Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சீனாவுக்கொரு சிம்மன சொப்பனம்- அமெரிக்காவின் ஆசைக்கனவு – அடுத்த உலக வல்லரசாக இந்தியா ! இது 1990களில் இந்தியாவுக்கான அமெரிக்கத் துணைத்தூதராக சென்னையில் பணிபுரிந்த முன்னாள் இராஜதந்திரியும் இந்நாள் வர்த்தகருமாகிய வில்லியம் எச்.எவரி அவர்களினால் எழுதப்பட்டுள்ள நூலொன்றின் முகப்பு.

இந்திய பதிப்பமொன்றின் ஊடே இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ள இந்த நூலில்…

‘இந்தியா தனது பாதுகாப்புச் செலவை அதிகரித்தாக வேண்டும்’
‘இலங்கையிலிருந்து சீனாவை வெளியேற்றியே ஆகவேண்டும்’
‘பனிப்போர்க்காலத்தில் சோவியத்யூனியன் பின்லாந்தைத் தன் காலுக்குக் கீழ் போட்டுக்கொண்டதுபோல் இந்தியாவும் இலங்கையை நசுக்கியே வைத்திருக்க வேண்டும்’


ஆகிய மூன்று விடயங்களை வில்லியம் எச்.எவரி முன்னிறுத்தியுள்ளார்.

இந்நூல் பல்வேறு ஊடகளின் கவனத்தையும் பெற்றுள்ளதோடு விவாதத்தையும் கிளப்பியுள்ளது.

இது தொடர்பிலான எதிர்வினையை முன்வைக்கின்றார் தெய்வேந்திரம் கந்தையா (கனடா) அவர்கள்.

எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றும் வில்லியம் எச்.எவரி அவருடைய புத்திக்குத் தட்டுப்படாத விவரம் ஏதாவது உளதோவெனில் அது ஈழத்தமிழர் பிரச்சினையை எப்படி முடிவுக்குக் கொண்டுவரலாம் என்பது தான்.

ஒரு வேளை, அவருடைய சித்தாந்தத்தின் அடிப்படையில் நோக்கும் போது, அப்படி ஒரு பிரச்சினை இல்லாமலும் இருக்கலாம். அது அவருக்கு மட்டும் தான் வெளிச்சம்!

1990 வாக்கில் சென்னையில் அமெரிக்காவின் துணைத் தூதராக இருந்தவரும் இப்போது ஒரு வர்த்தக ஆலோசகராக இருப்பவருமான திரு. வில்லியம் ஏவரி ‘சீனாவுக்கொரு சிம்மன சொப்பனம்- அமெரிக்காவின் ஆசைக்கனவு- அடுத்த உலக வல்லரசாக இந்தியா’ என்னும் நூலின் தலைப்பில் தென்படும் அகில உலக ரீதியான தாக்கத்தைக் கணக்கிலெடுத்து இந்த நூலை ஏதோ ஒரு பல்கலைக்கழக ஆராய்ச்சி மையம் தான் உருவாக்கத் தூண்டியிருக்கும் என்று எண்ணினீர்களேயானால் உங்கள் கதி அம்போ தான்!

திரு. ஏவரிக்குத் தேவையானதெல்லாம் தனக்குப் பணத்தை வாரி இறைக்கப் போகும் வர்த்தகப் பெருமக்களுக்கு வழிவகைகளை இலகுவாக்குவதென்பது தான்.! இதனை அவர் சாதிக்கப் போவதெல்லாம் தனது நூலை விழுந்து விழுந்து வாசிக்கப் போகும் இந்திய ஆளும் வர்க்கத்தினதும் அரசத்தலைமை நிர்வாகிகளதும் பேராசைகளுக்கும் அகங்காரத்துக்கும் தீனி போடுவதன் மூலம் தான்!

