இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு கண்டு தமிழர்களுடன் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ளாது மெத்தனப் போக்கை மஹிந்த ராஜபக்ஷ அரசு கடைப்பிடிக்கிறது என்று எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று டில்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்..
இரண்டு நாள் பயணமாக இந்தியா சென்ற ரணில், புதுடில்லியில் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார்.
இந்தியாவில் தங்கியிருந்து ரணில் விக்கிரமசிங்க நேற்று முன்தினம் காலை இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, வெளியுறவுச் செயலர் நிருபமாராவ், எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் ஆகியோரைச் சந்தித்து இலங்கைப் பிரச்சினை தொடர்பாக பேச்சு நடத்தினார்.
நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பு திரும்பு முன்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்திருந்தார்.
அப்போது அங்கு அவர் தெரிவித்ததாவது:
இலங்கைத் தமிழர்களுக்கு ஆட்சியில் அதிகாரப் பகிர்வு அளிக்க வகை செய்யும் இலங்கை அரசமைப்புச் சட்டத்தின் 13வது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை அரசு உறுதி அளித்திருந்தது.
ஆனால், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வாக்குறுதியை நிறைவேற்றுவதில் கால தாமதம் செய்து வருகிறார்.
போரால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் தங்களது வீடுகளுக்குத் திரும்பும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று இலங்கை அரசு கூறியது. ஆனால், மறுசீரமைப்பு பணிகள் வெறும் கோப்புகளில் மட்டும் உள்ளன.
போர்க்குற்றம் புரிந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ள ஐ.நா. அறிக்கைக்கு இலங்கை அரசு விரைவில் தனது விளக்கத்தை அளிக்கும் என தாம் நம்புகிறார் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா என்னிடம் தெரிவித்தார் என்றார்.
தமிழக முதல்வராக மூன்றாவது தடவை பதவி ஏற்ற ஜெயலலிதாவுக்கு ரணில் விக்கிரமசிங்க வாழ்த்துத் தெரிவித்துக் கொண்டார்.
அரச நிர்வாகமும், நேரமும் வாய்ப்பு அளித்தால் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து இலங்கைத் தமிழர்களின் இப்போதைய நிலைமை குறித்தும் இலங்கை அரசியலில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் குறித்தும் விளக்கம் அளிக்கத் தயாராக உள்ளார் எனவும் அவர் தெரிவித்தார்.
தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் அரசு மெத்தனப் போக்கு!: டில்லியில் ரணில்
பதிந்தவர்:
தம்பியன்
01 June 2011



0 Responses to தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் அரசு மெத்தனப் போக்கு!: டில்லியில் ரணில்