அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் அடிவருடிகளாகச் செயற்படும் ஐ.நா., போர்க்குற்றச்சாட்டுகளிலிருந்து இலங்கையை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. போர்க்குற்றவாளி எனக் கூறப்படும் சவேந்திர சில்வாவுக்கு உயர் பதவிகளை வழங்கி, அழகுபடுத்திப் பார்ப்பதன் நோக்கமும் இதுவே என்று நவசமசமாஜக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
போர்க்காலத்தில் இலங்கைக்கு பக்கபலமாகவிருந்த இந்தியா, சீனா, அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் தற்போது இலங்கைக்கு எதிராகச் செயற்படுவதுபோல் நடிக்கின்றன.
அறிக்கைகளை விடுவதுடன் இந்நாடுகளின் நடவடிக்கைகள் முடிவடைந்துவிடும் என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.
ஐ.நா. செயலாளர் நாயகத்தின் அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்கான சிறப்பு ஆலோசனைக் குழுவின் தலைவராக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பாகக் கருத்து வெளியிடும்போதே நவ சமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளரும், தெஹிவளை கல்கிஸை மாநகரசபை உறுப்பினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ண மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
இறுதிப் போரின்போது தமிழர்களின் இரத்தம் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடியபோதும், இலங்கைக்கு அனைத்து வகையிலும் அமெரிக்கா, இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் உதவின.
இவ்வாறான குணவியல்புகளைக்கொண்ட இந்நாடுகள் இலங்கைக்கு எதிராக ஒருபோதும் செயற்படாது என்பதே எமது கருத்தாகும்.
ஐ.நா. சபை கூட இன்று அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகின் அடிவருடிகளாகச் செயற்படுகின்றது.
இலங்கையை போர்க்குற்றச்சாட்டுகளிலிருந்து பாதுகாக்கும் நோக்குடனேயே போர்க்குற்றவாளி எனக் கூறப்படும் சவேந்திர சில்வாவுக்கு பதவிகளை வழங்கி, ஐ.நா. அழகுபடுத்திப் பார்க்கின்றது.
தமிழர்களுக்குத் தமது உரிமைகளை வென்றெடுப்பதற்குத் தற்போதுள்ள ஒரு வழி அஹிம்சை வழியிலான போராட்டங்களே. அதனை விரைவில் முன்னெடுக்க தமிழ்த் தலைமைகள் தயாராகவேண்டும் என்றார் அவர்.
போர்க்குற்றவாளி சவேந்திர சில்வாவுக்கு உயர் பதவி! இலங்கையைக் காக்க ஐ.நா.முயற்சி
பதிந்தவர்:
தம்பியன்
30 January 2012



0 Responses to போர்க்குற்றவாளி சவேந்திர சில்வாவுக்கு உயர் பதவி! இலங்கையைக் காக்க ஐ.நா.முயற்சி