அதனால் தானோ என்னமோ, முன்னுக்குப்பின் முரணாக வாதாடுவதையோ தனது தேவைக்கேற்றபடி விவரங்களை மிகைப்படுத்தியோ, குறைப்படுத்தியோ அன்றில் பரபரப்பாக்கியோ எழுதும் பாணியை அவரால் தவிர்க்க முடியவுமில்லை – அவர் முயலவுமில்லை.

இவர், சென்னையில் அமெரிக்கத் தூதர் அலுவலகத்தில் பணிபுரிந்த காலத்தில் தான் இந்தியா கல்பாக்கத்தில் அணு உலை விரிவாக்கத்திலும் அணுகுண்டுச் சோதனையிலும் மும்முரமாக ஈடுபட்டதென்பதோ அதன் காரணமாகத்தான் தகராறு முற்றி அமெரிக்கா இந்தியா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க முற்பட்டு அதில் தோல்வியும் கண்டதென்பதோ, இன்னோரன்ன விவரங்கள் எவையுமே திருவாளர் ஏவரியின் புதிய பேராசைக்கு அணையேதும் போட்டதாகத் தெரியவில்லை.

இதோ, அவர் உதிர்த்த முத்துக்களையெல்லாம் ஒரு மாலையாகக் கட்டி எமது வாசக நேயர்களுக்குச் சமர்ப்பிக்கின்றோம்:

1) இந்தியா தனது தாராளப்பொருண்மியக் கொள்கைகளை கை விட்டுமுன்னர் போல்முக்கிய உள்நாட்டுத் துறைகளைப் பாதுகாக்கும்முயற்சிகளில்இறங்க வேண்டும். இந்தியா நவீனமான் பொருட்களை உருவாக்கிச் சந்தைப்படுத்தும் நவீன பொருளாதார வல்லரசாக மாற வேண்டுமேயாயின் அதற்கு இவ்வகையான முயற்சிகள் இன்றியமையாதவை. அவற்றைத் தவிர்த்து அமெரிக்கத் தொழில் நிறுவனங்களின் ஒப்பந்தத் தொழிற்பாட்டாளனொருவனாகத் தொழிற்படும் இந்திய மனநிலை மாறவேண்டும். இந்த அணுகுமுறை இந்தியாவை என்றென்றைக்கும் ஒரு குடியேற்ற நாடு போலத்தான் வைத்திருக்கப் போகிறது.முன்னை நாட்களில் இந்தியா ஒரு குடியேற்ற நாடாகத் திகழ்ந்தமைக்கும் இப்போதைய நிலைப்பாட்டுக்கும் இடையே உள்ள வேறுபாடு யாதோவெனில் அது இப்போது இந்தியா இதனை விரும்பி செய்கின்றதென்பதேயாம்.

2) இந்தியா பற்றிய அமொரிக்க வெளியுறவுக்கொள்கையானது என்றென்றைக்கும் புத்திசாலித்தனமாகத் தான் இருந்தது என்றுயாராலும் கூறிவிட முடியாது.

3) உலக அரங்கில் இந்தியாவின் பொருண்மியவளர்ச்சிக்குரிய அரசியல் பலத்தை இந்தியா இன்னமும் பெறவில்லை. உதாரணமாகச் சொல்லப்போனால் சீனவை எதிர்கொள்வதற்கான அரசியல் பலத்தை இந்தியா பெறவண்டுமேயாயின், இந்தியாவின் பாதுகாப்புச் செலவினம் பன்மடங்கு அதிகரித்தாக வேண்டும். அத்தோடமையாது அண்டை நாடுகள் மீதும் அது தனது பொருண்மியப் பலத்தை முழுவதாகக் காட்டியாகவேண்டும்.

