புதுக்கோட்டையில் நடந்த எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா பொதுக்கூட்ட மேடையில் அமர்ந்திருந்த அமைச்சர் சுப்பிரமணியனை பார்த்து கட்சி தொண்டர்களுக்கு நல்லது, கெட்டதுக்கெல்லாம் உதவாத நீயெல்லாம் மினிஸ்ட்டரா இருப்பதற்கு லாயக்கற்றவன் என, மகளிர் அணியை சேர்ந்த சோனா என்பவர், ஆவேசம் பொங்க ஒருமையில் திட்டிய சம்பவம், அ.தி.மு.க.,வினரை அதிர்ச்சியடையச் செய்தது.
புதுக்கோட்டை டவுன் சின்னப்பா பூங்காவில், அ.தி.மு.க., சார்பில் எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. நகர்மன்றத் தலைவர் கார்த்திக் தொண்டைமான் தலைமை வகித்தார். நகரச் செயலர் பாஸ்கர் வரவேற்றார். கூட்டத்தில், தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் பேசியதாவது:
இந்த இயக்கத்தை எந்த வகையிலாவது சீர்குலைக்க வேண்டும் என துரோகிகள் முயன்ற போது அதையெல்லாம் முறியடித்து, அ.தி.மு.க.,வை தாயுள்ளத்தோடு காத்து வருகிறார் ஜெயலலிதா. இலங்கை தமிழர் பிரச்னை, முல்லைப் பெரியாறு அணை பிரச்னையிலும் சரி தமிழக மக்களின் உரிமையை அடகு வைத்து அநீதி இழைத்தவர் தான் கருணாநிதி என்பதை அனைவரும் உணர வேண்டும்.
இப்படிப்பட்ட அரசியல்வாதிகளை நீங்கள் புறக்கணிக்க வேண்டும். தமிழக மக்களின் நலனையே உயிர் மூச்சாகக்கொண்டுள்ள முதல்வர் ஜெயலலிதாவை நீங்கள் ஆதரிக்க வேண்டும். இவ்வாறு பேசிவிட்டு அமைச்சர் சுப்பிரமணியன் இருக்கையில் அமர்ந்தார்.
திடீரென்று மேடையின் அருகில் வந்த புதுக்கோட்டை நகர மகளிர் அணி நிர்வாகிகளில் ஒருவரான சோனா, அமைச்சரை பார்த்து கைவிரலை நீட்டி, ""நீ, தொண்டர்களை பார்ப்பதும் இல்லை; மதிப்பதும் இல்லை. நல்லது கெட்டதுக்கெல்லாம் உதவுவதுமில்லை. நீயெல்லாம் மினிஸ்டரா இருப்பதற்கே லாயக்கில்லை. புதுக்கோட்டைக்கு வந்தா கூட, கட்சி ஆபீசை எட்டி பார்ப்பதில்லை. வீட்டில் உட்கார்ந்து, வேண்டப்பட்டவர்களை மட்டும் பார்த்துவிட்டு போற உன்னை பற்றி அம்மாவிடம் புகார் சொல்லி, மினிஸ்டர் பதவியை காலி செய்றேன் பாரு,'' என, ஆவேசத்துடன் ஒருமையில் பேசினார்.
அதிர்ச்சியடைந்த அமைச்சர் சுப்பிரமணியன் போம்மா, போம்மா'' என சொல்லி, பலத்த குரலில் எச்சரித்தார். நிலமையை உணர்ந்து கொண்ட மகளிர் போலீசார், மேடை அருகிலிருந்து சோனாவை அப்புறப்படுத்தினர். பொதுக்கூட்ட மேடையில் அமைச்சரை மகளிர் அணி நிர்வாகி சோனா, ஒருமையில் வசைமாரி பொழிந்து எச்சரித்த சம்பவம், அங்கிருந்த அமைச்சர் ஆதரவாளர்கள் மற்றும் அ.தி.மு.க.,வினரை அதிர்ச்சியடையச் செய்தது.



0 Responses to நீயெல்லாம் ஒரு மினிஸ்டரா? என கேட்ட மகளிரணி பிரமுகர்