இலங்கை அரசு மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என தமிழக சட்டசபையில் முதலமைச்சர் ஜெயலலிதாவினால் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்பதாக கூட்டடைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் அவர்கள் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
இலங்கையில் உள்ள தமிழ் மக்களாகிய நாம் எமது சுயநிர்ணய உரிமையுடன் வாழ வேண்டும் என்பதற்காக ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக போராடி வருகிறோம். இலங்கை அரசு எமக்கு பல தடவைகள் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை மாறாக எமது உரிமைகளை நசுக்கிக்கொண்டே வருகின்றது.
கடந்த 2009 ம் ஆண்டு வன்னியில் இடம்பெற்ற உக்கிரமான யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதுடன் பல லட்சம் பேர் இடம்பெயர்ந்தார்கள். அவர்களின் வாழ்விடங்கள் தரைமட்டமாகி சொத்துக்கள் அழிக்கப்பட்ட நிலையில் இரண்டு வருடங்கள் கடந்தும் இன்னுமே அந்த மக்கள் இருப்பிடங்கள் இன்றி தங்களது மண்ணில் சுதந்திரமாக வாழ முடியாமல் இருப்பதைக் காணலாம்.
விடுதலைப் புலிகளை முற்றாக அழித்துவிட்டதாக இலங்கை அரசு அறிவித்ததன் பிற்பாடும் தொடர்ந்து இராணுவ ஆக்கிரமிப்புகள் தமிழர் பகுதிகளில் தொடர்வதுடன் தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்ச்சியாக பறிபோய்க்கொண்டேதான் இருக்கின்றன. இந்த நேரத்தில் ஐ.நா. சபையும் தமிழ் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும்படி கோரி அறிக்கை இட்டுள்ளது. இந்த அறிக்கையையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.
அத்துடன் தற்போது தமிழக சட்டசபையில் முதலமைச்சர் ஜெயலலிதாவினால் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்ட “இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்” என்ற தீர்மானத்தையும் வரவேற்பதுடன் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கு நன்றியையும் தெரிவித்துக்கொள்கின்றது.
மேலும் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களும் தமிழக மக்களும் இலங்கைத் தமிழ் மக்களுக்கு ஒரு நிரந்தரத் தீர்வைப் பெற்றுத்தர தொடர்ந்தும் பாடுபடவேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
முதல்வர் ஜெயலலிதாவின் தீர்மானத்திற்கு பா.அரியநேத்திரன் நன்றி தெரிவிப்பு
பதிந்தவர்:
ஈழப்பிரியா
09 June 2011



0 Responses to முதல்வர் ஜெயலலிதாவின் தீர்மானத்திற்கு பா.அரியநேத்திரன் நன்றி தெரிவிப்பு