2009 ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட மக்களையும், போரில் வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களையும் நினைவுகூர்ந்து பிரித்தானியாவில் ஆத்மசாந்தி பூஜையும், இரத்ததானமும் இடம்பெற்றது.
நேற்றைய தினம் (20-05-2011) வெள்ளிக்கிழ்மை மாலை பிரித்தானியாவின் லெஸ்ரர் பகுதியில் உள்ள முருகன் ஆலயத்தில் இந்த ஆத்மசாந்தி பூசை இடம்பெற்றது.
இந்த ஆத்மசாந்தி பூசையை பிரித்தானியத் தமிழர் ஒன்றியத்தினர் ஏற்பாடுசெய்திருந்தனர். இதில் அப்பகுதியை சேர்ந்த பெருமளவான மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.
ஆத்மசாந்தி பூசையின் நிறைவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சர் திரு. தணிகாசலம் தயாபரன் அவர்கள் முள்ளிவாய்க்கால் பேரவலத்தை நினைவுகூர்ந்து உரையாற்றினார்.
கொடிய போரின் பின் தாயகத்தில் மக்கள் படும் அவலங்களையும், தொடர்ந்தும் தமிழர் வாழ்விடங்களும், கலாச்சாரங்களும் அழிக்கப்பட்டு வருவதையும் எடுத்துக்கூறிய தயாபரன் அவர்கள் புலம்பெயர்ந்து வாழும் மக்கள் தான் அவர்களை தாங்கிநிற்க வேண்டும் என்றும் கூறினார்.
இங்கு எவரிடமும் பணத்தைக் கொடுக்கவேண்டியது இல்லை என்றும் நீங்களே அங்குள்ள மக்களோடு நேரடித் தொடர்புகொண்டு அவர்களின் தேவை அறிந்து செயற்படுமாறும். குறிப்பாக மன உளைச்சலுக்குள் உள்ளாகியுள்ள அம்மக்களோடு அடிக்கடி கதைத்து ஆறுதல் வார்த்தைகள் கூறி அவர்களை தேற்றுமாறும் வேண்டிக்கொண்டார்.
எது நடந்தாலும் என்றும் உங்களோடு நாம் இருக்கின்றோம் என்ற நம்பிக்கையை தாயகத்தில் வாழும் எம் உறவுகளுக்கு ஏற்படுத்தி அவர்களின் எதிர்காலம் சிறக்க பாடுபடவேண்டியதே புலம்பெயர்ந்த தமிழர்களின் கடமையாக உள்ளது என்றும் கூறினார்.
ஆத்மசாந்தி பூசையின் இறுதியில் முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் படுகொலைசெய்யப்பட்ட மக்கள் நினைவாக இரண்டுநிமிட அகவணக்கத்தோடு நிறைவுபெற்றது.
அதே வேளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஒழுங்கமைப்பில் முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் படுகொலைசெய்யப்பட்ட மக்களின் நினைவாக பிரித்தானியாவில் நான்கு இடங்களில் மக்கள் சென்று இரத்ததானம் வழங்கியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.



0 Responses to முள்ளிவாய்க்கால் - இரத்ததானமும், ஆத்மசாந்தி பூசையும்