தென்னிலங்கையில் காணாமல்போனவர்கள் தொடர்பில் அன்றைய அரசுக்கு எதிராக ஜெனிவா சென்ற மகிந்த ராஜபக்ச, இன்று தமிழ் பெற்றோர் தமது பிள்ளைகள் காணாமல்போனது தொடர்பில் வேறு ஒரு நாட்டிடம் முறையிடுவதை அவர் ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார் என ஐ.எம்.ஏ.டி,ஆர் என்ற அரசசார்பற்ற நிறுவனத்தின் தலைவர் நிமல்கா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.கொழும்பைத் தளமாகக் கொண்ட ஜப்பான் நாட்டின் அனுசரணையுடன் இயங்கும் ஐ.எம்.ஏ.டி,ஆர் என்ற அரசசார்பற்ற நிறுவனத்தின் தலைவர் நிமல்கா பெர்னாண்டோ கடந்த 24 ஆம் நாள் கொழும்பில் இருந்து வெளிவரும் ராவய பத்திரிகைக்கு அவர் வழங்கிய நீண்ட நேர்காணலின் தமிழ் வடிவம் வருமாறு:
இரு தரப்பும் மரபு வழியிலான போரிலேயே ஈடுபட்டிருந்தனர், எனவே அங்கு நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பில் ஒரு புரிந்துணர்வை அடைவது நிபுணர் குழுவுக்கு கடினமானதாக இருந்திருக்கலாம்.
சிறீலங்கா அரசுக்கு எதிராக கூறப்படும் குற்றச்சாட்டுக்களை புலம்பெயர் தமிழ் மக்கள் மட்டும் தெரிவிக்கவில்லை. பல மனிதநேய அமைப்புக்களும் முன்வைத்துள்ளன. அங்கு மனிதநேயப் பணிகள் தடுக்கப்பட்டுள்ளன, வைத்தியசாலைகள் மீது குண்டுகள் வீசப்பட்டுள்ளன, பொதுமக்களின் வாழ்விடங்கள் மீது எறிகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
மரபுவழியிலான போரின்போது ஜெனீவா சட்டவிதிகள் பின்பற்றப்படவேண்டும். ஆனால் சிறீலங்காவில் அது பின்பற்றப்பட்டதா என்பது தொடர்பிலான விசாரணைகள் அவசியமானது. இது நாட்டின் இறைமையை பாதிக்கும் விசாரணை அல்ல.
இனஅழிப்பு மீண்டும் நடைபெறக்கூடாது என்பதற்காக இந்த சட்டம் இரண்டாம் உலகப்போரின் பின்னர் கொண்டுவரப்பட்டது. ஐ.நாவினால் எடுக்கப்படும் பல முடிவுகள், அமெரிக்காவின் நலன் சார்ந்ததாகவே இருப்பது வழக்கம். ஆனால் தற்போது ஐ.நாவை தூற்றும் மகிந்தவும், வாசுதேவாவும், 1989 ம் ஆண்டு காணாமல் போனவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை கொண்டு ஐ.நாவின் படி ஏறியவர்கள் தான். நாம் வரலாற்றை மறந்துவிடவில்லை.
போரின் போது மனிதாபிமான அமைப்புக்களை வெளியேறுமாறு சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டிருந்தது. ஊடகவியலாளர்கள் அங்கு அனுமதிக்கப்படவில்லை. எனவே தான் வன்னியில் நடைபெற்ற போர் என்பது “சாட்சிகள் அற்ற போர்” என அழைக்கப்படுகின்றது.
வன்னியில் 70,000 மக்கள் இருப்பதாகவே சிறீலங்கா அரசு தெரிவித்திருந்தது. ஆனால் போரின் பின்னர் 300,000 மக்கள் வெளிவந்துள்ளனர். எனவே அரசு ஏன் உண்மையான தகவல்களை மறைத்தது என்பது தொடர்பிலும் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளது.
