ஈழத் தமிழர் பிரச்சினையில் திமுக தலைவர் கருணாநிதி உதட்டளவில் மட்டுமே ஆதரவு தெரிவித்தார் என்று "விக்கிலீக்ஸ்' இணையத்தளம் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் பணியாற்றிய அமெரிக்கத் தூதரக அதிகாரிள் தங்கள் நாட்டு அயலுறவுத் துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்த தகவலில் இது இடம்பெற்றுள்ளதாக விக்கிலீக்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
இலங்கை இறுதிக்கட்ட போரின் போது தமிழக அரசியல் கட்சிகள் வெறும் வார்த்தைகளால் மட்டுமே தங்களது கண்டனத்தைத் தெரிவித்தன. ஈழத் தமிழர்களுக்காக அந்தக் கட்சிகள் தெரிவித்த ஆதரவும் உதட்டளவில் மட் டுமே இருந்தது.
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளிப்பது தொடர்பான விவகாரத்தில் கருணாநிதி சாதுரியமான அணுகுமுறையைக் கடைப்பிடித்தார். கட்சித் தொண்டர்களையும், காங்கிரசையும் சமாதானப்படுத்தும் வகையில் அவர் நடந்து கொண்டார்.
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான அவரது கோரிக்கைகள்,வெறும் வார்த்தை ஜாலங்கள் மட்டுமே, அவர் உதட்டளவில் மட்டுமே பேசினார். மேலும் அவர் ஈழத் தமிழர்களுக்கு சாதகமாகப் பேசினாலும்,அவர்களுக்காக மத்திய அரசை எவ்விதத்திலும் நிர்ப்பந்திக்கவில்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள மற்றொரு செய்தியில் கடந்த 2009 ஆம் ஆண்டில், மன்மோகன் சிங்கிற்குப் பதிலாக, சோனியா பிரதமராக வேண்டும் என திமுக விரும்பியதாக கூறியுள்ளது. இது குறித்து அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த 2008 ஜூனில்,அமெரிக்க துணைத் தூதரக அதிகாரி டென்னிஸ் டி.ஹூப்பருடன் பேசிய, திமுக தலைவர் கருணாநிதிக்கு நெருக்கமான சிவப்பிரகாசம் என்பவர், "காங்கிரஸ் கட்சியின் உள்விவகாரத்தில் திமுக ஒரு போதும் தலையிடாது. இருந்தாலும், 2009 ம் ஆண்டில் மன்மோகன் சிங்கை விட, சோனியாவே பிரதமராக வேண்டும் என்பதில் திமுக விருப்பம் கொண்டிருந்தது.அதையே தமிழக மக்களும் விரும்பினார்கள்.
அதே நேரத்தில், பிரதமர் பதவியை ஏற்க, காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுலும் விரும்பவில்லை. கட்சியின் மூத்த தலைவரான பிரணாப் முகர்ஜி, பிரச்சனைகளைத் தீர்ப்பதில் வல்லவர் என்றாலும்,அவர் பிரதமராக வேண்டும் என வடமாநிலத்தவர் வேண்டுமானால் விரும்பலாம்.ஆனால் தென் மாநிலமக்கள் அவரை விரும்ப மாட்டார்கள் என்று கூறியுள்ளார்.
மேலும், திமுக தலைவர் கருணாநிதியை சென்னையில்,ஒரு காலகட்டத்தில் சந்தித்த மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அர்ஜுன் சிங்கும்,தான் பிரதமராக திமுக ஆதரவு தர வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
ஈழத் தமிழர்களுக்காக கருணாநிதி உதட்டளவில் மட்டுமே ஆதரவு தெரிவித்தார்: விக்கிலீக்ஸ்
பதிந்தவர்:
ஈழப்பிரியா
08 September 2011



0 Responses to ஈழத் தமிழர்களுக்காக கருணாநிதி உதட்டளவில் மட்டுமே ஆதரவு தெரிவித்தார்: விக்கிலீக்ஸ்