Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஈழத் தமிழர் தேசம் இறைமையினைத் தனது கைகளில் மீண்டும் எடுக்கும். அது வரை எமது உரிமைப் போரரட்டம் ஓயப் போவதில்லை. இதுவே சிங்கள பேரினவாத ஆட்சியாளர்களுக்கு ஈழத் தமிழர் சார்பில் நாம் விடுக்கும் உறுதியான செய்தி என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.ருத்திரகுமாரன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்து, சிங்கள பௌத்த மேலாதிக்க நிலையில் தனது சுதந்திர நாளை சிங்கள தேசத்துக்கு கொண்டாடி வரும் நிலையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.ருத்திரகுமாரனால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் முழுவிபரம் பின்வருமாறு,

இன்று சிங்கள தேசம் தனது 64 வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது. பிரித்தானியரிடமிருந்து தான் பெற்றுக் கொண்ட சுதந்திரத்தை கொண்டாடும் முகமாக சுதந்திரதின ஏற்பாடுகளைச் செய்து மகிழ்கிறது.

ஒரு தேசம் என்ற வகையில் சிங்கள தேசம் தனது சுதந்திரத்தைக் கொண்டாடுவதற்கு உரிமை உடையதுதான். தனது தேசத்தின் விடுதலையை மட்டும் சிங்கள தேசம் கொண்டாடுமாயின் அதை நாம் ஆட்சேபிப்பதற்கு எதுவும் இல்லை. அயல் நாடாக இருந்து வாழத்துக் கூறுவதற்கும் ஈழத் தமிழர் தேசம் தயாராகவே உள்ளது.

ஆனால், சிங்கள தேசம் கொண்டாடுவது தனது சுதந்திரத்தை மட்டுமல்ல. ஈழத் தமிழர் தேசத்தை தனது ஆளுகையின் கீழ் ஆக்கிரமித்துக் கொண்ட நாளாகவும்தான் இன்றைய தினத்தைக் கருதுகிறது. இதற்காகவும்தான் கொண்டாட்டங்களை நடாத்துகிறது.

இதனால்தான், சிங்களம் கொண்டாடும் இந்த சுதந்திர நாள் ஈழத் தமிழர் தேசத்துக்கு கரிநாளாகிறது. தனது விடுதலைக்காய்ப் போராடுவதற்கு ஓரு மனதுடன் உறுதி பூணும் நாளாவும் அமைகிறது. ஈழத் தமிழர் தேசம் தனது இறைமையினை சிங்கள தேசத்திடம் தாரை வார்த்துக் கொடுக்கத் தயாராக என்றும் இருந்ததில்லை.

பறிக்கப்பட்ட தனது இறைமையினை மீளத் தனது கரங்களில் எடுத்துக் கொள்வதற்கான போரட்டங்களைத் தான் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது. தேசியத்தலைவர் தலைமையில் தமிழர்களின் நடைமுறை அரசு அமைக்கப்பட்டதன் ஊடாக ஈழத் தமிழர் தேசம் தனது இறைமையினை மீண்டும் தனது கைகளில் எடுத்துக் கொண்ட நிகழ்வையும் வரலாறு பதிவு செய்து வைத்திருக்கிறது.

சிறிய தேசங்களின் இறைமையை விடவும், நீதி, நியாயம் தர்மத்தை விடவும் பலமிக்க அரசுகளின் நலன்களே இன்று வரலாற்றுச் சக்கரத்தைச் சுழற்றும் ஒரு சர்வதேச ஒழுங்கு சிங்கள தேசத்துக்கு வாய்ப்பாக அமைய ஈழத் தமழர் தேசத்தின் இறைமையை சிங்கள தேசம் மீண்டும் இராணுவ ஆக்கிரமிப்பின் ஊடாகப் பறித்தெடுத்துக் கொண்டது.

