Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் தாயார் அன்னை பார்வதியம்மாளின் இறுதிக்கிரியைகளில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்துவதற்குப் புறப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் படையினரால் இரும்புக்கரம் கொண்டு தடுக்கப்பட்டுள்ளனர்

இன்று நண்பகல் 11.00 மணியளவில் தனியார் பஸ் ஒன்றினை வாடகைக்கு அமர்த்தி, வல்வெட்டித்துறையில் நடைபெறும் அன்னை பார்வதியம்மாளின் இறுதிக்கிரியைகளில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்துவதற்குப் புறப்படத் தயாராக இருந்தவேளை, திடீரென வாகனங்களில் வந்திறங்கிய யாழ். பொலிஸ் தரப்பைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரிகளும், பொலிஸாரும் மாணவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மாணவர்களை பல வழிகளிலும் பொலிஸார் மிரட்டியதை அவதானிக்க முடிந்தது, மரணச் சடங்குக்குச் செல்கிறீர்களா? மரணமாணவர் உங்களுக்கு என்ன உறவு? என்று பொலிஸ் அதிகாரி ஒருவர் கேட்ட கேள்விக்கு மாணவர்கள் சார்பில் நாம் தமிழர்கள் - அன்னையின் பிள்ளைகள் என்று உணர்ச்சிப்பிரவாகத்துடன் பதிலளித்தனர்.

நீங்கள் எங்களை மீறிச் செல்வீர்களானால் கைது செய்யப்படுவீர்கள், தனிப்பட்ட முறையில் பிரச்சினைப் பட வேண்டி வரும் என்றெல்லாம் பொலிஸார் தம்மை மிரட்டியதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

மாணவர்கள் விட்டுக்கொடுக்காமல் வாக்கு வாதப்பட்டதைத் தொடர்ந்து, வாடகைக்கு அமர்த்தப்பட்ட வாகன சாரதியையும், உரிமையாளரையும் அழைத்து கைது செய்யப்படுவீர்கள் என்ற தொனியில் கடுமையாக எச்சரித்து வாகன உரிமையாளர் அவ்விடத்திலிருந்து வாகனத்துடன் அப்புறப்படுத்தப்பட்டார்.

இருந்த போதிலும் போயே தீருவோம் என்று மாணவர்கள் உறுதியுடன் கோசமிட்டனர்.பல்கலைக்கழக வாசலை மூடி பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இது இவ்வாறிருக்க பிரச்சினைகளைத் தவிர்க்கும் நோக்கில் துணைவேந்தர் பின கதவு வழியாக நளுவிவிட்டார் என மாணவர்கள் மன வருத்தத்துடன் கடிந்து கொண்டனர்.

இதேவேளை, சம்பவத்தை புகைப்படமெடுத்த மாணவர்களிடமிருந்து புகைப்படக்கருவிகளைப் பறித்தெடுத்த காவற்றுறையினர், சம்பவம் தொடர்பான புகைப்படங்களை அழித்த பின்னர் கருவிகளை மீளளித்ததையும் அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

யாழ்.பல்கலைக்கழக ஊடகவள நிலையம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்றுக்காக பல்கலைக்கழகத்துக்கு வருகைதந்திருந்த வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் இருவரும் நிகழ்வுகளைப் பதிவுகளாக்கியிருந்தனர்.




0 Responses to வீரத் தாய்க்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் அஞ்சலி செலுத்த தடை (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com