இந்திய ஆட்சியாளர்கள் ஈழத் தமிழர்களைப் பற்றி கவலைப்படுவதில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஆர். நல்லகண்ணு தெரிவித்துள்ளார்.
ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் ஐநா அறிக்கை குறித்து மத்திய அரசு உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூரில் தமிழ்வெளி இலக்கிய அமைப்பு சார்பில், இலங்கையில் ஈழத் தமிழர்களை இனப் படுகொலை செய்த இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்கக் கோரி ஐநாவை வலியுறுத்தி கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஆர். நல்லகண்ணு,
ஈழத் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டில் உள்ள தாய்த் தமிழர்களுக்கும் பல்வேறு பிணைப்புகள் உண்டு. இந்தியாவுக்குப் பிறகு சுதந்திரம் பெற்ற இலங்கை தொடக்கத்தில் இருந்தே அங்குள்ள ஈழத் தமிழர்களை அழிப்பதில் முனைப்புக் காட்டி வருகிறது. அவர்களுக்கான உரிமைகளை மறுத்ததோடு அவர்களை அழிக்கவும் செய்து வருகிறது.
இலங்கையில் நடைபெற்ற போர் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை வெளியாகி இருக்கின்ற இந்த சமயத்தில், கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் ஈழத் தமிழர்களுக்காக என்ன செய்தன என்பதை திரும்பிப் பார்க்க வேண்டும்.
தமிழர்களுக்குச் சொந்தமான கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்ததால், இன்றளவும் தமிழக மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இலங்கை அரசு நடத்திய சூதாட்டத்தில் தமிழர்கள் பலியாகி விட்டார்கள். இந்திய ஆட்சியாளர்கள் ஈழத் தமிழர்களைப் பற்றி கவலைப்படுவதில்லை.
ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை குறித்து மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ் மக்கள் இணைந்து நின்று குரல் கொடுத்து கொடுங்கோல் ஆட்சியை தனிமைப்படுத்தி ஈழத் தமிழர்களுக்கு வாழ்வு கிடைக்க வழி ஏற்படுத்த வேண்டும் என்றார்.
ஈழத் தமிழர்களைப் பற்றி இந்திய ஆட்சியாளர்கள் கவலைப்படுவதில்லை: நல்லகண்ணு
பதிந்தவர்:
Anonymous
30 May 2011



0 Responses to ஈழத் தமிழர்களைப் பற்றி இந்திய ஆட்சியாளர்கள் கவலைப்படுவதில்லை: நல்லகண்ணு