4) உடனடியாகச் செய்யப்படவேண்டிய அரசியல் நடவடிக்கை ஒன்று இந்தியாவுக்குண்டு. பனிப்போர் நாட்களில் எப்படி சோவியத்யூனியன் பின்லாந்தை தன் கால்களின் கீழ் போட்டு நசுக்கியதோ அதே போல, இந்தியாவும் இலங்கையைத் தனது ஏவல் நாடாக மாற்றவேண்டும் என்பது தான் அது. அதன் உடனடி விளைவாக இனிமேல் எவரும் எந்தக் கட்டத்திலும் இந்தியாவின் அனுமதியின்றி இலங்கையில் தலையிட முடியாது என்ற நிலை உருவாக வேண்டும். எடுத்துக்காட்டாகச் சொல்லப்போனால், அம்பாந்தோட்டையில் சீனாவின் முயற்சியில் துறைமுகம் ஒன்று உருவாகும்போது இந்தியா பார்த்தும் வாளாவிருந்தது ஏற்புடைய செயலன்று.

இனி நாம் திருவாளர் ஏவரியின் இந்த முன்னுக்குப்பின்னான முரண்டுவாதங்களின் அடைப்படைகளயும், நோக்கங்களையும் விளைவுகளயும் ஒரு தடவை நோக்குவோம்.

திரு ஏவரி அவர்கள் இப்போது வர்த்தகத் துறையில் நிறுவனங்களுக்கு ஒரு ஆலோசகர் என்பதை நாம் மறந்து விடலாகாது. இந்தியா, தகவல் தொழில் நுட்பத்துறையில் அமெரிக்காவின் அடிமை நாடாக இருக்கக் கூடாது, அனால் அண்டை நாடுகளை நசுக்கும் ஏகாதிபத்தியமாக மாறவேண்டும், அதற்காகப் பாதுகாப்புச் செலவினத்தைக்கூட்டி மறுபடியும் அமெரிக்க ஆயுத நிறுவனங்களின் அடிமை நாடாக மாற வேண்டும் என்று முன்னுக்குப்பின் முரணான வாதங்களையெல்லாம் அவர் முன்வைப்பது தடுமாறிப் போயல்ல.

இந்திய அரச நிர்வாகிகளின் ஏகாதிபத்திய ஆசைக்கும் கமிஷன் பணப் பேராசைக்கும் ஒரே தடவையில் தூபமிடுவதன் மூலம் இந்தியாவை அமெரிக்க வர்த்தக நிறுவனங்களின் நிரந்தர வாடிக்கையாளராக மாற்றிவிடும் தனது தொலைநோக்கு உத்தியை வெகு சாதுர்யமாகத் திணிக்கின்றார் திரு ஏவரி அவர்கள். அதன் பின்விளைவாக இந்து சமுத்திரத்தில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் இடம்பெறப்போகும் பலப்பரீட்சையில் நசுங்கப்போவது சின்னஞ்சிறு அண்டை நாடுகள் தாம் என்பது அவருடைய மனச்சாட்சியை உறுத்தவேயில்லை என்பதுமட்டுமல்ல, அந்த மாதிரியான பின்விளைவை அவர் முழுமனதோடு விரும்புகின்றார் என்பது தான் கவலைக்குரிய விடயம்.

அடுத்ததாக இலங்கையைக் காலுக்குக் கீழ் போடும் அவருடைய கோட்பாட்டின் காரணமாகத் தமிழீழ மக்களின் வாழ்வில் இடம்பெறக்கூடிய அனர்த்தங்களையும் ஒரு தடவை நோக்குவோம்:

முதலில் நாம் கவனிக்க வேண்டியது இலங்கையில் தமிழ் மக்கள் வாழ்கின்றார்கள் என்பதோ அவர்களுக்குப் பிரச்சினைகள் உண்டு என்பதோ அவருடைய பூதக்கண்ணாடிக்குக் கீழ் அகப்படாத விவரங்களென்பதாகும். அவரைப் பொறுத்த வரைக்கும், அது ஒரு பாரதூரமான விவரமேயல்ல. ஏனெனில், இலங்கையானது முற்றிலும் ஒரேதன்மைத்தான ஒரு அரசியல்-பூகோள உருவாக்கம் என்ற அடிப்படையில் அணுகினாலே ஒழிய அவருடைய ‘காலால் நசுக்கும் சித்தாந்தம்’ வலுவற்றுப் போய்விடுகிறது.