மேலும் பலர் தமது கணவர்களையும், பிள்ளைகளையும் சிறீலங்கா இராணுவத்தின் காவலரண்களிலேயே பறிகொடுத்துள்ளனர். தற்போது அவர்கள் எங்கே என கேள்வி எழுப்பிவருகின்றனர். வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பிலும் சிறீலங்கா அரசிடம் பதில் இல்லை. சரணடைந்தவர்கள் எவ்வாறு மரணமடைந்தனர் என்பது தொடர்பிலும் சிறீலங்கா அரசிடம் ஆதாரங்கள் இல்லை.
விடுதலைப்புலிகளும் மனித உரிமை மீறல்களை மேற்கொண்டிருக்கலாம். ஆனால் அவர்களில் பலர் தற்போது சிறீலங்கா அரசுடன் இணைந்து இயங்கிவருகின்றனர். சிலர் சிறீலங்கா அரசில் முக்கிய பதவிகளிலும் உள்ளனர். எனவே குற்றம் செய்தவர்கள் அரசின் பக்கம் தாவினால் சாதாரண மக்கள் ஆகிவிட முடியுமா? மகிந்த சிந்தனை என்பது அதுவா?
நல்லிணக்க ஆணைக்குழு என்பது சிறீலங்காவில் முன்னர் அமைக்கப்பட்ட 2 அல்லது 3 குழுக்களைப் போன்றதே. முன்னர் அமைக்கப்பட்ட குழுக்களின் அறிக்கைகள் கூட வெளியிடப்படவில்லை. பாதிக்கப்பட்ட எவருக்கும் நீதி வழங்கப்படவில்லை. மகிந்தவால் நன்கு திட்டமிட்டு தெரிவுசெய்யப்பட்ட நபர்களே நல்லிணக்க ஆணைக்குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் அந்த குழு விசாரணைகளை மேற்கொள்ளவில்லை. மாறாக போர்நிறுத்த காலத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் தான் அது ஆய்வுகளை மேற்கொள்கின்றது. முன்னைய அரசுகளில் குற்றம் காண்பதே அதன் நோக்கம். இந்த குழுவின் முன் சாட்சியமளிக்க முன்வந்த வடக்கு – கிழக்கு மாகாணங்களை சேர்ந்த மக்களில் பலருக்கு அனுமதிகள் வழங்கப்படவில்லை.
சாட்சியம் அளித்தவர்களும் மிரட்டப்பட்டுள்ளனர். சந்திரிக்கா பண்டாரநாயக்காவின் காலத்தில் அமைக்கப்பட்ட காணாமல் போனவர்கள் தொடர்பான ஆணைக்குழுவில் மக்கள் இராணுவத்தினரின் அழுத்தங்கள் இன்றி சாட்சியமளிக்க முடிந்தது. ஆனால் நல்லிணக்க ஆணைக்குழு அவ்வாறனது அல்ல. எனவே தான ஐ.நா நிபுணர் குழு அதனை புறக்கணித்துள்ளது.
ஆனால் புலம்பெயர் தமிழ் சமூகம் ஐ.நா நிபுணர் குழுவை தவறாக வழிநடத்தியுள்ளதாக சிறீலங்கா அரசு தெரிவிக்கின்றது. ஆனால் ஐ.நா போன்ற அமைப்புக்களை நாம் தவறாக வழிநடத்த முடியாது என்பதை நாம் மறக்கக்கூடாது. ஐ.நா அறிக்கையின் மூலம் சிறீலங்கா அரசு அனைத்துலக நீதிமன்றத்திற்கு இழுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துவரும் சிறீலங்கா அரசு மக்களை தவறாக வழிநடத்திவருகின்றது.
அது ஒரு தவறான பிரச்சாரம். அறிக்கையில் அவ்வாறு தெரிவிக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட பல நூறு மக்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்பதே அறிக்கையின் நோக்கம். போரில் பாதிக்கப்பட்ட மக்கள் தமது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவே விரும்புகின்றனர்.
