணை இன்று செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



0 Responses to வெள்ளைக் கொடிக்கு சவேந்திர சில்வா தரும் விளக்கம்! நடேசனுக்கு கேட்குமா?