Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

"யாழ்ப்பாணத்தில் சங்கிலியன் காலத்திற்கு பிறகு சாதகமான பேரினப் பொருளாதாரக் கொள்கையை பின் வந்த அரசுகள் முன்வைக்கவில்லை" என வராலாற்று பொருளியல் பேராசிரியர்.வி.நித்தியானந்தத்தின் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. இம் முடிவுடன் உடன்படுவதாக யாழ் பல்கலைக்கழக பொருளியல் பேராசிரியர் வி.பி.சிவநாதன் கூறியுள்ளார்.

யாழ்ப்பாண சிந்தனைக் கூடத்தின் ஏற்பட்டில் "யாழ் மாவட்டத்ததை எவ்வாறு அபிவிருத்தி செய்யலாம்?" என்பது தொடர்பான செயலமர்வு ஒன்று இன்று காலை 10.30 மணியளவில் யாழ்.தியாகிகள் அறக்கொடை நிலைய மண்டபத்தில் இடம்பெற்றது. இங்கு "நிதி மற்றும் அபிவிருத்தி கொள்கைகள்" எனும் தலைப்பில் கருத்துரை வழங்கும் போதே வி.பி.சிவநாதன் இவ்வாறு தெரிவித்தார்.

வடகிழக்கு தமிழ் மக்கள் அரசியல் உரிமையை கேட்டதால் அரசு ஒதுக்கியதா? அல்லது தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் நாடாளுமன்றத்தில் குறைவாக உள்ளதால் ஒதுக்கப்பட்டார்களா? அல்லது ஏற்கனவே உள்ள தமிழர் பிரதிநிதிகள் கூட பொறுப்பு வாய்ந்த அமைச்சு பதவியை பெறாமையால் ஒதுக்கப்பட்டார்களா? என்ற கேள்விகள் எம்முன்னே உள்ளன.

அந்நியராட்சியின் போதோ அல்லது பேரினவாத அரசின் ஆட்சிகளின் போதோ வடகிழக்கின் வளங்களை நல்ல முறையில் பயன்படுத்தக் கூடியதாக இறை மற்றும் நாணயக் கொள்கைகள் வகுக்கப்படவில்லை. மாறாக இப்பிரதேச வளங்களை சுறண்டக் கூடியதாகவும், தமிழர்கள் தங்கிவாழ்வோராக மாறுவதற்கும் பொருத்தமான பொருளாதார கொள்கைகளே முன்வைக்கப்பட்டு வந்துள்ளன.

இனியாவது வடகிழக்கின் பொருளாதாரக் கொள்கை தொடர்பாக விழிப்படைய வேண்டும். குறிப்பாக தமிழ் சமூகம் நிலத்தினை சொந்தமாக வைத்திருப்பதற்குப் பொருத்தமான நில சீர்திருத்தம் அவசியம். எமது பிரதேச உற்பத்திகள் தொடர்பான விலை சமிஜ்ஜைகளை முறைப்படுத்தி வழங்க யாராவது முன்வரவேண்டும். பிரதேச இளம் பருவ கைத்தொழில்களிற்குப் பாதுகாப்பளிக்க வேண்டும். இவை தொடர்பான கொள்கை வகுப்பாளர்கள் "பொருளாதார காவல் நாய்கள்" என்பதற்கிணங்க செயற்பட வேண்டும்.

சந்தைப் பொருளாதார கொள்கையையே அரசு பின்பற்றுகிறது. இங்கு போட்டிச் சூழல் பொருளாதாரத்தை வளர்க்கும் தான். ஆனால் எல்லா விதத்திலும் நலிவுற்றுப் போய்விட்ட தமிழ் சமூகம் போட்டி போட்டு முன்னேறுவது எப்படி? இதனால் பொருளாதாரத்தாலும் தமிழர்கள் ஒதுக்கப்படுகின்றார்கள் என பேராசிரியர் வி.பி.சிவநாதன் கூறினார்.

இச்செயலமர்விற்கு யாழ்.அரசு சார்பற்ற நிறுவனங்களின் இணையம் அனுசரணை வழங்கியிருந்தது. இந்நிகழ்வில் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், அரசு, அரசு சார்பற்ற உத்தியோகஸ்தர்கள், அபிவிருத்தி ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

செய்தி - உதயன்

0 Responses to யாழ்ப்பாணத்தில் சங்கிலியன் காலத்திற்கு பிறகு சாதகமான பொருளாதார கொள்கை இன்னும் இல்லை - யாழ் பேராசிரியர்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com