சர்வதேசம் என்பது வாய்ப்பா இல்லை வாய்க்கரிசியா சிறீலங்கா எதைத் தேர்வு செய்யப்போகிறது...சிறீலங்கா அரசைப்போல சர்வதேச சட்டங்களை மதித்து நடக்கும் நல்ல பிள்ளை அரசை எங்கும் பார்க்க முடியாது என்று வெளிநாடுகள் பல வருடங்களாக நம்பி வருகின்றன. பின்லாடனைப் பிடிக்க பயங்கரவாத சட்டத்தைக் கொண்டுவந்தபோது அதைத் தலைமேல் வைத்து கூத்தாடியது சிறீலங்கா அரசு. அதை வைத்து புலிகளையும் ஒரு பயங்கரவாத அமைப்பென முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் காலஞ்சென்ற கதிர்காமர் உலகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வந்தது பழைய கதை.
பின்னர் புண்ணியவான் எரிக் சோல்கெய்ம் வந்த பிறகு புலிகள் பயங்கரவாத பட்டியலில் சேர்க்கப்பட்டார்கள். அப்போது அதை சிங்கள இனவாத அரசு இரு கரம் கூப்பி வரவேற்றுக் கொண்டது. தேசப்பற்றுள்ள இயக்கம் வெடி கொழுத்தி கொண்டாடியது. அடடா இதுவல்லவோ நாடு சர்வதேச சட்டங்களை எப்படி மதிக்கிறது என்று ஐ.நா மயிர்க்கூச்செறிந்தது..
இப்போது
அன்று புலிகள் மீது பயங்கரவாதப் பட்டம் சூட்டிய அதே சர்வதேச சமுதாயம் சிறீலங்கா இனவாத அரசு போர்க்குற்றம் புரிந்துள்ளது என்று கூறுகிறது. இப்போது மட்டும் சிறீலங்காவும், தேசப்பற்றுள்ள இயக்கமும் ஏன் அதை ஏற்க மறுக்க வேண்டும். முன்னரைப்போல இரு கைகூப்பி அதை ஏற்றுக் கொள்ள வேண்டியதுதானே.
சர்வதேச குற்றவாளிக்காக பேசுவதா தேசப்பற்று…. இல்லையே..!?
புலிகளை பயங்கரவாதிகள் என்றபோது சர்வதேச சமுதாயம் நல்ல சமுதாயமாகவும், அதே சர்வதேச சமுதாயம் சிறீலங்கா அரசு மீது போர்க்குற்றம் சுமத்தும்போது வேண்டப்படாத சமுதாயமாக இருப்பதும் ஏன்..?
யோசித்துப் பார்த்தால் பலத்த முரண்பாடு தெரிகிறதல்லவா..?
இதுதான் சிறீலங்கா அரசின் இனவாதம் ! – சர்வதேச சமுதாயம் அதை இப்போது தெளிவாக அடையாளம் காண ஆரம்பித்துள்ளது.
அன்று வன்னியில் நடந்தது..
கொலைஞர்களே வெட்கும் படுகொலை வக்கிரம்..
இசைப்பிரியாவின் அலறல் சர்வதேசத்தின் காதுகளைப் பிளந்துள்ளது.. !
இது மட்டுமா..
ஐ.நாவின் அறிக்கையில் புலிகள் மீதும் குற்றச்சாட்டப்பட்டுள்ளது. இப்போது பெரும்பாலான புலிகள் சிறீலங்காவின் தடுப்பு முகாம்களில்தான் இருக்கிறார்கள். அவர்களை அப்படியே விமானத்தில் ஏற்றி சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றுக்கு அனுப்பி வைப்பதுதானே.. ஏன் அனுப்பவில்லை.. நீங்கள்தானே புத்த தர்மம் காக்கும் நல்ல பிள்ளைகளாச்சே எதற்குத் தாமதம்..?
ஆனால் சிறீலங்கா அரசு அதைச் செய்ய மாட்டாது..!
ஏன் அவர்கள் மீது அத்தனை பாசமா..?
இல்லை..
புலிகளை அனுப்பினால் என்ன நடக்கும்…
அவர்கள் போர்க்குற்ற நீதி மன்றில் சாட்சியம் சொன்னால் சிறீலங்கா இனவாத அரசும், அதற்கு துணைபோனவர்களும் அடுத்த விமானத்தில் அம்ஸ்ரடாம் போயிறங்க வேண்டி வரும். பின் ஹேக் நீதிமன்றுக்கு காரில் போகலாம்.
ஆக..வரும் நாட்களில்…
தம்மிடம் புலிகளே இல்லை என்று சிறீலங்கா சொன்னாலும் ஆச்சரியப்பட எதுவும் இல்லை..
கூட்டமைப்புக்கு புலிகளின் லிஸ்ற் கொடுக்காமல் டிமிக்கிவிட்டதற்கு முக்கிய காரணம் இதுவே.
இப்படி..
புலிகள் பயங்கரவாதிகள் என்று ஒப்புக்கொண்டு அவர்களை ஒல்லாந்து ஏற்றி வைக்க முடியாமலும், மறுபுறம் தாமும் போர்க்குற்றவாளிகள் என்பதை ஏற்று விமானம் ஏற முடியாமலும் தடுமாறுகிறது சிங்கள அரசு.
