வெள்ளைக் கொடி விவகாரம் தொடர்பான வழக்கில் அரசாங்கம் மற்றும் பாதுகாப்புச் செயலாளருக்கெதிராக அதிரடி உண்மைகளை வெளியிட சரத் பொன்சேகா முடிவு செய்துள்ளதாக நீதிமன்ற வட்டாரங்களில் பரபரப்பாக பேசிக் கொள்ளப்படுகின்றது.வெள்ளைக் கொடி விவகாரம் தொடர்பான வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது விசேட வாக்குமூலம் ஒன்றை வழங்க தான் தயாராக இருப்பதாக சரத் பொன்சேகா அறிவித்துள்ளதைத் தொடர்ந்தே அந்தப் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.
அது மாத்திரமன்றி தமது தரப்பு சாட்சிகளாகப் பலரது பெயரையும் நீதிமன்றத்துக்கு வழங்கவுள்ளதாக அவரது வழக்கறிஞர் நீதிமன்றில் அறிவித்துள்ளார். விடயங்களைக் கவனத்திற்கொண்ட நீதிமன்றம் எதிர்வரும் ஒன்பதாம் திகதி வரை வழக்கைத் தள்ளி வைத்துள்ளது.
சரத் பொன்சேகாவுக்கு சிறைச்சாலையில் வெந்நீர் வசதி செய்து கொடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டும் இதுவரை அந்த வசதி செய்து கொடுக்கப்படாமை குறித்து இன்றும் நீதிமன்றில் அரச தரப்பு வழக்கறிஞரிடம் கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் இவ்வாறான அலட்சியப் போக்குகளால் துவண்டு போயுள்ள சரத் பொன்சேகா அரசாங்கத்துக்கெதிரான உண்மைகளை வெளியிட முன்வந்திருக்கலாம் என்று நீதித்துறை வட்டாரங்கள் பெரும் பரபரப்புடன் எதிர்பார்ப்பைக் கொண்டுள்ளன.
நீதிமன்றத்திலிருந்து மீண்டும் சிறைச்சாலைக்குச் செல்லும் வழி்யில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த சரத் பொன்சேகா, ராஜபக்ஷ பரம்பரை ஹம்பாந்தோட்டையை மட்டும் இலங்கையின் ஆச்சரியமாக மாற்றிக் கொண்டிருப்பதாகவும் நாட்டின் ஏனைய பிரதேச மக்கள் கற்கால வாழ்க்கைக்குத் தள்ளப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.



0 Responses to வெள்ளைக்கொடி வழக்கில் சரத் அரசாங்கத்துக்கு எதிராக உண்மையை வெளியிடப் போகின்றாரா?