கடந்த 64 ஆண்டுகாளக ஈழத் தமிழர் தேசத்தின் தன்னாட்சி உரிமையினை சிங்கள அரசு மறுத்து வருகிறது. தமிழர் தேசத்தின் மீது திட்டமிட்ட முறையில் இன அழிப்பை மேற்கொண்டு வருகிறது. சிங்களம் ஆட்சி அதிகாரத்தை தனது கையில் எடுத்துக் கொண்ட நாளில் இருந்து இலங்கைத் தீவின் வரலாற்றுப் பக்கங்கள் எல்லாம் சிங்களத்தின் இன அழிப்பு முயற்சிகளால் நிரம்பிக் கிடக்கிறது.

நில ஆக்கிரமிப்பாக, குடியுரிமைப் பறிப்பாக, கல்வி, தொழில் வாய்ப்புப் புறக்கணிப்பாக, பண்பாட்டுச் சிதைப்பாக, காலத்துக்காலம் நடைபெற்று வந்த படுகொலைகளாக இவை எல்லாற்றுக்கும் சிகரம் வைப்பது போல வன்னி இறுதிப்போரில் நாகரீக உலகம் வெட்கித் தலைகுனியும் வகையில் நடாத்தப்பட்ட இனப்படுகொலையாக, சிங்களத்தின் கொடும் நாக்கு தமிழ் மக்களைத் தொடர்ச்சியாகத் தீண்டியே வருகிறது.

தற்போது போரில் இராணுவரீதியில் வெற்றி கொண்ட மமதையில் ஈழத் தமிழர் தேசத்தின் மீதான ஆக்கிரமிப்பைத் சிங்களம் தீவிரப்படுத்தி வருகிறது. ஈழத் தமிழர் தேசத்தினைக் கரைத்துச் சிதைக்க முயல்கிறது.

இத்தகைய ஒரு சூழலில், சிங்கள தேசத்தின் சுதந்திர நாளாகிய இன்று நாம் சிங்கள தேசத்தின் இனவாத ஆட்சியாளர்களுக்கு ஒரு செய்தியினைத் தெளிவாகக் கூற விரும்புகிறோம். >ஈழத் தமிழர் தேசம் தனது இறைமையினைத் தனது கைகளில் மீண்டும் எடுக்கும். அது வரை எமது உரிமைப் போரரட்டம் ஓயப் போவதில்லை, இதுவே சிங்கள பௌத்த பேரின ஆட்சியாளர்களுக்கு ஈழத் தமிழர் தேசம் சார்பில் நாம் விடுக்கும் உறுதியான செய்தியாகும்.

உங்கள் இராணுவ ஆக்கிரமிப்பும் படையெடுப்பும் நமது தேசத்தின் நிலங்களை எம்மிடம் இருந்து பறித்தெடுத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் நமது மக்களின் மனதை உங்களால் வெற்றி பெற முடியாது. உங்களால் மட்டுமல்ல எந்த ஆக்கிரமிப்பாளர்களாலும் நமது மக்களை வெற்றி கொள்ள முடியாது.

நமது மக்களின் மனங்களை உங்களால் வெற்றி கொள்ள முடியாதவரை நீங்கள் ஆக்கிரமிப்பாளர்களே. என்றோ ஒரு நாள் நமது மண்ணை விட்டு வெளியேற வேண்டியவர்களே.

இன்று ஈழத் தமிழர் தேசத்தை ஆக்கிரமித்துக் கொண்டதையும் நீங்கள் கொண்டாடும் இவ்வேளையில் உங்கள் ஆக்கிரமிப்பு இராணுவத்தை ஈழத் தமிழர் தேசத்தின் தாயகப்பூமியில் இருந்து வெளியேறுமாறு இன்றைய தினத்தில் நாம் கோருகிறோம்.

சிங்கள தேசத்தின் முற்போக்காளார்களுக்கும் உலக சமுதாயத்துக்கும் நீதியின் அடிப்படையில் ஈழத் தமிழர் தேசத்தின் விடுதலைக்காக உரத்துக் குரல் எழுப்புமாறும் இன்றைய நாளில் நாம் அறைகூவல் விடுக்கிறோம் என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to ஈழத் தமிழர் தேசம் இறைமையினைக் கையிலெடுக்கும் வரை ஓயாது உரிமைப் போராட்டம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com