அரசு கூட்டமைப்பின் மூன்றாம் சுற்று பேச்சுவார்த்தை பிற்போடப்பட்டது. நியமிக்கப்பட்ட உப குழுவின் மூலம் விரைந்து தீர்வு நோக்கிப் பயணிக்க முயற்சிக்கிறோம். ஆனால் அரசு காலத்தை இழுத்தடிக்கப் பார்க்கிறதா? என்று சந்தேகம் எழுகிறது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.இந்த உபகுழு அமைக்கப்பட்டு இடம்பெற்ற முதலாவது சந்திப்பில் மாதம் இருதடவைகள் கூடித் தீர்வு குறித்து ஆராய்வது என்று தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும் முதல் சந்திப்பு நடந்த ஒரு மாதகாலத்தின் பின்பே இரண்டாவது சந்திப்பு நடைபெற்றது.
மூன்றாவது சந்திப்பு ஒரு மாதம் கடந்த நிலையிலேயே நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் இப்போது பிற்போடப்பட்டுள்ளது.
இரண்டாவது சந்திப்பும் கூட திட்டமிடப்பட்ட திகதியில் நடக்கவில்லை. சந்திப்பில் கலந்துகொள்ளும் அமைச்சர்கள் வெளிநாடு செல்கின்றனர் என்று காரணம் கூறி பிற்போடப்பட்டது.
தற்போது உள்ளூராட்சி சபைத் தேர்தல் பணிகளில் அமைச்சர்கள் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவித்து சந்திப்பைப் பிற்போட்டுள்ளனர்.
தேர்தல் முடிந்த பின்பே சந்திப்பு எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் திட்டவட்டமான திகதி ஏதும் தெரிவிக்கப்படவில்லை.
உப குழுவின் செயலாளரின் அறிவிப்பை அடுத்து மாற்று ஏற்பாடு குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் குழுவில் இடம்பெற்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
உபகுழுவின் சந்திப்பை அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் தினத்தில் அல்லது நாடாளுமன்ற அமர்வு இடம்பெறும் தினத்தில் ஏற்பாடு செய்யுமாறும் சுமந்திரன் தனது கடிதத்தில் கேட்டுள்ளார்.
60 வருடங்களாக எத்தனையோ பேச்சுக்கள் நடந்தேறி விட்டன. பேச்சுக்களில் பல்வேறு விடயங்கள் பேசப்பட்டுள்ளன. இனியும் பேசிக்கொண்டிருப்பதால் பயன் இல்லை. விரைந்து தீர்வு காண்பதற்கான வழிமுறையை எட்ட வேண்டும். இதுவே இன்றைய தேவை என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இதேவேளை, நடைபெறவிருந்த மூன்றாம் சுற்றுப் பேச்சுவார்த்தையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்), தமிழர் விடுதலைக் கூட்டணி (ரீ.யூ.எல்.எவ்.), ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.) உள்ளிட்ட கட்சிகளும் கலந்து கொள்ளவிருந்ததாகத் தெரியவருகிறது.
இதேவேளை அரசு கூட்டமைப்பின் பேச்சின் முன்னேற்றத்தை சர்வதேசம் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கிறது. இந்தப் பேச்சு நல்லமுறையில் இடம்பெற்று நாட்டில் அமைதி ஏற்பட வேண்டும் என்பதிலும் சர்வதேசம் அக்கறையுடன் இருக்கிறது என இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



0 Responses to கூட்டமைப்புடனான 3ம் சுற்று பேச்சுவார்த்தை பிற்போடப்பட்டது!