இவ்வாறு..
முற்று முழுதான குழப்பகரமான சர்வதேச பொறிக்கிடங்கில் சிங்கள அரசை யாரோ சிக்குப்பட வைத்துவிட்டார்கள்.
யார் அந்தக் கறுப்பு ஆடு.. !?
யாரோ ஒரு ஆடு செய்த வேலைக்கு சூடு வேண்டுவது பாவம் தமிழக மீனவர்களே..!
2001 ல் பயங்கரவாத பட்டியல்கள் அறிமுகமானபோது அதை வாய்ப்பாக பயன்படுத்தியது சிங்கள அரசு..
அன்று அது அவர்களுக்கு வாய்ப்பு…
இன்று…
2011 ல் புதியதோர் சட்டம் சிறப்புப் பாவனைக்கு வந்துள்ளது.
1973ம் ஆண்டு ஐ.நாவில் இயற்றப்பட்ட சட்டத்தின் பிரகாரம் சொந்த மக்கள் மீது தாக்குதல் நடாத்தும் அரசு போர்க்குற்ற நீதிமன்றை சந்தித்தாக வேண்டும் என்று கூறுகிறது.
இந்தச் சட்டம் சிறீலங்காவிற்கு அன்று போல வாய்ப்பானது அல்ல : அதற்கு வாய்க்கரிசி போன்றது.
நேற்று முன்தினம்..
அமெரிக்காவில் உரையாற்றிய அமெரிக்காவின் ஐ.நா பிரதிநிதி சுசேனா றைஸ் இந்தப் புவிப்பந்தில் யார் போர்க்குற்ற மீறலை செய்தாலும் அவரை இனி தப்பவிட முடியாது என்று அழுத்தம் திருத்தமாகக் கூறியுள்ளார்.
சென்ற வாரம்..
வன்னியில் ஒரு வாரத்தில் 70.000 பேர் கொல்லப்பட்டதாக செய்தி ஒன்று கூறியது. அவர்கள் அனைவரும் பொது மக்களே என்றும் தெரிவித்தது. அந்தக் கொலைக்கு யார் காரணமாக இருந்தாலும் அவர்கள் சர்வதேச சட்டத்தை சந்திப்பதே முறை. சுசேனா றைஸ் சொன்னதைப் போல அவர்கள் தப்புவதற்கு வாய்ப்பிருப்பதாக தெரியவில்லை.
இந்த இக்கட்டான நிலையில்..
அனைத்து குற்றவாளிகளையும் ஒல்லாந்து ஹேக் சர்வதேச விசாரணை நீதிமன்றுக்கு அனுப்பி சிறீலங்கா சர்வதேச நெறி முறைகளை பின்பற்றுவதே அதன் அதி உத்தமமான மகாவம்ச கொள்கைக்கு ஏற்றது. தமிழர், சிங்களவர், முஸ்லீம்கள், இந்தியர் என்ற பேதம் சட்டத்திற்குக் கிடையாது போர்க்குற்றத்தை செய்த அனைவரும் சர்வதேச விசாரணைகளை சந்திப்பதே எதிர் காலத்திற்கு நல்லது.
வரும் காலம் துப்பாக்கிகளை தூக்க முயல்வோருக்கு வாய்பாக இல்லை..
அதுபோல
முன்னர் துப்பாக்கியை தூக்கிய இனவாத அரசுகளுக்கும் அது வாய்ப்புடையதாக இல்லை..
உலகம் மாறுகிறது.. அதற்கு நாம் அதைவிட வேகமாக தயாராக வேண்டும் என்று ரொனி பிளேயர் சென்ற மாதம் தெரிவித்திருந்தார். சிறீலங்கா இனவாத அரசும் இதற்கு விதிவிலக்கல்ல..
அன்று சிறீலங்கா இனவாதத்திற்கு சார்பாக அடித்த காற்று இன்று மாறி வீசுகிறது.. சிங்கள இனவாத ஆட்சி இன்று புயலில் சிக்குண்ட பாய்க்கப்பலாக நிற்கிறது.. சொந்த சக்தியில் ஓடாத கப்பல் புயலை சந்திப்பது தவிர்க்க முடியாததே.
வாய்ப்பை பயன்படுத்தியவர் எல்லாம் வாய்க்கரிசி தின்றதே வரலாறு !
அலைகள் சர்வதேச விவகாரப் பிரிவு 17.04.2011
அலைகள்



எம் இனத்தை கறுவருத்தவர்கள் நீதிக்குமுன் கொண்டு செல்லப்பட வேண்டும். சர்வதேசம் தமது சுயநலன்களுக்காக சட்டங்களை மற்றிக் கொண்டிருக்கும். இது சந்தர்ப்பம் அனைத்து உலகமும் ஒன்று சேர்ந்து கொடூர கொலைவெறியனை மின்சார நாட்காலியில் ஏற்ற வேண்டும். அதுவே ஒவ்வோரு மானத்தமிழனின் உறுதியான இலட்சியம். இனியும் இது போன்ற இனவழிப்புகள் இப் பூமிப்பந்தில் நடைபெறாது தடுக்க இச் சந்தர்ப்பம் உதவும்.