அறிக்கையை நிராகரிப்பது என்பது பல ஆயிரம் பெண்களினதும், குழந்தைகளினதும் கண்ணீரை நிராகரிப்பதற்கு நிகரானது.
சிறீலங்கா அரசு ஐ.நாவுக் எதிராக செயற்படுகின்றதோ இல்லையோ, ஐ.நாவின் செயற்பாடுகளை நிறுத்த அவர்களால் முடியாது. நிபுணர் குழு அமைக்கப்பட்டபோது விமல் வீரவன்ச மேற்கொண்ட உண்ணாவிரதத்திற்கு என்ன நடந்தது? அவரால் நிபுணர் குழுவின் நியமனத்தை நிறுத்த முடியவில்லை.
அறிக்கையை நிராகரிப்பதற்கு நாம் எவ்வளவு பொய்களை அனைத்துலக சமூகத்தின் முன் கூறப்போகிறோம். எனவே அறிக்கையை இறைமை, மற்றும் இனத்துவேசத்துடன் பார்க்கக்கூடாது.
கோத்தபாய வெளிப்படையாகவே ரஸ்யா, சீனாவிடம் உதவிகளை கோருகின்றார். அது சிறீலங்காவை மேலும் நெருக்கடிக்குள் தள்ளும். இந்தியா, சீனா மற்றும் ரஸ்யா ஆகியன நாடுகளும் நெருக்கடிக்குள் உள்ள நாடுகளே. இந்தியாவிடம் உதவிகளை கேட்பதாக கோத்தபாய தெரிவிக்கவில்லை. மேலும் இந்த அறிக்கையை அரச தலைவரே விடுக்க முடியும். ஆனால் ஒரு செயலாளர் எவ்வாறு இவ்வாறு ஒரு அறிக்கையை விடுக்க முடியும்?
அரச தலைவர் அறிக்கையை விடுவதாக இருந்தாலும், அமைச்சரவையில் விவாதித்த பின்னரே இவ்வாறான ஒரு அறிக்கையை விடுக்கமுடியும். அரசின் இந்த நடவடிக்கை அனைத்துலக சமூகத்திடம் எதிர்மறைவான விளைவுகளையே ஏற்படுத்தும்.
சிறீலங்கா அரசே ஒரு விசாரணைக்குழுவை அமைக்கவேண்டும். எல்லா வன்முறைகளையும் விசாரணைசெய்ய வேண்டும். விசாரணைக்குழுவில் தமிழ் மக்களும் இடம்பெறவேண்டும். ஐ.நா அல்லது வேறு அமைப்புக்களும் அதில் பங்கு வகிக்கலாம். அதுவே சுயாதீன, காத்திரமான விசாரணைகளை மேற்கொள்ளும் முறை. பாதிக்கப்பட்ட மக்கள் சுதந்திரமாக பேச அனுமதிக்கப்படவேண்டும்.
இதனை விடுத்து சிறீலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்போவதாக பிரச்சாரப்படுத்துவது மிகவும் கேவலமானது. ஒருவர் கொல்லப்பட்டால் அல்லது காணாமல் போனால் அது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கோருவது எவ்வாறு தவறாகும்?
1990 களில் மகிந்த ராஜபக்ச ஜெனீவாவுக்கு சென்றிருந்தார். ஏனெனில் தென்னிலங்கையில் காணாமல் போனவர்கள் தொடர்பில் அன்றைய அரசு விசாரணை நடத்தவில்லை என்பதற்காக.
ஆனால் தற்போது தமிழ் பெற்றோர் தமது பிள்ளைகள் காணாமல் போனது தொடர்பில் வேறு ஒரு நாட்டிடம் முறையிடுவதை அல்லது ஆதாரங்களை சமர்ப்பிப்பதை அவர் ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்? என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



0 Responses to அன்று நீதி கேட்டு ஜெனிவா சென்ற மஹிந்த இன்று அதற்கு எதிராக செயற்படுகிறார்!: நிமல்கா