தஞ்சை தமிழ்த்தாய் அறக்கட்டளை, தமிழக தமிழ் அமைப்புகள் ஆகியவை இணைந்து இலங்கை தமிழர் ஆதரவு ஊர்திப் பயணத்தை தொடங்கியுள்ளன.
ராஜபக்ச மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தை மத்திய அரசு உடனே நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி, கன்னியாகுமரியில் தொடங்கிய இலங்கை தமிழர் ஆதரவு ஊர்திப்பயணம் நேற்று மதுரை வந்தது.
இலங்கைத் தமிழர்களை படுகொலை செய்ததற்காக, அதிபர் ராஜபக்சேயை போர்க்குற்றவாளியாக அறிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை செயல்படுத்த, மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்பது, இந்த ஊர்திப் பயணத்தின் நோக்கமாகும்.
இவர்கள் தங்கள் பயணத்தை கன்னியாகுமரியில் கடந்த 21 ந் தேதி தொடங்கினர். அங்கிருந்து, நாகர்கோவில், நெல்லை, கோவில்பட்டி, விருதுநகர், திருமங்கலம் வழியாக மதுரை வந்தனர்.
இந்த பயணக்குழுவின் தலைவராக முன்னாள் எம்.எல்.ஏ கோமுகி மணியன், செயலாளராக உடையார் கோயில் குணா (தமிழ்த்தாய் அறக்கட்டளை), ஒருங்கிணைப்பாளர்களாக பனப்பாக்கம் சீத்தா, ப.கோ.நாராயணசாமி, எசு.கே.மணி, செந்தில்தஞ்சை, புண்ணிய மூர்த்தி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இலங்கை தமிழர் நலன் காக்கவும், தமிழர்களை கொன்று குவித்த கொடுங்கோலன் ராஜபக்சே மீது போர்க்குற்றவாளி என்று குற்றம் சுமத்தி நடவடிக்கை எடுக்கவும், இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க இந்திய அரசை வலியுறுத்தியும், கச்சத்தீவை இந்திய அரசு மீட்க வேண்டும் என்ற நோக்கத்திலும் இந்த ஊர்திப்பணத்தை தொடங்கி உள்ளோம்.
நாங்கள் ஒவ்வொரு பகுதியாகச் செல்லும் போது அங்குள்ள தமிழ் ஆதரவாளர்களை சந்தித்து இலங்கை தமிழருக்காக போராட வேண்டும் என்று தெரிவித்தோம்.
எங்கள் பயணம் வருகிற 3ந் தேதி சென்னையில் முடிகிறது என்று இதன் அமைப்பாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
ராஜபக்ச மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்: தமிழர் ஆதரவு ஊர்திப் பயணம் மதுரை வருகை
பதிந்தவர்:
ஈழப்பிரியா
26 September 2011



0 Responses to ராஜபக்ச மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்: தமிழர் ஆதரவு ஊர்திப் பயணம் மதுரை வருகை