இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான நிபுணர் குழு அறிக்கை மனித உரிமைப் பேரவையிடம் ஒப்படைக்கப்படவில்லை என ஐ. நா. பொதுச் செயலாளர் பான் கீ மூனின் பேச்சாளர் மார்ட்டின் நெசர்க்கி தெரிவித்துள்ளார்.
நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு வழிகோலும் வகையில் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவை மற்றும் மனித உரிமைப் பேரவை ஆகியவற்றிடம் நிபுணர் குழு அறிக்கை இதுவரையில் ஒப்படைக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன் காரணமாக எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் அமர்வுகளின் போது இவ்விடயம் தொடர்பிலான கலந்துரையாடல்கள் நடைபெறாது என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்த விசாரணைகளின் பின்னர் தருஸ்மான் குழுவினால் வெளியிடப்பட்டுள்ள நிபுணர்குழு அறிக்கை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் ஆராய்ந்து வருகின்றார்.
அத்துடன் தொடர்ந்தும் இலங்கை அரசாங்கத்தின் பதிலை ஐக்கிய நாடுகள் அமைப்பு எதிர்பார்த்திருப்பதாகவும் மார்ட்டின் நெசர்க்கி கருத்து வெளியிட்டுள்ளார்.



0 Responses to நிபுணர் குழு அறிக்கை மனித உரிமைப் பேரவையிடம் ஒப்படைக்கப்படவில்லை