தமிழ் மக்கள் தோல்வி அடைந்தவர்கள் என்ற நிலைமையிலேயே சிங்கள அரசு நோக்கி வருகின்றது. இந்த நிலை மாற வேண்டும். இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
பெல்ஜியம் நாட்டிலுள்ள புரூசெல்ஸ் நகரில் அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தில் நடைபெற்ற நிகழ்வில் நேற்று முன்தினம் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.
தமிழினப் படுகொலைகளைக் கண்டித்து ஐரோப்பிய பாராளுமன்ற இடதுசாரிக் கட்சிகளும் அனைத்துலக மக்கள் அவைகளின் ஏற்பாட்டிலும் ஒழுங்கு செய்யப்பட்ட இந்நிகழ்வு நேற்று முன்தினம் பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமானது.
இந் நிகழ்வில் தாயகத்தின் இன்றைய நிலைமைகள் தொடர்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் முன்னாள் எம். பி.யுமான செல்வராஜா கஜேந்திரன் உரைநிகழ்த்தினார்.
அவர் தனது உரையில் தெரிவித்ததாவது:
தாயகத்தில் இராணுவ அடக்கு முறையினால் தமிழ் மக்கள் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். அங்கு சிங்கள மயமாக்கல் என்றுமில்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது. மக்கள் தவறான பாதைக்கு வழி நடத்தப்படுகின்றனர்.
தமிழ் மக்கள் தோல்வி அடைந்தவர்கள் என்ற நிலைமையிலேயே சிங்கள அரசு நோக்கி வருகின்றது. இந்த நிலை மாற வேண்டும்.
சர்வதேச ரீதியிலான பக்கச் சார்பற்ற ஓர் விசாரணை நடத்தப்பட வேண்டும்.
நாம் இங்கு வந்த காரணத்தால் குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்படலாம். பழி வாங்கப்படலாம்.
இந்நிலையில் நாம் எமது மக்களுக்காக இவற்றை சந்திக்கவும் தயாராக உள்ளோம்.
தற்போதைய நிலையில் எமது தமிழ் மக்கள் ஒன்று பட்டு செயற்பட வேண்டியதே முக்கியமாகக் கருதப்படுகின்றது என்றார்.



0 Responses to தமிழ் மக்கள் தோல்வி அடைந்தவர்கள் இல்லை