இந்திய மத்திய அரசாங்கத்துடன் மட்டுமே இலங்கை அரசாங்கத்தின் இராஜதந்திரத் தொடர்புகள் நிலவுவதால் மாநில அரசாங்கங்கள் குறித்துக் கவலைப்படப் போவதில்லை என்று அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.
வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் முகமாக இன்று நடாத்தப்பட்ட ஊடகவியலாளர் மகாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திரத் தொடர்புகள் மிகவும் உயர்ந்த நிலையில் காணப்படுகின்றது. அந்த நட்புறவை பேணிக்கொண்டு இரு நாடுகளும் தத்தம் வழியில் தமது செயற்பாடுகளை முன்னெடுக்கின்றன.
இருநாடுகளுக்கும் தொடர்புபட்ட பிரச்சினைகளின் போதும் இரண்டு நாடுகளினதும் கௌரவம் பாதிப்புறாத வகையில் பரஸ்பர மரியாதையுடனேயே அரசாங்கங்களுக்கிடையிலான கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
அந்த வகையில் நாங்கள் இந்தியாவின் மத்திய அரசாங்கத்துடன் மட்டுமே எமது இராஜதந்திரத் தொடர்புகளை பேணிக் கொண்டிருக்கின்றோம். மாநில அரசாங்கங்களுடன் இராஜதந்திர ரீதியிலான தொடர்புகள் எமக்கில்லை.
அதன் காரணமாக ஏதாவது ஒரு கட்டத்தில் மாநில அரசாங்கமொன்றின் பிரதானிகளுடன் தொடர்புகொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டாலும் இந்திய மத்திய அரசாங்கத்தின் வழிகாட்டலின் பிரகாரமே அது மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மேலும் குறிப்பிட்டுள்ளார்.



0 Responses to இந்திய மத்திய அரசாங்கத்துடனேயே நாங்கள் தொடர்பு: கெஹலிய