இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்ய மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை மெமோரியல் ஹால் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கினார். அப்போது பேசிய அவர்,
1983ம் ஆண்டு முதல் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்படுவதும் சிறை பிடிக்கப்படுவதும் வாடிக்கையாகி விட்டது. இதற்கு சிங்கள அரசு மட்டுமே பொறுப்பு அல்ல. மத்திய அரசும் காரணமாகும். 112 மீனவர்களை கைது செய்த மறுநாளே மேலும் 37 மீனவர்கள் சிங்கள கடற்படையினரால் பிடித்து செல்லப்பட்டுள்ளனர்.
இதுவரை 400க்கும் மேற்பட்ட மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 700 பேர் மாயமாகி உள்ளனர். எனவே தி.மு.க. எம்.பி.க்கள் வெளியுறவு கொள்கையில் மாற்றம் கொண்டு வர பாராளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும். இதற்கு விடுதலை சிறுத்தைகள் இயக்கமும் உறுதுணையாக இருக்கும்.
தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இன்று சேர்ந்துள்ளதை வரவேற்கிறேன். விடுதலை சிறுத்தைகளும், பா.ம.க.வும் இடம் பெற்றுள்ள இக்கூட்டணி வரும் சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெறும் என்றார்.



0 Responses to தமிழக மீனவர்கள் சிறை பிடிக்கப்படுவதற்கு மத்திய அரசும் காரணம்: திருமாவளவன்