Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

திமுக தலைவர் கலைஞர் இன்று (20/10/2011) சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் நீண்ட நாட்களாக வாய்தா வாங்கிக் கொண்டிருந்த ஜெயலலிதா, உச்சநீதி மன்ற தீர்ப்புக்கு பிறகு இன்றைய தினம் பெங்களூரில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன?

இறுதியாக நீதிக்கு தலை வணங்கியிருக்கிறார்கள்.

குற்றவாளி என்ற அடிப்படையில் நீதி மன்றத்தில் ஆஜராகியிருப்பதை வைத்து, அவர் முதலமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டுமென்று நீங்கள் கேட்பீர்களா?

நான் கேட்க வில்லை. எதற்கெடுத்தாலும் ராஜினாமா செய்ய வேண்டுமென்று ஒவ்வொரு அறிக்கையிலும் ஜெயலலிதா பயன்படுத்துவதுதான் அந்த வார்த்தை. நான் அதைப் பயன்படுத்த விரும்ப வில்லை.

வழக்கிலே ஆஜராகாமல் நூற்றுக்கு மேல் வாய்தா வாங்கிக் கொண்டிருந்தாரே, நேற்றைய தினம் கூட உச்ச நீதி மன்றத்திற்கு சென்று நீதி மன்றத்திலே ஆஜராகாமல் இருப்பதற்கான முயற்சியில் ஜெயலலிதா ஈடுபட்டாரே, அதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?

நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருக்க வேண்டும் என்பது தான் காரணம். தற்போது நீதி மன்றம் வலியுறுத்தியிருக்கிறது. எனவே இன்று ஆஜராகியிருக்கிறார்.

கூடங்குளம் பிரச்சினையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலே இடம் பெற்றுள்ள நீங்கள் விலகிட வேண்டுமென்று கேட்டிருக்கிறார்களே?

தி.மு.க. மத்திய அரசிலே இடம் பெற்றிருக்கிறது. மத்திய அரசிலே மாநில கட்சிகளில் ஒன்று இடம் பெற்றிருந்தால், அதை விரும்பாதவர்கள் எந்த பிரச்சினை ஏற்பட்டாலும் உடனே மத்திய அரசிலிருந்து அக்கட்சி விலக வேண்டுமென்று தான் கேட்பார்கள்.

கூடங்குளம் பிரச்சினைக்காக போராடுகின்ற மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். அங்கேயுள்ள மக்களுக்கு எந்த ஆபத்தும் வராமல் பாதுகாக்கப்பட வேண்டும். அப்துல்கலாம் கூட ஆய்வு செய்வதாக சொல்லியிருக்கிறார். மக்களின் நன்மைக்காக மத்திய, மாநில அரசுகள் உதவிட முயற்சிக்க வேண்டும் என்பதில் இரண்டு கருத்துக்களுக்கு இடமில்லை.

திருச்சியிலே நடைபெற்ற இடைத்தேர்தல் நேர்மையாக நடந்திருப்பதாக நினைக்கிறீர்களா?

கே.என்.நேரு அதே தொகுதியில் கடந்த முறை 7 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பினை இழந்தார். தற்போது காலை கட்டிப் போட்டு விட்டு ஓட்டப்பந்தயத்தில் ஓட விடுவதைப் போல, நேருவை சிறையிலே போட்டு விட்டு இடைத்தேர்தலை நடத்தியவர்களின் வீரத்தைப் பாராட்டித் தான் ஆக வேண்டும். அந்த நிலையிலே கூட தற்போதுள்ள வாக்கு வித்தியாசத்தைப் பார்க்கும்போது, தி.மு.க.வுக்கு சாதகமாகத்தான் உள்ளது.

0 Responses to ஜெயலலிதா பயன்படுத்திய அந்த வார்த்தையை நான் பயன்படுத்த விரும்பவில்லை: கலைஞர்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com