Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அன்றாடம் கடலுக்குச் சென்று அகப்படும் மீனை விற்று அதனால் வரும் அற்ப சொற்ப வருமானத்தில் தமது குடும்பத்தினரின் வயிற்றுப் பசியினை போக்கி வரும் தமிழக மீனவர்களுக்கு சிறீலங்கா அரசு செய்து வரும் அக்கிரமம் முடிவின்றி தொடர்கிறது.

தமது அடிப் படை வாழ்வாதாரத்திற்காக மீன்பிடித் தொழிலைச் செய்து வரும் வறிய நிலையிலுள்ள தமிழக மீனவர்கள் சிறீலங்கா கடற்படையினரால் தொடர்ச்சியாக ஏற்படுத்தப்பட்டு வரும் துன்புறுத்தல்கள், கொலைகள் ஆகியவற்றினால் மரணபயமும், மனோவிரக்தியும் கொண்டு ள்ளனர். இருப்பினும் மீன்பிடித் தொழிலைத் தவிர வேறெவ்வித தொழில்களையும் செய்ய முடியாத நிலையில் தினமும் தமது உயிருக்கு என்ன ஆகுமோ என்ற பயத்துடனேயே தொழிலுக்குச் சென்று வருகின்றனர்.

இதுவரையில் ஐநூறு தமிழக மீனவர்கள் சிறீலங்கா கடற்படையினரால் கொல்லப்பட்டிருப்பதாக பத்திரிகை அறிக்கைகள் மூலம் தெரிய வந்துள்ளத. இக்கொலைகள் குறித்து சிறீலங்கா அரசு எத்தகைய விசாரணைகளையோ, நடவடிக்கைகளையோ மேற்கொள்ளாது அசிரத்தையுடன் நடந்து கொள்வது தமிழக மீனவ சமூகத்தினருக்கு மாத்திரமல்ல உலகத் தமிழர்களுக்கும் பெரும் கவலையையும், வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது.

இலங்கைத் தமிழர்களுக்கு அடுத்த படியாக சிறீலங்காப் படையினரால் பாரிய கொடுமைகளை அனுபவித்து வருபவர்கள் தமிழக மீனவர்களே என்பதனை உலகத் தமிழர்கள் நன்கறிவார்கள். எனவே இனத்தால் ஒன்றுபட்ட நாம் அவர்களுக்கு இன்னல்கள் ஏற்படுத்தப்படும் போது அதனைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது.

கடந்த மாத இறுதியில் இந்திய வெளிநாட்டு அமைச்சின் செயலாளர் நிருபாமா ராவ் சிறீலங்காவுக்கு விஜயம் செய்து தமிழக மீனவர்களை கைது செய்து துன்புறுத்த வேண்டாமென சிறீலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடமும் சம்பந்தப்பட்ட ஏனைய அதிகாரி களிடமும் நேரடியாகக் கோரியிருந்தார்.

கோரிக்கையை ஏற்றுக் கொண்டு அவர்களை துன்புறுத்த மாட்டோமெனப் பதில் அளித்த அரசு மீண்டும் தனது கொடுமையை நிகழ்த்தி உள்ளது. இவ்வாரம் தமது கடற் பிராந்தியத்தினுள் நுழைந்து மீன் பிடித்தாகக் கூறி பதினெட்டு இழுவைப் படகுகளோடு நூற்றிற்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை சிறீலங்கா அரசு கைது செய்து தடுத்து வைத்துள்ளது.

அதுமாத்திரமன்றி இலங்கைத் தமிழ் மீனவர்களே அவர்களைக் கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்தததாகவும் செய்தி வெளியிட்டுள்ளது. தாமே தவறினைச் செய்து விட்டு அதனை இலங்கைத் தமிழ்மக்கள் மீது சுமத்தியதன் மூலம் இலங்கைத் தமிழர்களுக்கும், இந்திய தமிழ் மக்களுக்குமிடையே பகைமையைத் தோற்றுவித்து அவர்களிடையே பிரிவினையை ஏற்படுத்தவும் முயல்கின்றது.

கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற தமது கணவன்மார்கள் எப்போது திரும்பி வருவார்கள் என எதிர்பார்த்திருந்த மனைவியர்கள் மீன் பிடிக்கச் சென்ற கணவன்மார்கள் சிறீலங்கா அரச படையினரால் பிடிக்கப் பட்டுள்ளனர் என்ற செய்தியைக் கேட்டு தலையிலடித்துக் குளறி அழுதனர். அவர்களது துயரைத் துடைக்க உலகத் தமிழர்கள் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும். அவர்களது துயரில் நாம் பங்கு கொண்டு அவர்களைப் பாதுகாக்க நிரந்தரமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென வலியுறுத்துகின்றோம்.

தமிழராய் இருந்தால் அவர்களை எவரும் எப்படியும் துன்புறுத்தலாம் என்ற துர்ப்பாக்கிய நிலையே கடந்த பல தசாப்தங்களாக இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தொடர்ந்து வருகின்றது.

மனித உரிமைகளுக்காகவும், மக்களை கொலை அச்சுறுத்தலில் இருந்து காப்பாற்றுவதற்காகவும் குரல் கொடுத்து வரும் சர்வதேச அமைப்புக்கள் தமிழக மீனவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த அடாவடித் தனத்தை அடியோடு ஒழிப்பதற்கு இந்திய அரசுடன் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குடும்பத்தவர்களிடம் இருந்து பிரித்து தடுத்து வைக்கப் பட்டிருக்கும் தமிழக மீவர்களை உடனடியாக விடுதலை செய்து இந்தியாவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என கனடா விலுள்ள தமிழ் காங்கிரஸ் பேரவையின் பேச்சாளரான டேவிட் பூபாலபிள்ளை வலியுறுத்தி உள்ளதோடு தமிழக மீனவர்களை தொடர்ந்தும் இம்சித்து வரும் சிறீலங்கா அரசின் அக்கிரமச் செயலை வன்மையாகக் கண்டித்தும் உள்ளார்.

கனடியத் தமிழர் பேரவை

0 Responses to தமிழக மீனவர்களை கொடுமைப்படுத்தி கொலையும் செய்யும் சிறீலங்கா அரசின் அக்கிரமம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com