அதனால் தான் திரு ஏவரியின் கனவில் வந்துபோகும் இலங்கைத்தீவில் இரு நாடுகள் என்ற பேச்சுக்கே இடமில்லை. அதுமட்டுமல்ல் அங்கே சமஷ்டித் தீர்வு போன்ற ஒரு பேச்சுக்குக் கூட இடமிருக்காது. ஏனெனில், கொழும்பில் நிலை கொண்டிருக்கும் ஏவற்பணி அரசொன்று இந்தியாவின் ஆஞ்ஞைகளைப் பருத்தித்துறையிலிருந்து தங்காலை வரையில் ஒரேவிதமான பாங்கில் நிறைவேற்றக் கூடியதாகவிருக்கும்.

இரண்டாவதாக, இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு என்று ஒன்று வந்தமைந்து விடக் கூடாது. இரு தனி நாடுகள் என்றோ, அன்றில் ஒரு சமஷ்டி தீர்வு என்றோ தீர்வு ஒன்று வந்து, இரு சாராரும் தத்தம் பொருண்மிய மேம்பாட்டுக்கென்று உழைக்கத் தொடங்கினால், அந்த நிலை முதலில் இந்தியாவின் பொருண்மிய ஆதிக்கத்துக்கு விழுந்த ஒரு அடியாகவே கருதப்படும். அத்தோடு தனது புதிய உற்பத்திகளைப் பரிசோதித்துப பார்க்கும் சந்தைத் தளமென்று ஒன்றும் அதற்கு இல்லாது போகும்.

மூன்றாவதாக உள்நாட்டில் அமைதியின்மையால் பணத்தையும், பலத்தையும் இழந்து பொருண்மியவளர்ச்சியையும் துறந்தாலே ஒழிய இந்தியாவின்காலின் கீழ் கிடந்து சுழலும் சிறிய அண்டை நாடென்ற நிலை இலங்கைக்கு வருவது அவ்வளவு எளிதன்று. இனவாதம் என்னும் நெருப்பு தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும்போது தமிழினத்தின் தற்காப்புச் சக்தியும் துடைத்தெறியப்பட்டு விட்டால், அந்நிலயில் இந்தியப்படைகளுக்கு தமது நவீன அமெரிக்க ஆயுதங்களைப் பரீட்சித்துப்பார்க்கும் இடையூறெதுமற்ற பரீட்சைக்களமாக இலங்கை மாறுவது தவிர்க்க முடியாதது.

சிங்கள மக்களின் கட்டுப்பாடற்ற இனவெறிக்குத் தூபம் போட்டுக்கொண்டிருக்கும் வரையில் அவர்கள் தன்னாட்சி, சுதந்திரம் பற்றியெல்லாம் அதிகம் அலட்டிக் கொள்ளப் போவதில்லை என்பது அவர்கள் மகிந்த ஆட்சியின் கீழ் நடந்துகொள்ளும் விதங்களிலிருந்து ஏற்கெனவே தெளிவாகிவிட்டது என்பதனால், இலங்கையைத் தக்கவைத்துக் கொண்டிருப்பதற்கான கொள்கை வகுப்பு என்பது இந்தியாவுக்கு ஒரு பொருட்டல்ல.

ஆக, மொத்தத்தில், முன்னுக்குப்பின் முரணாக வாதாடும் அனவருமே அதிகப் பிரசங்கிகளுமல்ல, முட்டாள்களுமல்ல. கருமமே கண்ணான மேதாவிகள் பலரும் அங்கேயும் இருக்கத் தான் செய்கிறார்கள். யாரென்ன சொன்னாலும், முடித்துவைக்கவென்று எடுத்த பணிகள் பல அவர்களுக்கும் இருக்கின்றன. அந்த வகையில் திரு ஏவரி அவர்களும் அடங்குகிறார் என்பது நாம் கவலையோடு உற்றுநோக்க வேண்டியதொன்று.

0 Responses to இலங்கையிலிருந்து சீனாவை வெளியேற்றியே ஆகவேண்டும்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com